7
*அரசாங்கத் தகவல் திணைக்கள அடையாள அட்டை, செய்தியாளர் என்பதற்குரிய அங்கீகாரம் அல்ல
— —
கொலை செய்யப்பட்டவர் மற்றும் கொலையாளி ஆகியோரின் குடும்ப விவரங்களை கிளறி எடுத்து எழுதுவது செய்தி அல்ல. அது தகவலும் அல்ல. மாறாக அவை வெறும் விடுப்புகள்.
புலனாய்வு செய்தி என்பதன் பொருள் வேறு.
குற்றவாளியிடம், பொலிஸார் பெறும் வாக்குமூலங்களை செய்தியாக பிரசுரிப்பதற்கு ஒரு எழுத்து முறைமை (writing system) உண்டு.
பிரதான செய்தி ஊடகங்களில் பணியாற்றும் அனுபவம் உள்ள செய்தியாளர்கள் அதனை பக்குவமாக எழுதுவர், கையாள்வர்.
பொதுவாக, பொலிஸார் பெறும் வாக்குமூலங்களை செய்தியாக பிரசுரிக்க முடியாது. அது சட்டத் தன்மை வாய்ந்ததும் அல்ல. நீதிமன்றத்தில் அவற்றை சமர்ப்பித்து, நீதிபதி முன்னிலையில் மீண்டும் சுயமாக வழங்கப்படும் வாக்குமூலங்கள் மாத்திரமே சட்டத் தன்மை வாய்ந்ததாகும்.
இங்கே பிரச்சினை என்னவென்றால், சில சமூக வலைத்தள பதிவர்கள் – யூரீப்பர்கள் தங்களை தொழில்முறை பத்திரிகையாளர்களாக (Professional journalists) நினைப்பதுதான்.
சுய கட்டுப்பாடுகள் இன்றி ”செய்தி” ”தகவல்“ என்ற போர்வையில் தங்கள் விருப்பங்கள் எல்லாவற்றையும் எழுதுகின்றனர். இது தான் இங்கே பிரச்சினை…
சமூக வலைத்தளங்களை வைத்திருப்பது இன்று உலகில் மனித உரிமையாக பார்க்கப்படுகிறது. ஆனால், அதில் எல்லாவற்றையும் எழுதுவது தவறு.
எழுத முடியும். ஆனால் எழுத்தில் நாகரிகம் இருக்க வேண்டும். சந்தேக நபர்களை குற்றவாளியாக்கி எழுத முடியாது.
அதேவளை, ஏனைய தொழில்துறைகள் போன்று இலங்கையில் பத்திரிகைத் தொழில், தொழில்முறையாக அங்கீகரிக்கப்படவில்லை. இதுவும் பிரச்சினைகளுக்கு ஒரு காரணம்…
வெளிநாடுகளில் ”பத்திரிகை குறைகேள் அதிகாரி” (ombudsman) முறை அல்லது பத்திரிகையாளர் பதிவு முறை என பல விதி முறைகள் உண்டு.
பதிவு செய்யாமல் எவரும் செய்தியாளர்களாக பணியாற்ற முடியாது. பாகிஸ்தானில் இது கட்டாயம். இந்தியாவில் – தமிழ்நாட்டில் இக் கட்டுப்பாடுகள் உண்டு.
இலங்கையில் மருத்துவர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணி, கணக்காளர்கள் என முக்கியமான தொழில்துறைகளில் பதிவு செய்வதற்கு அமைப்புகள் உண்டு.
(உதாரணம் – இலங்கை மருத்துவர் சங்கம், இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம், பட்டயக் கணக்காளர் சங்கம்)
ஆனால் ஊடகத்துறைக்கு அவ்வாறான பதிவு முறைகள் இலங்கையில் இல்லை. அரசாங்கத் தகவல் திணைக்களம் வழங்கும் ஊடக அடையாள அட்டை செய்தியாளர் என்பதற்குரிய அங்கீகாரம் அல்ல.
இது பற்றித் தான், நாங்கள் தொடர்ச்சியாக அரசாங்கத்துடன் வாதாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் எதுவும் நடப்பதாக இல்லை.
அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்-