பட மூலாதாரம், social media
1967 ஜூன் 5 ஆம் தேதி, வெப்பமும் தூசியும் நிறைந்த பிற்பகலில், ஜோர்டானின் சிறிய விமானப்படையை அழிக்கும் நோக்குடன் நான்கு இஸ்ரேலிய போர் விமானங்கள் மஃப்ராக் விமானப்படைத் தளத்தைத் தாக்கின.
அதற்கு முன், அவர்கள் எகிப்தின் விமானப்படையை அழித்திருந்தனர். அன்று, வெறும் அரை மணி நேரத்திற்குள், 200க்கும் மேற்பட்ட எகிப்திய போர் விமானங்களை, இஸ்ரேலிய விமானப்படை அழித்தது.
ஆனால் ஜோர்டானின் மஃப்ராக் விமானத் தளத்தை அழிக்கும் திட்டம் நிறைவேறுவதற்கு முன்பு, இஸ்ரேலிய விமானப்படை இரண்டு போர் விமானங்களை இழந்தது. அவற்றில் ஒன்று பாகிஸ்தான் விமானப்படையைச் சேர்ந்த ஒரு விமானியால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
பாகிஸ்தான் விமானப்படையைச் சேர்ந்த விமானி லெப்டினன்ட் சைஃப்-உல்-அசாம் என்பவர்தான் அந்த விமானி.
ஜூன் 5 அன்று ஜோர்டானிய விமானப்படையின், போர் விமானத்தை ஓட்டிச் சென்றபோது இஸ்ரேலிய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார் விமானி சைஃப்-உல்-அசாம்.
பின்னர் இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஜூன் 7 அன்று, இராக் விமானப்படையின் விமானத்தை இயக்கிய போது, மேலும் இரண்டு இஸ்ரேலிய போர் விமானங்களை அவர் சுட்டு வீழ்த்தினார்.
1960 ஆம் ஆண்டு பாகிஸ்தான் விமானப்படையில் நியமிக்கப்பட்ட சைஃப்-உல்-அசாம், 1965 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் போது இந்திய விமானப்படை விமானத்தையும் சுட்டு வீழ்த்தினார்.
பின்னர், வங்கதேச விமானப்படையில் இணைந்தார் சைஃப்-உல்-அசாம்.
ஆனால் ஜோர்டானிய விமானப்படை சார்பாகவும் பின்னர் இராக் விமானப்படை சார்பாகவும் சைஃபுல்லா அசாம் இஸ்ரேலுக்கு எதிராக போராடியது எப்படி?
பாகிஸ்தானிலிருந்து ஜோர்டான் வரை
பட மூலாதாரம், Getty Images
‘The Gold Bird: Pakistan and Its Air Force, Observations of a Pilot’ என்ற புத்தகத்தில், “நமது (பாகிஸ்தான்) விமானப்படையின் தொழில்நுட்ப வல்லுநர்களில் 35 சதவீதத்தினரும், சைஃபுல்லா அசாம் போன்ற சிறந்த விமானிகள் உட்பட கால் பகுதியினரும் கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்” என்று எழுதியுள்ளார் மன்சூர் ஷா.
1965 ஆம் ஆண்டு போரில், விமானப் படை வீரர் சைஃபுல்லா அசாம் ஒரு இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார், அவருக்கு பாகிஸ்தான் அரசு சித்தாரா-இ-ஜுராத் விருதை வழங்கியது.
1966 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அவர் ஜோர்டானிய விமானப்படையில் ஆலோசகராக நியமிக்கப்பட்டார், ஆனால் அடுத்த ஆண்டே அவர் மற்றொரு போரை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
அதில் ஒரு பக்கம் இஸ்ரேலும் மறுபுறம் ஜோர்டான், எகிப்து, சிரியா மற்றும் இராக் உள்ளிட்ட அரபு நாடுகளின் கூட்டணியும் இருந்தன.
எகிப்திய விமானப்படை திடீர் பின்னடைவைச் சந்தித்ததை அடுத்து, ஜூன் 5 அன்று இஸ்ரேலிய தாக்குதலுடன் போர் தொடங்கியது. ஜோர்டானிய விமானப்படைக்கு தகவல் அளிக்கப்பட்டு பாதுகாப்புத் தீவிரப்படுத்தப்பட்டது.
பாகிஸ்தான் அரசாங்கத்திடமிருந்து வான் பாதுகாப்புக்கான வரையறுக்கப்பட்ட அனுமதியைப் பெற்ற பிறகு, சைஃப்-உல்-அசாம் ஜோர்டானில் உள்ள மஃப்ராக் விமானப்படைத் தளத்திலிருந்து, லெப்டினன்ட் எஹ்சான் ஷார்துமுடன் ஹண்டர் விமானத்தில் புறப்பட்டார்.
பிற ஹண்டர் விமானங்களும் அவரைப் பின்தொடர்ந்தன என்று வரலாற்றாசிரியரும், முன்னாள் விமானக் கமாண்டருமான கைசர் துஃபைல் தனது ‘கிரேட் ஏர் பேட்டில்ஸ் ஆஃப் பாகிஸ்தான் ஏர் போர்ஸ்’ (Great Air Battles of Pakistan Air Force) என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்
இஸ்ரேலிய போர் விமானங்கள் அழிக்கப்பட்டன
பட மூலாதாரம், Social Media
“பாலைவனத்தின் தூசி மற்றும் வெப்பம் காரணமாக, ஒரு மைலுக்கும் குறைவாகவே பார்க்க முடிந்தது, எதிரியின் எந்த தடயமும் தெரியவில்லை. மஃப்ராக் விமான தளத்தை நோக்கி இஸ்ரேலிய விமானம் ஏதேனும் வருகிறதா என்று சைஃப் ரேடாரிடம் கேட்டார், பதில் ‘ஆம்’ என்று வந்தவுடன், சைஃப் உடனடியாக மஃப்ராக் பக்கம் திரும்பினார்” என்று கைசர் துஃபைல் குறிப்பிட்டுள்ளார்.
எகிப்துக்குப் பிறகு இஸ்ரேலிய விமானப்படை தன்னைத் தாக்கும் என்று ஜோர்டான் அஞ்சியது.
“மஃப்ராக் விமானப்படை தளத்திலிருந்து நான்கு மைல் தொலைவில், குறைந்த உயரத்தில் போர் அமைப்பில் நான்கு விமானங்கள் பறப்பதை அவர் கண்டார். இவை இஸ்ரேலிய மிஸ்டெர் விமானங்கள் என்று அவர் யூகித்தார்” என்று கைசர் துஃபைல் அப்புத்தகத்தில் எழுதியுள்ளார்.
“தாக்குதலுக்குத் திரும்பிய விமானங்களில் ஒன்றின் பின்னால் பாய்ந்து தாக்கத் தயாரானார் சைஃப். தனது ஹண்டர் விமானத்தில் உள்ள நான்கு சக்திவாய்ந்த 30 மிமீ துப்பாக்கிகளை பயன்படுத்தி அதனை அவர் சுட்டார். மிஸ்டேர் விமானத்தில் தீப்பிடித்து, அதன் சில பகுதிகள் உடைந்து விழத் தொடங்கின. அந்த இடிபாடுகளைத் தவிர்க்க, சைஃப் தனது விமானத்தை மேலே தூக்க வேண்டியிருந்தது.”
“இந்த இஸ்ரேலிய விமானம் மஃப்ராக் விமான தளத்தின் எல்லைக்கு அருகில் அழிக்கப்பட்டது, மேலும் இஸ்ரேலிய விமானி லெப்டினன்ட் ஹனானியாவால் விமானத்திலிருந்து குதிக்க முடியவில்லை.”
” சைஃப்-உல்-அசாம், மேற்கு நோக்கி முழு வேகத்தில் பறந்த இரண்டு மிஸ்டேர் விமானங்களைக் கண்டார். அவர் அவற்றைத் துரத்தத் தொடங்கியவுடன், லெப்டினன்ட் எஹ்சான் வலதுபுறத்தில் மற்றொரு எதிரி விமானத்தைக் கவனித்தார்.
உடனே சைஃப், எஹ்சானை அந்த ஒற்றை விமானத்தைத் துரத்துமாறு உத்தரவிட்டார். அதே நேரத்தில் அவர் இரண்டு எதிரி விமானங்களையும் பின்தொடர்ந்தார்” என்று கைசர் துஃபைல் தனது நூலில் குறிப்பிடுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
“சைஃப் மிஸ்டெரின் பின்னால் வந்தார், அது ஒரு விரைவான சூழ்ச்சியைச் செய்து தப்பிக்க முயன்றது. சைஃப் அதன் மீது நான்கு தோட்டாக்களைச் சுட்டார், ஆனால் அவை எதுவும் இலக்கைத் தாக்கவில்லை.”
“மனச்சோர்வடைந்த அவர், திடீரென்று எதிரி விமானம் நேராகப் பறக்கத் தொடங்கியதைக் கண்டார். பின்னர், சைஃப் தூரத்தைக் குறைத்து ஐந்தாவது முறையாகச் சுட்டார். மிஸ்டீரின் வலது பக்கத்திலிருந்து புகை வெளியேறத் தொடங்கியது. தோட்டாக்கள் இலக்கைத் தாக்கின.
விமானம் கீழே சாய்ந்தது, ஆனால் இரண்டாவது இஸ்ரேலிய விமானம் அவர்களைத் தாக்கத் திரும்பியதால் அது முழுமையாக அழிக்கப்படுவதை சைஃபால் பார்க்க முடியவில்லை” என்று கைசர் துஃபைல் பதிவு செய்துள்ளார்.
“எரிபொருள் மற்றும் வெடிமருந்துகள் இல்லாததால், சைஃப் பின்வாங்க முடிவு செய்து, மஃப்ரக்கிற்குத் திரும்பினார். மஃப்ரக்கின் ஓடுபாதை தாக்கப்பட்டிருக்குமோ என்று அவர் அஞ்சினார்.
எனவே, அனைத்து விமானங்களையும் விமான நிலையத்தின் வடக்கே காத்திருக்க உத்தரவிட்டார். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக அவை ஓடுபாதையில் தரையிறங்க அனுமதி பெற்றன” என்று எழுதியுள்ளார் கைசர் துஃபைல்.
“ஆனால் எஹ்சான் உடனடியாக ஆபத்தை உணர்ந்தார். உடனே அவர் வானொலியில் அரபு மொழியில் கட்டுப்பாட்டாளரிடம் தனது அடையாளத்தையும், ரகசிய குறியீடாக இருந்த அவரது நாயின் பெயரையும் கேட்டார்.
அதே நேரத்தில், மஃப்ராக் விமானத் தளத்தில் தரையிறங்கவேண்டாம் என ஜோர்டானிய கட்டுப்பாட்டாளர் வானொலியில் எச்சரித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார் கைசர் துஃபைல்.
“அவர்கள் அழிக்கப்பட்ட ஓடுபாதையில் தரையிறங்குமாறு ஒரு போலி வானொலி செய்தி அனுப்பப்பட்டது. ஆனால் எஹ்சானின் சமயோசித சிந்தனை, அந்த ஆபத்தான இஸ்ரேலிய வலையிலிருந்து இருவரையும் காப்பாற்றியது.”
“இஸ்ரேலிய தாக்குதலுக்கு உள்ளாகாத தலைநகர் அம்மானில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அனைத்து விமானங்களும் திருப்பி விடப்பட்டன. தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு தரையிறங்கியதால் இந்த விமானிகள் அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப்பட்டனர்.”
“ஆனால் அவர்களின் விமானங்கள் பாதுகாப்பாக இல்லை. விரைவில், நவீன சூப்பர் மிஸ்டேர் விமானங்கள் ‘டைவர்’ குண்டுகளைப் பயன்படுத்தி தாக்கின. இதனால் ஓடுபாதையில் பெரும் சேதம் ஏற்பட்டது.”
ஜோர்டான் மன்னரும் இராக் விமானப்படையும்
பட மூலாதாரம், Getty Images
” இந்தத் தாக்குதலில் பல போக்குவரத்து விமானங்களும், ஹெலிகாப்டர்களும் அழிக்கப்பட்டன. இந்தச் சம்பவங்களைப் பற்றி விவாதிக்க விமானிகள் அம்மானில் உள்ள செயல்பாட்டுத் தலைமையகத்தில் கூடினர்” என்று கைசர் துஃபைல் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, ஜோர்டான் மன்னர் ஹுசைனும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். முதன் முதலாக ஜோர்டான் ஈடுபட்டுள்ள பெரிய வான்வழிப் போரில் பங்கேற்ற தனது விமானிகளைப் பாராட்ட அவர் அங்கு வந்தார்.”
அந்த சமயத்தில், ஜோர்டான் தனது விமானிகளின் சேவைகளை இராக்கிற்கு வழங்கியதாகவும், விரைவில் அவர்களை இராக்கிற்கு அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் கைசர் துஃபைல் குறிப்பிட்டுள்ளார்.
“ஜூன் 6 ஆம் தேதி, அந்த விமானங்கள் இரவு 9 மணிக்கு இராக்கில் உள்ள ஹபானியா விமானத் தளத்தை அடைந்தன. அங்கு மூன்று ஹண்டர் படைப்பிரிவுகள் இருந்தன.”
“ஜூன் 7 ஆம் தேதி காலை, மென்மையான தட்டும் ஓசையும், அதைவிட மென்மையான குரலும் சைஃப்பை எழுப்பின. ‘முதல் விமானத்தை இயக்க நான்கு விமானிகள் முன்வர வேண்டும் என்றும், நீங்கள் தலைமை தாங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டீர்கள்’ என்றும் கூறி, ஒரு இளம் இராக்கிய அதிகாரி அந்தத் தளத்தின் தளபதியிடமிருந்து வந்த செய்தியை அவரிடம் வழங்கினார்” என கைசர் துஃபைல் தனது நூலில் குறிப்பிடுகிறார்.
ஏர்பேஸ் H3
பட மூலாதாரம், Getty Images
விரைவில், நான்கு ஹண்டர் விமானங்களின் ஒரு படைப்பிரிவு, இராக்கின் மேற்கு பாலைவனத்தின் தொலைதூரப் பகுதியில் பாக்தாத்திலிருந்து மேற்கே சுமார் 435 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஏர்பேஸ் H-3 நோக்கி பறந்து கொண்டிருந்தது.
“25,000 அடி உயரத்தில் பறந்தபோது, கட்டுப்பாட்டாளர் சைஃப்பை அழைத்து, ‘தலைவரே, ஹெச் 3 மீது ஒரு பெரிய தாக்குதல் நடக்கிறது. கீழே சென்று அதை சமாளிக்கவும்’ என அறிவித்தார்.”
“இஸ்ரேலிய படை ஆறு விமானங்களைக் கொண்டிருந்தது. அதில் நான்கு வால்டர் விமானங்களை துணைப் படைத் தளபதி கேப்டன் ஷோலோமன் கரண் வழிநடத்தினார்.
அவருடன், இரண்டு இருக்கைகள் கொண்ட விமானத்தில் நேவிகேட்டராக கேப்டன் அலெக்சாண்டர் அன்பர் மெலிட்சரும் இருந்தார்” என்று கைசர் துஃபைல் தனது நூலில் குறிப்பிடுகிறார்.
மற்ற உறுப்பினர்களில், ராமத் டேவிட் விமானப்படைத் தளத்தின் தளபதி கர்னல் யெசிகல் சௌமிக், கேப்டன் ஐசக் கலென்டிஸ்-கோலன் மற்றும் லெப்டினன்ட் ஓஷலோம் ஃப்ரீட்மேன் ஆகியோர் இருந்தனர். அவர்கள் ஒற்றை இருக்கை கொண்ட விமானங்களில் பறந்தனர்.
“சைஃப்-உல்-அசாம் தலைமையிலான இராக்கிய ஹண்டர் விமானங்கள் ஹெச் -3 விமான தளத்திலிருந்து ஐந்து மைல் தொலைவில் இருந்தபோது, மேற்கிலிருந்து இரண்டு வால்டர் விமானங்கள் வருவதைக் கண்டனர். சைஃப் அந்த விமானங்களில் ஒன்றைத் துரத்தத் தயாராகியபோது, ‘இரண்டு மிராஜ் விமானங்கள் உங்கள் பின்னால் உள்ளன'” என்று விமானி சமீர் அவரை எச்சரித்தார்.
“செய்தியைக் கேட்ட உடனேயே, சைஃப் தனது படையைப் பிரிக்க முடிவு செய்தார். அங்கு அவரும் எஹ்சனும் மிராஜ் ஜெட் விமானங்களைச் சமாளிப்பார்கள் என்றும், அதே நேரத்தில் சமீர் மற்றும் காலிப் வால்டரைப் பின்தொடர்வார்கள்” என்றும் தீர்மானிக்கப்பட்டது.
“சைஃப் விரைந்து தூரத்தை குறைத்து, தனது ஹண்டர் விமானத்தின் பீரங்கியின் தூண்டுதலை அழுத்தியபோது, ‘பிஸ்மில்லாஹ்’ என்று கூறினார். தோட்டாக்கள் நேராக இஸ்ரேலிய மிராஜ் விமானத்தின் இறக்கைகளை நேரடியாகத் தாக்கின, தீப்பொறிகள் பறக்கத் தொடங்கின.”
“அது வெடித்துவுடன், தரையில் இருந்த தள ஊழியர்களின் கண்முன்னே கேப்டன் டெர்வர் விமானத்திலிருந்து வெளியே குதித்தார். பின்னர் சைஃப் வலதுபுறம் திரும்பினார். சுமார் 2,000 அடி தொலைவில் ஒரு வால்டர் விமானம் எதிரே வந்தது.”
“சைஃப் தன்னுடைய விமானத்தை தலைகீழாகத் திருப்பி, ‘ஸ்பிலிட்-எஸ்’ எனப்படும் வகையில் பறக்க முயற்சித்தார்.
தரைக்கு அருகில் இருக்கும்போது, இந்த வகையில் பறப்பது ஆபத்தானது. ஆனால் சைஃப் கட்டுப்பாட்டு அமைப்பை பலமாக இழுத்ததால், அவர் கிட்டத்தட்ட மயக்கமடைய நேர்ந்தது.
விமானம் சம நிலைக்குத் திரும்பியதும், சைஃப் வால்டர் விமானத்தின் பின்னால் இருந்தார். பிரேக்குகள் திறந்திருந்தாலும், த்ரோட்டில் மூடப்பட்டிருந்தாலும், அவர் மிக வேகமாக நெருங்கிக்கொண்டிருந்தார். வெறும் 200 அடி மட்டுமே அதன் இடைவெளியாக இருந்தது”
“சைஃப் அந்த விமானத்தில் இருந்த பீரங்கியை நோக்கி மூன்று முறை சுட்டார். விமானம் துண்டு துண்டாக உடைந்து காற்றில் பறக்கத் தொடங்கியது. அவரது சொந்த விமானமும் எதிலோ மோதியது போல் குலுங்கியது.”
கைசர் துஃபைலின் கூற்றுப்படி, “கேப்டன் கோலன் விமானத்தின் கட்டுப்பாட்டை இழந்து, சிதைந்து கொண்டிருந்த தனது வால்டர் விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்தார்.
டார்வார் சிறிது நேரத்திற்கு முன்பு மிராஜில் இருந்து அதிக உயரத்தில் குதித்தார், அதே நேரத்தில் கோலன் வால்டர் விமானத்திலிருந்து தனது பாராசூட்டை குறைந்த தூரத்தில் திறந்து பறக்கத் தொடங்கினார்.
அப்போது இருவரும் பாராசூட்கள் மூலம் காற்றில் ஒன்றாகக் கீழே இறங்கிக் கொண்டிருந்தனர்.”
“சைஃப், எரிபொருள் தீர்ந்து போனதால் திரும்பிச் செல்ல திட்டமிட்டிருந்தபோது, சமீர் உற்சாகத்தில், “தலைவரே, நான் வால்டரைச் சுட்டு வீழ்த்திவிட்டேன்” என்று கூறினார்.
“இந்த குழப்பத்திற்கு மத்தியில், எஹ்சானும் ஒரு வால்டரைச் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்தார். சைஃப் மீண்டும் குழுவை ஒழுங்குபடுத்த முயன்றபோது, ஒரு மிராஜ் விமானம் (கேப்டன் டோட்டனின்) ஒரு ஹண்டர் விமானத்தைத் துரத்திக் கொண்டிருந்தது.
அது காலிப்பின் விமானம் என்பதும், அதிலிருந்து புகை வெளியேறிக் கொண்டிருந்ததும் சைஃப்பின் கவனத்திற்கு வந்தது. வானொலியில் அனைவரும் ஒருவருக்கொருவர் அவரை வெளியே குதிக்கச் சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் காலிப் எந்த பதிலும் அளிக்காமல் அமைதியாகவே இருந்தார்” என்று அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“விமானம் சிறிது தூரம் சென்று விமானநிலையத்திற்கு அருகில் பயன்பாட்டில் இல்லாத எண்ணெய் தொட்டியில் மோதியது.”
கைது செய்யப்பட்ட விமானிகளும், விமர்சனங்களும்
பட மூலாதாரம், Getty Images
“கூடுதல் எரிபொருள் இருந்த பெட்டிகளை முன்பே இறக்கிவிட்டதால், எல்லா விமானங்களிலும் எரிபொருள் மிகக் குறைவாகவே இருந்தது. இருந்தாலும், சைஃப் மற்றும் எஹ்சான் அதிக உயரத்தில் பறந்தபடியே ஹபானியா விமான தளத்தை வெற்றிகரமாக அடைந்தனர்” என்று கைசர் துஃபைல் குறிப்பிடுகிறார்.
“சைஃப் விமானத்திலிருந்து இறங்கியவுடன், மக்கள் அவரை மகிழ்ச்சியுடன் தூக்கிச் சென்று கொண்டாடினர். அனைவரும் கோஷங்களை எழுப்பினர். சைஃப்பின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது. அவர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திக்கொண்டிருந்தார்.”
இஸ்ரேலிய விமானப்படை ஏராளமான வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், ஆபரேஷன் ஹெச் -3 க்குப் பிறகு அது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
கர்னல் எலியாசர் கோஹன் தனது ‘பெஸ்ட் டிஃபென்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ புத்தகத்தில், ஹெச் -3 விமானம் சிறிய சேதத்தைச் சந்தித்தது, ஆனால் எங்கள் இழப்புகள் மிகப்பெரியவை என்று எழுதினார்.
ஒரு விமானி மற்றும் ஒரு நேவிகேட்டர் உயிரிழந்தனர். இருவர் கைது செய்யப்பட்டனர். மூன்று விமானங்கள் அழிக்கப்பட்டன. இது மற்ற எல்லா தளங்களிலும் இருந்ததைவிட அதிகமான இழப்பாக இருந்தது.
பின்னர், ஜோர்டான் அரசாங்கம் சைஃப்-உல்-அசாமுக்கு ‘விசாம் அல்-இஸ்திக்லால்’ விருதையும், இராக் அவருக்கு ‘நுட் அல்-சுஜாத்’ விருதையும், பாகிஸ்தான் அவருக்கு ‘சிதாரா-இ-பசலத்’ விருதையும் வழங்கியது.
பாகிஸ்தான் – வங்கதேசம்
பட மூலாதாரம், Social Media
1972 ஆம் ஆண்டு, சைஃப் வங்கதேசத்திற்கு குடிபெயர்ந்து, அந்த நாட்டின் விமானப்படை சீருடையை அணிந்தார்.
‘செகண்ட் டு நன்’ என்ற பிஏஃப் (PAF) இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், சைஃப்-உல் அசாம் நான்கு நாடுகளின் (பாகிஸ்தான், ஜோர்டான், இராக் மற்றும் பவங்கதேசம்) விமானப்படைகளில் பணியாற்றியதாகவும், இரண்டு நாடுகளின் (இந்தியா மற்றும் இஸ்ரேல்) விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகவும், ஏர் கமாண்டர் முகமது அலி பதிவு செய்துள்ளார்.
வங்கதேச ராணுவ அதிகாரியும் ஆய்வாளருமான ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஷாஹிதுல் இனாம் கான், சைஃபுல்லா அசாமின் துணிச்சல் இஸ்ரேலிலும் பாராட்டப்படுகிறது என்று எழுதினார்.
ஜூன் 2020 இல் அவர் இறந்தபோது முக்கிய செய்தித்தாள்கள் அதை பிரதான செய்தியாக வெளியிட்டன.
“1967 அரபு–இஸ்ரேல் போரின் போது, சைஃப் ஒரு இஸ்ரேலிய விமானத்தை குறிவைத்தார். ஆனால் நேராக தாக்காமல், பக்கவாட்டில் இருந்து விமானத்தின் வால் பகுதியை மட்டும் சுட்டார். இதனால் இஸ்ரேலிய விமானி உயிர் பிழைத்து, பாராசூட்டைப் பயன்படுத்தி தரையில் தரையிறங்கினார்” என்று அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“நான் பாராசூட்டில் கீழே இறங்கிக் கொண்டிருந்தபோது, சைஃப் தனது விமானத்தை சுழற்றி ஒரு லூப் செய்தார். பிறகு என்னை நோக்கி கையசைத்தார். அதற்குப் பிறகு, அவர் மற்றொரு இஸ்ரேலிய விமானத்தைத் தாக்கச் சென்றார். அவர் விரும்பியிருந்தால், நான் உயிருடன் இருக்க முடியாது” என்று அந்த விமானி பின்னர் கூறியதாகவும் அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
ஆறு நாள் போர் ஐ.நா.வின் மத்தியஸ்தத்துடன் முடிவுக்கு வந்தது, ஆனால் அதற்குள் இஸ்ரேல் கோலன் ஹைட்ஸ், காஸா, சினாய் தீபகற்பம் மற்றும் மேற்குக் கரை (கிழக்கு ஜெருசலேம் உட்பட) ஆகியவற்றைக் கைப்பற்றி, மத்திய கிழக்கின் வரைபடத்தை முற்றிலுமாக மாற்றியது.
ஆனால், இந்தப் போருடன் நேரடித் தொடர்பு இல்லாத பாகிஸ்தானைச் சேர்ந்த விமானி சைஃப்-உல்-அசாமின் வீரச் செயல்களுக்காகவும் இந்தப் போர் நினைவுகூரப்படுகிறது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு