19ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (5) நடைபெற்ற போட்டியில் முன்னாள் சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸை வெளுத்துகட்டிய நடப்பு சம்பியன் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 43 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
ஐந்து தடவைகள் சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் இந்த வருடம் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து அணிகள் நிலையில் கடைசி இடத்தில் இருக்கிறது.
அதேவேளை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ச்சியாக 3அவது வெற்றியை ஈட்டி அணிகள் நிலையில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
மேலும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஈட்டிய 4ஆவது நேரடி வெற்றி இதுவாகும்.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 250 ஓட்டங்களைக் குவித்தது.
இது இந்த வருட ஐபிஎல் போட்டி ஒன்றில் அணி ஒன்றினால் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும்.
தேவ்டத் படிக்கல் (50), அணித் தலைவர் ரஜாத் பட்டிதார் (48 ஆ.இ.) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
டிம் டேவிட் 25 பந்துகளில் 3 பவுண்டறிகள், 8 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 70 ஓட்டங்களை விளாசியதுடன் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில ரஜாத் பட்டிதாருடன் 35 பந்துகளில் 99 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 19.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 207 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
துடுப்பாட்டத்தில் சர்பராஸ் கான் (50), ப்ரஷாந்த் வியர் (43), ஜமி ஓவர்ட்டன் (37) ஆகிய மூவரே ஓரளவு திறமையை வெளிப்படுத்தினர்.
பந்துவீச்சில் புவ்ணேஷ்வர் குமார் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அபினந்தன் சிங் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
The post சென்னை சுப்பர் கிங்ஸை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு வெளுத்துக்கட்டியது appeared first on Vanakkam London.