• Sun. May 4th, 2025

24×7 Live News

Apdin News

சென்னை – ராஜஸ்தான் அதிவிரைவு ரயில் சேவை தொடக்கம் | கால அட்டவணை விவரம் | Chennai – Rajasthan High Speed ​​​​Train Service Launched – Time Table Details

Byadmin

May 4, 2025


சென்னை சென்ட்ரல் – ராஜஸ்தான் மாநிலம் பகத் கீ கோதி அதி விரைவு ரயில் சேவையை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் 1,300 ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த மார்ச் மாதம் சென்னைக்கு வந்திருந்தார். அப்போது, தமிழகத்தில் வாழும் ராஜஸ்தான் மக்கள் அவரை சந்தித்து, சென்னை சென்ட்ரல் – ராஜஸ்தான் இடையே கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனர். இந்த கோரிக்கையை ரயில்வே வாரியம் பரிசீலித்து, சென்னை சென்ட்ரல் – ராஜஸ்தான் மாநிலம் பகத் கீ கோதி இடையே புதிய அதிவிரைவு ரயில் இயக்க ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், புனே – ஜோத்பூருக்கு புதிய ரயில் சேவையை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது, சென்னை சென்ட்ரலில் இருந்து, ராஜஸ்தான் மாநிலம் பகத் கீ கோதிக்கு செல்லும் அதிவிரைவு ரயில் சேவையையும் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். மத்திய கலாச்சார, சுற்றுலா துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தும் இதில் பங்கேற்றார். இதையடுத்து, சென்னை சென்ட்ரலில் இருந்து புதிய ரயில் ராஜஸ்தானுக்கு புறப்பட்டு சென்றது.

நிகழ்ச்சியில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசும்போது, “இதுவரை இல்லாத அளவுக்கு ரயில்வே துறைக்கு கடந்த 10 ஆண்டுகளில் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். நாடு முழுவதும் 1,300 ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன. ரயில்வே அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி செல்லும் வகையில், தொழில்நுட்பம் மற்றும் பயணிகளுக்கான மேம்பாட்டு வசதிகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.

மும்பையில் இருந்து காணொலி வாயிலாக பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசும்போது, ‘‘தமிழக மக்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை ரயில்வே உடனடியாக நிறைவேற்றி வருகிறது. தமிழக ரயில் திட்டங்களுக்கு, 2014ம் ஆண்டைவிட, தற்போது 10 மடங்கு நிதி அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே திட்டங்கள் விரைவாக நிறைவேற்றப்படுகின்றன. ரூ.3,000 கோடியில் 77 ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்துக்கு 9 புதிய ரயில் பாதை திட்டங்கள் தரப்பட்டுள்ளன’’ என்றார்.

சென்னை சென்ட்ரலில் நடந்த நிகழ்ச்சியில், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர், சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்ட்ரல் – பகத் கீ கோதி இடையே வழக்கமான சேவை நாளை (மே 5) முதல் தொடங்குகிறது. சென்ட்ரலில் இருந்து திங்கள், செவ்வாய் வியாழன், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் (வாரத்தில் 5 நாட்கள்) இரவு 7.45 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் (20625), 3-வது நாள் பகல் 12.15 மணிக்கு பகத் கீ கோதியை சென்றடையும். மறுமார்க்கமாக, ராஜஸ்தான் மாநிலம் பகத் கீ கோதியில் இருந்து திங்கள், புதன், வியாழன், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் காலை 5.30 மணிக்கு அதிவிரைவு ரயில் (20626) புறப்பட்டு, மறுநாள் இரவு 11.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மே 7-ம் தேதி முதல் இதன் வழக்கமான சேவை தொடங்குகிறது.



By admin