படக்குறிப்பு, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீர், சௌதி அரேபிய பாதுகாப்பு அமைச்சர் காலித் பின் சல்மான் சந்திப்பு
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீர், சௌதி அரேபிய பாதுகாப்பு அமைச்சர் காலித் பின் சல்மானைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
சௌதி அரேபியாவின் ‘அராம்கோ’ எண்ணெய் நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலை மீது இரான் தாக்குதல் நடத்திய சில நாட்களுக்குப் பிறகு இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.
சௌதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளது. இதன்படி, ஒரு நாட்டின் மீதான தாக்குதல் மற்றொரு நாட்டின் மீதான தாக்குதலாகக் கருதப்படும்.
பாகிஸ்தான் இரானுடனும் நல்லுறவைக் கொண்டுள்ளது. பிபிசி உருது செய்தியின்படி, இரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை பாகிஸ்தான் கண்டித்துள்ளது. இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதையும் அது கண்டித்துள்ளது.
ஆனால், இரானின் பதிலடி தாக்குதல்களுக்குப் பிறகு, சௌதி அரேபியாவிற்கு ஆதரவாக நிற்பதாக பாகிஸ்தான் உறுதியளித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், சௌதி அரேபியா, குவைத், கத்தார், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் பிற இடங்களில் இரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்புத் துறையின் (ISPR) தகவலை மேற்கோள் காட்டிய பிபிசி உருது, சௌதி அரேபியா மீதான இரானிய டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையின் தீவிரம் மற்றும் அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து முனீர் மற்றும் சௌதி பாதுகாப்பு அமைச்சர் இருவரும் விவாதித்தனர் என கூறியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த விவாதம் நடந்தது. கடந்த ஆண்டு இரு நாடுகளும் ‘உத்தி சார் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
‘இரான் போன்ற ஒரு நட்பு நாடு எந்தவொரு தவறான புரிதலையும் தவிர்க்கும் என்றும், நெருக்கடிக்கு அமைதியான தீர்வு காண நட்பு நாடுகளுடன் ஒத்துழைக்கும் என்றும் ஆசிம் முனீர் மற்றும் காலித் பின் சல்மான் நம்பிக்கை தெரிவித்தனர் என்கிறது பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்புத் துறை.
பட மூலாதாரம், Harun Ozalp/Anadolu via Getty Images
பாகிஸ்தான் எச்சரிக்கை மட்டும் விடுக்குமா அல்லது களத்தில் இறங்குமா?
நிபுணர்களின் கூற்றுப்படி, இரான் போர் நீண்ட காலம் நீடித்தால், பாகிஸ்தானின் எரிசக்தி பாதுகாப்பு ஆபத்தில் சிக்கக்கூடும். பிபிசி உருதுவிடம் பேசிய வெளியுறவு விவகார ஆய்வாளர் முனைவர் கமர் சீமா, பாகிஸ்தானின் பல எரிசக்தி தேவைகள் இரானால் பூர்த்தி செய்யப்படுவதாகக் கூறினார்.
பாகிஸ்தானின் மோசமான பொருளாதார நிலை, அதை ஏதாவது ஒரு பக்கம் சாயும்படி கட்டாயப்படுத்தலாம் என்கிறார் பாகிஸ்தானிய பத்திரிகையாளரும் தொகுப்பாளருமான அஸ்மா ஷிராசி.
பாகிஸ்தான் சௌதி அரேபியாவுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் இரான் ஓர் அண்டை நாடு மற்றும் ஆழமான கலாசாரத் தொடர்புகளைக் கொண்டது.
ஜெனரல் ஆசிம் முனீர் மற்றும் காலித் பின் சல்மான் இடையிலான இந்தச் சந்திப்பு வியூக ரீதியாக மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ப்ளூம்பெர்க் செய்தியின்படி, சில மாதங்களுக்கு முன்பு துருக்கியும் பாகிஸ்தான் மற்றும் சௌதி அரேபியாவின் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைய விருப்பம் தெரிவித்திருந்தது.
இது ‘இஸ்லாமிய நேட்டோ’ (Islamic NATO) போல பார்க்கப்பட்டது. நேட்டோவின் 5-வது விதியின்படி, அதன் ஓர் உறுப்பினர் மீதான தாக்குதல் அனைத்து உறுப்பினர் நாடுகள் மீதான தாக்குதலாகக் கருதப்படும்.
எவ்வாறாயினும், பாகிஸ்தான் வெறும் வாய்மொழி எச்சரிக்கையுடன் நிறுத்திக் கொள்ளுமா அல்லது சௌதி அரேபியாவுடன் இணைந்து இரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.
பட மூலாதாரம், SAUDI PRESSS AGENCY
படக்குறிப்பு, சௌதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் உடன் பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளது.
நிபுணர்கள் கூறுவது என்ன?
கமர் சீமாவின் கூற்றுப்படி, “தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தானின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது.”
பாகிஸ்தான் இரண்டு படகுகளில் பயணம் செய்கிறது என்ற கருத்தை கமர் சீமா மறுக்கிறார்.
“பாகிஸ்தான் இரானுடன் நட்புறவைப் பேணி வருகிறது, ஆனால் சௌதி அரேபியா என்று வரும்போது, ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளது. பாகிஸ்தான் எந்த விலையையும் கொடுத்து சௌதி அரேபியாவுடன் உறுதியாக நிற்கும்.” என்றார் அவர்.
மேலும் அவர் கூறுகையில், “இதுவரை சௌதி அரேபியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதுதான் தாக்குதல்கள் நடந்துள்ளன. இருப்பினும், சௌதி அரேபியாவின் நிலப்பரப்பு, அதன் சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கு எதிராக சௌதி அரசாங்கம் தாக்குதல் நடத்த விரும்பினால், பாகிஸ்தான் எந்தச் சூழ்நிலையிலும் தனது ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்காது.” என்றார்.
கமர் சீமாவின் கூற்றுப்படி, “பாகிஸ்தான் சௌதி அரேபியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் வைத்துள்ளது என்பது இரான் உட்பட உலகம் முழுவதற்கும் தெரியும், எனவே அது எப்படி பின்வாங்க முடியும்? இதனால்தான் சௌதி அரேபியாவின் ராணுவ தளங்கள் மீது இரான் மிகக் குறைவான தாக்குதல்களை நடத்தியுள்ளது.”
அஸ்மா ஷிராசி கூறுகையில் “சௌதி அரேபிய பாதுகாப்பு ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சௌதி அரேபியா மற்றும் இரான் ஆகிய இரு நாடுகளையும் தொடர்பு கொண்டார். சௌதி அரேபியாவுக்கு பாகிஸ்தானின் தேவை இருக்கும்போது, பாகிஸ்தான் பின்வாங்காது என்பதை இது உணர்த்துகிறது.” என்றார்.
பட மூலாதாரம், GOVERNMENT OF PAKISTAN
படக்குறிப்பு, சௌதி அரேபியாவுக்கு பாதுகாப்பு உதவிகளை பாகிஸ்தான் வழங்கி வரும் சூழ்நிலையில் பாகிஸ்தானுக்கு பொருளாதார உதவிகளை சௌதி அரேபியா வழங்கி வருகிறது.
சௌதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் என்றால் என்ன?
2025-ஆம் ஆண்டில் பாகிஸ்தானும் சௌதி அரேபியாவும் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொண்டன. சௌதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே சுன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகள் மற்றும் இரு நாடுகளும் வலுவான வரலாற்று உறவுகளைக் கொண்டுள்ளன.
பொருளாதார நெருக்கடியின் போது சௌதி பலமுறை பாகிஸ்தானுக்கு உதவியுள்ளது, பதிலுக்கு பாகிஸ்தானும் சௌதிக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பை உறுதியளித்து வருகிறது.
பாகிஸ்தான் – செளதி இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இரு நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீது தாக்குதல் நடந்தால், மற்ற நாடு அந்தத் தாக்குதலைத் தன் மீதான தாக்குதலாகக் கருதும். அதாவது, இப்போது பாகிஸ்தான் அல்லது சௌதி அரேபியா மீது தாக்குதல் நடந்தால், அது இரு நாடுகள் மீதான தாக்குதலாகக் கருதப்படும்.
இரு நாடுகளின் தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படைகள் இப்போது அதிக ஒத்துழைப்புடன் செயல்படும் மற்றும் உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும்.
பாகிஸ்தான் ஒரு அணு ஆயுத நாடு. இத்தகைய சூழ்நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் சௌதி அரேபியாவிற்கான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான ஓர் உத்தரவாதமாகவும் இது கருதப்படுகிறது.
இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் சௌதி அரேபியாவிடமிருந்து அதிக நிதி உதவியைப் பெற முடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
பாகிஸ்தானின் முன்னாள் தூதர் ஹுசைன் ஹக்கானி, “இப்போது பாகிஸ்தான் தனக்குத் தேவையான அமெரிக்க ஆயுதங்களை சௌதி அரேபியாவின் பணத்தில் வாங்க முடியும். டிரம்ப் நிர்வாகம் ஆயுதங்களை விற்பனை செய்ய தயாராக இருப்பதாக தெரிகிறது,” என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு தேர்தல் 2026 – உங்கள் பகுதியில் உள்ள சாதிய பிரச்னைகளை பிபிசி தமிழுடன் பகிருங்கள்
தமிழ்நாடு தேர்தலை எதிர்கொள்ளும் இந்த தருணத்தில், உங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைகளை வெளிக்கொண்டு வருவதற்கான தளத்தை பிபிசி தமிழ் வழங்குகிறது.
உங்கள் பகுதியில் சாதிய பாகுபாடா? தீண்டாமை பிரச்னை குறித்து குரல் எழுப்பியும் அரசு மற்றும் அரசியல் கட்சிகள் நடவடிக்கை எடுக்கவில்லையா?
உங்கள் பிரச்னைகளை பிபிசி தமிழுடன் பகிருங்கள். அவற்றை செய்தியாக்கி அரசிடம் கொண்டு சேர்க்கலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்த தகவல்களை உள்ளீடு செய்யுங்கள்!