7
நுவரெலியா, ஹோட்டன் சமவெளி ‘உலக முடிவு’ (World’s End) பகுதியில் செல்பி எடுக்க முயன்ற போது, சுமார் 50 அடி பள்ளத்தில் தவறி விழ்ந்த கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி ஒருவர் பல மணிநேரப் போராட்டத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இன்று (19) காலை கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் இப்பகுதியைப் பார்வையிட வந்த போதே, 23 வயதான குறித்த மாணவி தவறி விழ்ந்து மரக்கிளை ஒன்றில் தொங்கிக் கொண்டிருந்தார்.

இதனை அவதானித்த வனப் பூங்காவின் சாரதி ஒருவர், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் பள்ளத்தில் இறங்கி, மரக்கிளையில் தொங்கிய மாணவியை மீட்டு அருகிலிருந்த ஒரு பாறை இடுக்கில் பாதுகாப்பாக அமர வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பட்டிப்பொல காவல்துறையினர், இராணுவத்தின் 3ஆவது சிங்கப் படைப்பிரிவு, விசேட அதிரடிப்படையினர் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் இணைந்து நடத்திய பாரிய கூட்டு மீட்பு நடவடிக்கையின் மூலம் மாணவி பாதுகாப்பாக மேலே கொண்டு வரப்பட்டார்.

தற்போது அவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹோட்டன் சமவெளி மேலாளர் மஞ்சுலா மொனரதென்ன தெரிவித்துள்ளார்.