படக்குறிப்பு, சர்வதேச வானிலை ஆய்வு அமைப்பும் வேறு சில வானிலை அமைப்புகளும் இணைந்து வகுத்த வழிமுறைகளின்படி இந்தப் பெயர்கள் வைக்கப்படுகின்றன. (கோப்புப்படம்)
(கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான இந்தக் கட்டுரை தற்போது மறுபகிர்வு செய்யப்படுகிறது)
மலேசியா மற்றும் இந்தோனீசியா அருகே உருவான ‘சென்யார்’ புயல் இன்று காலை இந்தோனீசியாவில் கரையைக் கடந்தது. அடுத்த 24 மணிநேரத்தில் இந்தப் புயல் வலுவிழந்து மேற்கு நோக்கி நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதோடு, வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகத் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மேலும் தீவிரமானால் புயலாகவும் மாறலாம் என வானிலை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேபோலக் கடந்த அக்டோபர் மாதம் வங்கக் கடலில் உருவான மோன்தா புயல் ஆந்திராவில் கரையைக் கடந்தது. ஒவ்வொரு புயல் உருவாகின்ற போதும் அதன் பெயர் பற்றிய விவாதங்கள் சமூக ஊடகங்களில் எழுப்பப்படுகின்றன. ஆனால் இதன் பின்னுள்ள வழிமுறை மிகவும் சுவாரஸ்யமானது.
புயல்களுக்கு இப்படிப் பெயரிடும் வழக்கம் 2004ஆம் ஆண்டில் தொடங்கியது. பல்வேறு நாடுகள் இணைந்து தயாரிக்கும் ஒரு பொதுப் பட்டியலின் அடிப்படையில் இந்தப் பெயர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
புயலுக்குப் பெயரிடும் நாடுகள் எவை?
உலக அளவில் வெப்பமண்டல சூறாவளிகள் குறித்த அறிவுரைகளை வழங்குவது, அவற்றுக்குப் பெயர் சூட்டுவது ஆகிய அதிகாரம், பகுதியளவில் தனித்தன்மை வாய்ந்த ஆறு வானிலை மையங்களுக்கும் பகுதியளவிலான வெப்பமண்டல சூறாவளி எச்சரிக்கை மையங்கள் ஐந்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பிராந்திய அளவில் தனித்தன்மை வாய்ந்த ஆறு வானிலை மையங்களில் ஒன்றாக இந்திய வானிலை ஆய்வு மையம் திகழ்கிறது. (கோப்புப் படம்)
பிராந்திய அளவில் தனித்தன்மை வாய்ந்த ஆறு வானிலை மையங்களில் ஒன்றாக இந்திய வானிலை ஆய்வு மையம் திகழ்கிறது.
உலக அளவிலான வானிலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆசிய – பசிஃபிக் பகுதிகளுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் கீழ் அதன் உறுப்பு நாடுகளான வங்கதேசம், இந்தியா, இரான், மாலத்தீவு, மியன்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், செளதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் ஆகிய 13 நாடுகளுக்கான வெப்பமண்டல சூறாவளி மற்றும் புயல் உருவாக்கம் குறித்த அறிவுரைகளை வழங்கும் மையமாக இந்திய வானிலை ஆய்வு மையம் விளங்குகிறது.
டெல்லியில் இருந்து செயல்படும் தனித்தன்மை வாய்ந்த இந்திய வானிலை மையம், வங்காள விரிகுடா, அரபிக் கடல் ஆகிய இந்திய பெருங்கடலின் வடக்குப் பகுதியில் உருவாகும் வெப்பமண்டல புயல்களுக்குப் பெயர் சூட்டும் அதிகாரம் பெற்றதாக விளங்குகிறது.
பட மூலாதாரம், IMD
படக்குறிப்பு, புயல்களுக்குப் பெயரிடும் இந்த வழக்கம் 2004ஆம் ஆண்டில் தொடங்கியது.
எதற்காக புயல்களுக்கு பெயர் வைக்கப்படுகிறது?
வெப்பமண்டல புயல்களுக்கு பெயர் சூட்டுவதென்பது பல்வேறு காரணங்களுக்காக மேற்கொள்ளப்படுகிறது. அவை,
அறிவியல் துறையைச் சார்ந்தவர்கள், பேரழிவுக் கால நிர்வாகத்தை மேற்கொள்வோர், ஊடகத் துறையினர், பொதுமக்கள் ஆகியோர் ஒவ்வொரு சூறாவளியையும் தனித்து அடையாளம் காண்பது
அத்தகைய சூறாவளி எவ்வாறு உருப்பெற்று வருகிறது என்பதைப் பற்றிய புரிதலை உருவாக்குவது
ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரே நேரத்தில் உருவாகக் கூடுமானால் அவை குறித்த குழப்பத்தை அகற்றுவது
ஒவ்வொரு வெப்பமண்டல சூறாவளியையும் எளிதாக நினைவில் கொள்வது
மக்களுக்கு விரிவான எச்சரிக்கைகளைத் துரிதமாக வழங்குவது
பொதுவாக, அரபிக் கடல், வங்காள விரிகுடா, இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கான பெயர்களை 13 உறுப்பு நாடுகள் இணைந்துதான் வைக்கின்றன.
சர்வதேச வானிலை ஆய்வு அமைப்பும் வேறு சில வானிலை அமைப்புகளும் இணைந்து வகுத்த வழிமுறைகளின்படி இந்தப் பெயர்கள் வைக்கப்படுகின்றன.
புயலுக்கு பெயர் வைக்க உள்ள நிபந்தனைகள்
இந்த நாடுகள் பரிந்துரைக்கும் பெயர்களுக்கு சில நிபந்தனைகள் உள்ளன.
புயலின் பெயரில் எவ்வித அரசியல், அரசியல் பிரபலங்களின் பெயர்கள், கலாசாரம், மத நம்பிக்கை, இனம் போன்றவை பிரதிபலிக்கக் கூடாது.
உலக அளவில் வாழும் மக்களில் எவருடைய உணர்வையும் காயப்படுத்தும்படி பெயர் இருக்கக்கூடாது
மிகவும் கொடூரமானதாக பெயர் இருக்கக்கூடாது
சிறியதாகவும், உச்சரிக்க எளிதாகவும் யாரையும் காயப்படுத்தாத வகையிலும் பெயர் இருக்க வேண்டும்
பெயரின் அளவு அதிகபட்சமாக 8 எழுத்துகளில் இருக்க வேண்டும்
பரிந்துரைக்கப்படும் பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட நாடுகள் குறிப்பிட்டிருக்க வேண்டும்
பரிந்துரைக்கப்படும் பெயரை நிராகரிக்க 13 நாடுகளின் வானிலை ஆய்வு நிபுணர் குழுவுக்கு உரிமை உண்டு
பெயர் சூட்டல் அமல்படுத்தப்படும் முன்பாகக்கூட அதை மறு ஆய்வுக்கு உள்படுத்த அந்தக் குழுவுக்கு அதிகாரம் உண்டு
ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பெயர்கள், மீண்டும் வைக்கப்படக்கூடாது.
பட மூலாதாரம், RSMC
இந்த நிபந்தனைகள் அடிப்படையில் ஒரு நாடு தலா 13 பெயர்களைப் பரிந்துரைக்கலாம். இந்தப் பெயர்கள் சுழற்சி முறையில் ஆங்கில அகர வரிசைப்படி பயன்படுத்தப்படும்.
அந்த வரிசையில் சென்யாரை தொடர்ந்து இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகும் அடுத்த புயலுக்கு திட்வா (Ditwah) எனப் பெயர் வைக்கப்பட உள்ளது. இந்தப் பெயரை ஏமன் பரிந்துரைத்துள்ளது.
பொதுவாக, தென் பசிஃபிக், இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்படும் கடல் சீற்றத்தின் தீவிரம் “புயல்” (Cyclone) எனவும், வடக்கு அட்லான்டிக், மத்திய வடக்கு பசிஃபிக், கிழக்கு வடக்கு பசிஃபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்படும் கடல் சீற்றத்தின் தீவிரம் “சூறாவளி” (Hurricane) என்றும் அழைக்கப்படுகிறது.
வடமேற்கு பசிஃபிக் பெருங்கடலில் ஏற்படும் சீற்றத்தின் தீவிரம் “கடும் புயல்” (Typhoone) என்று வானிலை ஆய்வக நிபுணர்களால் அழைக்கப்படுகிறது.