திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள சிவன் கோயிலில் கட்டுமானப் பணிக்காக பள்ளம் தோண்டிய போது தங்க புதையல் கிடைத்துள்ளது
திருவண்ணாமலை கலசப்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட ஜவ்வாது மலையில் அமைந்துள்ளது கோவிலூர் கிராமம்.
இங்கு பழமையான சிவன் கோவில் ஒன்று உள்ளது. இந்தக் கோவில் சோழர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கோவில் வளாகத்தை புனரமைக்க வேண்டும் என கோரிக்கை இருந்து வந்த நிலையில், தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் கட்டுமானப் பணியின் ஒரு பகுதியாக பள்ளம் தோன்றிய போது அதிலிருந்து 100-க்கும் மேற்பட்ட தங்க காசுகள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிறியஅளவிலான தங்க காசுகள்
கோவில் கட்டுமான பணியின் போது கிடைத்த தங்க காசுகளின் புதையல் தொடர்பாக கோவில் செயல் அலுவலர் சிலம்பரசன் பிபிசி தமிழிடம் தொலைபேசியில் விவரித்தார்.
“கோவிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் புனரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திங்கட்கிழமை (நவம்பர் 3) காலை ஊழியர்கள் திருமூலநாதர் கருவறையில் கட்டுமானப் பணிகளுக்காகப் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தரைக்குக் கீழே ஒரு சிறிய பானை புதைந்திருப்பதைக் கண்டனர்.”
“சந்தேகத்துடன் அந்தப் பானையை வெளியே எடுத்துத் திறந்து பார்த்தபோது, அதனுள் தங்க காசுகள் இருந்துள்ளன. உடனடியாக நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டோம். அந்தப் பானையில் மொத்தம் 103 தங்க காசுகளும் இருந்தது உறுதி செய்யப்பட்டது.” என்றார்.
கண்டெடுக்கப்பட்ட 103 தங்க காசுகளும் கைப்பற்றப்பட்டு, வருவாய்த்துறை மூலம் பாதுகாப்பாக அரசுக் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவை எந்த காலத்தைச் சேர்ந்தவை என்ப்து தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
படக்குறிப்பு, தங்க காசுகள்
சோழர் காலத்து கோவில்
திருவண்ணாமலை வட்டாட்சியரும் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலருமான பாலமுருகன் ஜவ்வாது மலையில் அமைந்துள்ள சிவன் கோவில் வரலாற்று தகவல்கள் குறித்து பிபிசி தமிழிடம் விவரித்தார்.
“ஜவ்வாது மலை கோவிலூரில் உள்ள சிவன் கோவில் தற்போது ஆதிஅருணாச்சலேஸ்வரர் என்று அழைக்கப்பட்டாலும் கோவிலில் உள்ள கல்வெட்டுச் சான்றுகளின்படி கோவில் திருமூலநாதர் கோவில் என்று அழைக்கப்பட்டுள்ளது. மிகச் சிறப்பு வாய்ந்த இந்த கற்கோயில் கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை நன்றாகவே இருந்துள்ளதை சிற்பங்களை வைத்து கூற முடியும்,” என்கிறார் பாலமுருகன்.
கோவிலின் பெரும்பாலான பகுதிகள் சிதிலமடைந்து விட்டதாகக் கூறிய அவர் அறநிலையத் துறை மூலம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
“இந்த தங்க காசுகள் மிக சிறிய அளவிலானவை. இந்த தங்க காசுகள் கோவில் மற்றும் வீடு கட்டும்போது கருவறை மற்றும் நில வாயில்படி பகுதியில் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டன,” என்றும் குறிப்பிட்டார்.
படக்குறிப்பு, தங்க புதையல் கிடைத்த இடம்
கோவில் அருகே வேறு என்னவெல்லாம் காணக்கிடைக்கின்றன?
தங்க காசுகள் தவிர்த்து இந்தக் கோவிலின் அருகே பல வரலாற்றுச் சின்னங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதனை விவரித்து பேசிய பாலமுருகன், “கோவில் அருகிலேயே பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த செக்கு கல்வெட்டும் காணப்படுகிறது. அதே போல் கோவிலின் சுவர் பகுதியில் 12 நூற்றாண்டைச் சேர்ந்த சோழ அரசர்கள் வீர ராஜேந்திரன் மற்றும் மூன்றாம் ராஜராஜன் கால கல்வெட்டுகள், 2 விஜயநகர கால கல்வெட்டுக்கள் மற்றும் 2 நாயக்கர் கால கல்வெட்டுகள் என மொத்தம் 7 கல்வெட்டுகள் இந்த கோவில் பகுதியில் உள்ளது.”
“இந்த கோவில் கருவறையில் கிடைத்த தங்க காசுகள் அளவில் மிகச் சிறியது. சமநிலப் பகுதிகளில் சோழர்கள் மிக சிறப்பான வேலைப்பாடுகளுடன் கோவிலை கட்டியுள்ளார்கள். அதே போல் சிற்பங்களுடன் மிக கலைநயத்துடனே இந்தக் கோவிலை ஜவ்வாது மலையில் கட்டியுள்ளது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.” என்றார்.