4
இந்தியாவில் நடைபெற்றுவரும் 19ஆவது ஐபிஎல் அத்தியாயத்தில் முதலாவது சதத்தை ரி20 உலகக் கிண்ண ஹீரோ சஞ்சு செம்சன் குவிக்க, முன்னாள் சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் முதலாவது வெற்றியை ஈட்டியது.
டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக சென்னை, சேப்பாக்கம் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (11) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 23 ஓட்டங்களால் சென்னை சுப்பர் கிங்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை அதேவேளை நடப்பு பருவத்தில் முதலாவது வெற்றியை ஈட்டிக்கொண்டது.
தனது முதல் 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்த சென்னைக்கு இந்த வெற்றி புத்தூக்கத்தை கொடுத்திருக்கும் என்பது உறுதி.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 212 ஓட்டங்களைக் குவித்தது.
சஞ்சு செம்சன் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 56 பந்துகளில் 15 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 115 ஓட்டங்களைக் குவித்தார்.

தனது சக ஆரம்ப வீரர் அணித் தலைவர் ரூத்துராஜ் கய்க்வோட் 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் (62 – 1 விக்.), 19 வயதுக்குட்பட்ட உலக சம்பியன் அணித் தலைவர் அயுஷ் மஹாத்ரேயுடன் இரண்டாவது விக்கெட்டில் சஞ்சு செம்சன் 113 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டார்.

18 வயதுடைய அயுஷ் மஹாத்ரே 59 ஓட்டங்களைப் பெற்று சுயமாக ஆட்டம் இழந்தார்.
ஷிவம் டுபே 20 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 189 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
சீரான இடைவெளிகளில் விக்கெட்களை இழந்த டெல்ஹி கெப்பிட்டல்ஸ் சார்பாக ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க (41), ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (60) ஆகிய இருவரே திறமையாகத் துடுப்பெடுத்தடினர்.
பந்துவீச்சில் ஜெமி ஓவர்ட்டன் 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அன்ஷுல் கம்போஜ் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: சஞ்சு செம்சன்