தற்காலத்தில் அரசுகள் தங்களுக்குள் ஒப்பந்தங்களைச் செய்துகொள்வதைப் போலவே, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவும் அரசுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த ஒப்பந்தங்கள் பற்றி கிடைக்கக்கூடிய கல்வெட்டுகள் பல சுவாரஸ்யமான தகவல்களை நமக்குத் தருகின்றன.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் ஒப்பில்லாமணீஸ்வரர் கோவிலில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. இந்தக் கல்வெட்டு, இதுபோன்ற ஒரு ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசுகிறது.
கி.பி.1178ஆம் ஆண்டு முதல் கி.பி.1218ஆம் ஆண்டுவரை ஆட்சி செய்தவராகக் கருதப்படும் சோழ அரசரான மூன்றாம் குலோத்துங்கனுக்கு பல சிற்றரசர்கள் உறுதுணையாக இருந்தனர்.
கிளியூர் மலையமான், அதிகமான், இராசராசத்தேவன், அமராபரணன் சீயகங்கன், ராசராச வாணகோவரையன், வீரசேகர காடவராயன் போன்ற மன்னர்கள் இதில் குறிப்பிடத்தக்கவர்கள்.
இந்தச் சிற்றரசர்களில் சிலர், தங்களுக்குள் சில ஒப்பந்தங்களைச் செய்து கொண்டனர். அந்த ஒப்பந்தங்கள் கல்வெட்டுகளாகவும் பொறிக்கப்பட்டன. அதில் ஒரு கல்வெட்டுதான் 20 வரிகளைக் கொண்ட அரகண்டநல்லூர் கல்வெட்டு.
கல்வெட்டு என்ன சொல்கிறது?
அந்தக் கல்வெட்டில் பின்வரும் செய்தி காணப்படுகிறது.
“(ஸ்வஸ்தி) ஸ்ரீ திரிபுவனச் சக்கரவ(ர்)த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு உயஅ ஆவது கிளியூர் மலையமான் இரை -யான் ஆன இரா[ஜ|ரா|ஜ]” சேதிராயற்கு கிளியூர் மலையமான் அழகிய நாயன் ஆகாரசூரநாந இராஜகெம்பீரச் சேதிராயநேந் இ….
…க்கு திருவறையணி நல்லூர் ஒப்பொருவருமில்லாத நாயனார் கோவிலிலே கல்லும் வெட்டிக் குடுத்தேன் இரா[ஜ]ரா[ஜ]ச்சேதியராயற்கு இராஜகம்பீரச் சேதியராயனேன்”
என்பது இந்தக் கல்வெட்டு வாசகம்.
அதாவது, இந்த ஒப்பந்தம் மூன்றாம் குலோத்துங்கனின் 28ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1205-06 ஆண்டு) சிற்றரசர்கள் கிளியூர் மலையமான்களான “இராசராச சேதி ராயனும், அழகிய நாயன் ஆகாச சூரனான ராஜ கம்பீர சேதிராயனும் விஷி ஆண்டு ஐப்பசி மாதம் செவ்வாய்க்கிழமை” (27-09-1205) செய்து கொண்ட ஒப்பந்தம் என விவரிக்கிறார் விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் முனைவர் ரமேஷ்.
“ஒருவருக்கு ஒருவர் போர் புரியாமல் இருக்கவும் உறவினர்கள் என்றாலும் எதிரிகள் என்றாலும் இருவருக்கும் ஒன்று போலவே அமைத்துக்கொள்ளவும் இரு நாட்டினரும் அவரவர் சொத்துகளுக்குப் பாதுகாப்பாகவும் சேதம் விளைவிக்காமலும் இருக்கவும் எந்தச் சூழலிலும் இரு தரப்பும் சண்டையிடாமல் இணக்கமாகவே இருக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் நிபந்தனைகளை உருவாக்கி, அதை ஓர் ஒப்பந்தமாக மாற்றி உறுதி செய்தனர். அதைத்தான் இந்தக் கல்வெட்டு கூறுகிறது,” என்கிறார் ரமேஷ்.
12 நிபந்தனைகள்
அந்தக் கல்வெட்டில் பின்வரும் ஒப்பந்த நிபந்தனைகள் இடம்பெற்றிருந்தன.
ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதில்லை.
இருவரில் விருந்தினர்கள் யாருடைய விருந்தினர்களானாலும் இருவருக்கும் விருந்தினர்கள்தான்.
இருவரில் யாருடைய எதிரிகளானாலும் இருவருக்கும் எதிரிகள்தான்.
இருவரும் ஒருவருக்கொருவர் யாருடைய சொத்துகளுக்கோ அல்லது உயிர்களுக்கோ சேதம் ஏற்படுத்தவோ அல்லது சேதப்படுத்துவதற்குக் காரணமாகவோ அமைய மாட்டோம்.
இருவரும் ஒருவருக்கொருவர் ஒரே முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்.
மூன்றாம் குலோத்துங்க சோழ தேவரின் 27ஆம் ஆட்சியாண்டில் எந்த அளவு தங்கள் நாட்டின் எல்லை இருந்ததோ அதே அளவையே எல்லைகளாக வைத்துக்கொள்ள வேண்டும்.
புதிய நிலங்களை வென்றால் அதைச் சமமாகப் பங்கிட்டு கொள்ள வேண்டும்.
தங்களுடைய போர்ப் படைகளை வாணகோவரையனுக்கோ அல்லது அவரது சகோதரர்களுக்கோ அனுப்பி வைத்துப் போரிடமாட்டோம்.
அவர்களுடன் நட்போ அல்லது உடன்பாடோ ஏற்படுத்த வேண்டுமெனில் அதை உடனுக்குடன் பேரரசன் மூன்றாம் குலோத்துங்கனுக்கு தெரிவிப்பது.
இருவரும் சூழ்நிலைக்குத் தக்கவாறு பேரரசுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்வது.
எதிரி ஒருவரால் தாக்கப்படும்போது தேவையான போர்ப் படைகளைத் தங்கள் ராஜ்யத்தில் உள்ள பிள்ளை மற்றும் படை முதலிகளைத் தயங்காமல் அளித்து பயமின்றி போரிடச் செய்து வெற்றிகொள்ளச் செய்தல்.
ராஜ காரியம் செய்யும்போது இருவரும் இணைந்தே செயல்பட வேண்டும்.
இந்த ஒப்பந்தம் அகரம் பிடாரியாருக்கு பலி கொடுத்து ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.
போர்க்காலத்தில் உதவ ஒப்பந்தம்
தொடர்ந்து இதே கிளியூர் மலையமான், வாணகோவரையன் என்ற சிற்றரசனுடன் கி.பி.1191ஆம் ஆண்டு (15 ஆண்டுகளுக்கு முன்பு) ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தக் கல்வெட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர் கோட்டையில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோவிலில் இருக்கிறது.
அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோவிலின் வெளிப்பிரகாரத்தின் மேற்குச் சுவற்றில் உள்ள இந்தக் கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழனின் 18வது ஆட்சி ஆண்டில் பொறிக்கப்பட்டது.
“ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவந சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோ தூங்க சோழ தேவர்க்கு யாண்டு 13வது திருக்கோவலூருடைய கிளியூர் மலையமான் சூரிய தேவர் நீரேற்றா….” என்று தொடங்கும் இந்தக் கல்வெட்டு திருக்கோவிலூரை தலைநகராகக் கொண்டு மலையமான் நாட்டை ஆண்டு வந்த சூரிய தேவன் நீரேற்றனான ராஜராஜ தேவனும், ஆறகளூரை தலைநகராகக் கொண்டு வானகப்பாடி நாட்டை ஆண்டு வந்த பொன் பரப்பினான குலோத்துங்க சோழ வாண கோவரையனும் உடன்பாடு செய்துகொண்ட ஒப்பந்தக் கல்வெட்டு.
இதில் ஒருவருக்கொருவர் போர்க்காலத்தில் உறுதுணையாக இருக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி ஒருவர் கல்யாணபுரத்துக்குக் கிழக்கிலும் மற்றொருவர் வடக்கிலும் தங்கள் படைகளை நிறுத்த வேண்டும் என்றும், யாராவது ஒருவர் படையெடுத்து வேறு மன்னரிடம் போரிட்டால் மற்றவர் படை முதலிகளையும் படையையும் குதிரைகளையும் வழங்க வேண்டும் என்றும் போர்க் காலத்தில் உதவி செய்வது தொடர்பான ஒப்பந்தத்தை விளக்குகிறது என்கிறார் பேராசிரியர் ரமேஷ்.