சென்னை: பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி, அண்ணாமலை படத்தை கழிவறையில் ஒட்டி திமுகவினர் செய்யும் அரசியல் கீழ்த்தரமானது. தமிழகத்தில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் ஊழலை அமலாக்கத்துறை அம்பலப்படுத்தியதை தொடர்ந்து தமிழகம் முழுக்க ஜனநாயக வழியில் பாஜகவினர் நடத்திய போராட்டத்தை திமுக அரசு காவல்துறையை கொண்டு, சட்டத்துக்கு புறம்பாக பல்வேறு அராஜக வழியில், அடக்க முயற்சித்து தோற்றுவிட்டது.
டாஸ்மாக் ஊழலை தட்டி கேட்ட பாஜகவினரை, கொடுமைப்படுத்தும் காவல்துறையை கண்டித்து, காவல்துறையின் பொறுப்பு அமைச்சராக உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து தமிழகம் முழுக்க டாஸ்மாக் கடைகளின் வாசலில் முதல்வரின் படத்தை ஒட்டும் போராட்டத்தை மகளிர் அணியினர் நடத்தினார்கள்.
காவல்துறையின் கடும் கெடுபிடிகளிலும் மனம் தளராமல் ஊழலை எதிர்த்து பாஜக தொடர்ந்து போராடி வருகிறது. தமிழகத்துக்கு பல லட்சம் கோடி திட்டங்களை அளித்து தமிழகத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் பிரதமர் மோடி, தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு குரல் கொடுத்து, மக்களின் உரிமைகளுக்காக பாடுபட்டு அரசியல் சேவை செய்யும் அண்ணாமலை புகைப்படத்தை ஆண்கள் கழிவறையில் ஒட்டி கேவலப்படுத்துவது தான் பேரறிஞர் அண்ணா உங்களுக்கு கற்றுக் கொடுத்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அரசியலா? வெகு விரைவில் சென்னை மாநகராட்சி கழிவறை ஒப்பந்த ஊழல் வெளிச்சத்துக்கு வரவுள்ளது.