செல்போன் பயன்பாட்டுக்கு எதிராக சிறுவர்கள் உடல் தகுதி, ஒழுக்கம், மன உறுதியை ஊக்குவிக்கும் வகையில் 4-ம் வகுப்பு மாணவன் 16 கி.மீ. தூரம் பள்ளிக்கு ஓடிச்சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினான்.
16 கிமீ. ஓடிய சிறுவன்
நவீன உலகில் குழந்தை பிறந்தவுடன் பெற்றோர் போட்டோ எடுப்பது, அதனுடைய குறும்புத்தனமான வீடியோக்களை ரீல்ஸ் எடுப்பது என செல்போன்களோடு குழந்தைகளுக்கு அப்போதே தொடர்பை ஏற்படுத்தி விடுகிறார்கள். முன்பெல்லாம் பெற்றோர் குழந்தைகளுக்கு சோறு ஊட்ட நிலாவை காட்டுவது, காக்கா கதை சொன்னார்கள். இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவதற்கும். சமாதானப்படுத்துவதற்கும் ஒரு கருவியாக செல்போன் மாறிவிட்டது.
செல்போன் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக குழந்தைகளுக்கு மன இறுக்கம் ஏற்பட்டு மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுவதாக குழந்தை நல டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள். இதனால் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செல்போன் பயன்பாட்டில் இருந்து தடை விதிப்பது குறித்து பல்வேறு மாநில அரசுகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. மேலும், உலகளவில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பள்ளிகளில் செல்போன் பயன்பாடுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.