0
யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் உள்ள இரண்டு மனிதப் புதைகுழிகளில் இருந்தும் இன்று சனிக்கிழமை புதிதாக 4 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுக் தொகுதிகளில் இன்று 5 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணிப் பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல. – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல. – 02” என நீதிமன்றத்தால் அடையாளப்படுத்தப்பட்ட மனிதப் புதைகுழிகளில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த மனிதப் புதைகுழிகளில் அகழ்வுப் பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 37 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்டப் பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 28 ஆவது நாளாக அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது. அதன்போது, புதிதாக 4 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதற்கமைய இதுவரையில் 126 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுக் தொகுதிகளில் இன்று 5 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இதுவரையில் 117 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.