படக்குறிப்பு, ஏமனின் ஷப்வா மாகாணத்தில் உள்ள பய்ஹான் மாவட்டத்தில் உள்ள ஹரிப் சந்திப்பில், ஐக்கிய அரபு அமீரகத்தால் பயிற்சி அளிக்கப்பட்ட ஜெயண்ட்ஸ் பிரிகேட் படையின் வாகனங்களும் போராளிகளும் ஜனவரி 19, 2022 அன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.கட்டுரை தகவல்
வளைகுடா பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நாடுகளான சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே இம்மாதம் தொடங்கியதிலிருந்தே பதற்றம் அதிகரித்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை மாலை ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்ட ஓர் அறிவிப்பு, பதற்றங்கள் தணியக்கூடும் என்ற ஊகங்களை ஏற்படுத்தியது. இருப்பினும், இரு நாடுகளின் முரண்பட்ட புவிசார் அரசியல் லட்சியங்கள் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஏமனில் தங்களின் ராணுவ இருப்பை முடித்துக் கொள்வதாக கூறியிருந்தது.
அந்த அறிக்கையில், “அரபு ஒத்துழைப்பு அமைப்பில் 2015-ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் பங்கு வகிக்கிறோம், ஏமனில் சட்டப்பூர்வமான அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்துவருகிறோம். 2019-ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகம் ஏமனில் தங்களின் முக்கியமான ராணுவ நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு திரும்பியது. தீவிரவாத சக்திகளை தடுக்க சில துருப்புகள் மட்டும் ஏமனில் இருந்தன. எனினும், சமீபத்திய சூழலை கருத்தில் கொண்டு மீதமுள்ள துருப்புகளையும் பாதுகாப்பு அமைச்சகம் திருப்பி அழைத்துக்கொள்கிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கு முன்பாக, ஏமனின் அதிபர் தலைமை கவுன்சிலை (Presidential Leadership Council – PLC) மேற்கோளிட்டு, 24 மணிநேரத்திற்குள் ஐக்கிய அரபு அமீரகம் ஏமனிலிருந்து அனைத்து துருப்புகளையும் திரும்ப பெற வேண்டும் என்றும் ஏமனில் உள்ள எந்த குழுக்களுக்கும் ராணுவ அல்லது பொருளாதார உதவியை வழங்கக்கூடாது என்றும் சௌதி அரேபியா தெரிவித்திருந்தது.
தொடக்கத்தில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்த ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்குமாறு ஏமனின் எந்தவொரு பிரிவையும் தாங்கள் தூண்டவில்லை எனவும் கூறியுள்ளது.
“சௌதி அரேபியாவின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையில் ஐக்கிய அரபு அமீரகம் உறுதியாக உள்ளது, அந்நாட்டின் இறையாண்மை மற்றும் தேசப் பாதுகாப்பை முழுவதும் மதிக்கிறது. முகல்லா துறைமுகத்தில் எந்தவொரு அயுதக் கப்பலும் இறக்கப்படவில்லை. அங்கு இறக்கப்பட்ட வாகனங்கள் எந்தவொரு ஏமன் குழுவுக்கானதும் அல்ல, மாறாக ஏமனில் இயங்கும் ஐக்கிய அரபு அமீரக படைகள் பயன்படுத்துவதற்கானது,” என தெரிவித்துள்ளது.
“இதுதொடர்பாக, சௌதி அரேபியாவுடன் உயர்மட்ட அளவில் ஆலோசனை நடத்திய பிறகும் அவர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. இரு நாடுகளும் நீண்ட காலமாக வலுவான உறவை கொண்டுள்ளன. ஏமனில் சட்டப்பூர்வ அரசாங்கத்திற்கு ஆதரவு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றை நாங்கள் எப்போதும் இலக்காக கொண்டுள்ளோம். பிராந்தியத்தில் அமைதியை உறுதிப்படுத்தவும் ஏமனில் நிலவும் நெருக்கடியை வேகமாக முடிவுக்குக் கொண்டு வரவும் இந்த விவகாரம் பொறுப்புணர்வுடன் தீர்க்கப்பட வேண்டும்.” என்று ஐக்கிய அரபு அமீரகம் கூறியுள்ளது.
பதற்றத்தின் ஆரம்பம்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஏமனின் துறைமுக நகரமான முகல்லாவில் சௌதி அரேபியா வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த படம் கடந்த செவ்வாய்கிழமை எடுக்கப்பட்டது
கடந்த செவ்வாய்கிழமை ஏமனின் துறைமுக நகரமான முகல்லாவில் சௌதி அரேபியா வான்வழி தாக்குதலை நடத்தியது. ஐக்கிய அரபு அமீரகத்தின் உதவியுடன் தெற்கு டிரான்சிஷனல் கவுன்சிலுக்கு (Southern Transitional Council – STC) அனுப்பப்படும் ஆயுதங்களை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சௌதி அரேபியா தெரிவித்துள்ளது.
“ஐக்கிய அரபு அமீரகத்தால் ஆதரிக்கப்படும் குழுவாக எஸ்டிசி கருதப்படுகிறது, இக்குழு தெற்கு ஏமனை தனி நாடாக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. இக்குழு தென்கிழக்கு ஏமனில் உள்ள ஹத்ராமௌட் மற்றும் அல்-மஹ்ரா போன்ற துறைமுகங்களையும் எண்ணெய் இருப்புகளையும் இம்மாதத்தின் ஆரம்ப வாரங்களில் கைப்பற்றியது.
எஸ்டிசி குழு ஐக்கிய அரபு அமீரகத்தின் உத்தரவு மற்றும் அழுத்தத்தின்கீழ் செயல்படுவதாக சௌதி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பகுதிகள் வியூக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் அங்கு எவ்வித நிலையற்ற தன்மை ஏற்பட்டாலும் சௌதி அரேபியாவின் பாதுகாப்புக்கு மட்டுமல்லாமல் ஏமனின் ஒற்றுமை மற்றும் பிராந்தியம் முழுமைக்குமான நிலைத்தன்மைக்கு கடும் அச்சுறுத்தலை விளைவிக்கும் என, சௌதி அரேபியாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எஸ்டிசி குழு என்பது என்ன, இதை தங்களின் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் என சௌதி அரேபியா கருதுவது ஏன்?
கருத்து முரண்பாடு
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, எஸ்டிசி படையினர்
இந்த கேள்விக்கு பதில் தெரிந்துகொள்ள நாம் 2014-ஆம் ஆண்டிலிருந்து தொடங்க வேண்டும், ஏனெனில், 2014-ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போரின் விளைவால் தான் ஏமனில் தற்போது சூழல் இப்படி உள்ளது.
2014-ஆம் ஆண்டு இரானால் ஆதரிக்கப்படும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தலைநகர் சனாவை கைப்பற்றினர், அப்போது அதிபர் நாட்டைவிட்டு தப்பியோடுமாறு நிர்பந்திக்கப்பட்டார்.
அப்போதைய அதிபர் ஹாதி, வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பிடமிருந்து (Gulf Cooperation Council) ராணுவ உதவியை கோரினார்.
இதையடுத்து, சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இணைந்து ஏமனில் ராணுவ நடவடிக்கைகளை தொடங்கின. ஆனால் அதிலிருந்து உறுதியான முடிவு எதுவும் இன்னும் எட்டப்படவில்லை.
இந்த சண்டையின் போது, ஹூத்திகளை முற்றிலுமாக அழிப்பது எளிதான காரியல் அல்ல என்பது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புரிந்தது, எனவே அது தன் வியூகத்தை மாற்றிக்கொண்டு, தெற்கு ஏமனில் உள்ள உள்நாட்டு போராட்டக்காரர்கள் மற்றும் பழைய பிரிவினைவாத குழுக்களை ஒருங்கிணைக்க ஆரம்பித்தது, இதன் வாயிலாக STC குழு 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
தெற்கு ஏமன் தனி நாடாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதுதான் இந்த அமைப்பின் கோரிக்கை.
தெற்கு ஏமனில் உள்ள துறைமுகங்கள், கடல் வழிப்பாதைகள் மற்றும் எண்ணெய் – எரிவாயு இருப்புகள் மீது எஸ்டிசி குழுவின் செல்வாக்கை அதிகரிக்கும் பொருட்டு, ஐக்கிய அரபு அமீரகம் அக்குழுவுக்கு ஆயுதங்கள், பயிற்சி, அரசியல் ஆதரவு உள்ளிட்ட உதவிகளை செய்துவருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதே சமயம், ஏமன் ஒருங்கிணைந்த நாடாகவே இருப்பதன் மூலம், தன் எல்லையில் பலவீனமான, ஆனால் நட்பு அரசாங்கம் இருக்கும் என சௌதி அரேபியா கருதுகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஏமன் – 2019 ஆம் ஆண்டின் சிறந்த புகைப்படம்
சில தினங்களுக்கு முன்பாக பிபிசி மானிட்டரிங் பிரிவின் ஓம்னியா அல் நாகர், ஏமன் தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சௌதி அரேபியாவுக்கு இடையேயான முரண்பட்ட நிலைப்பாட்டை சுட்டிக்காட்டினார்.
அவர் தன்னுடைய கட்டுரையில், “2015ம் ஆண்டில் ஹூத்திகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டதையடுத்து, ஏமனின் தெற்கு கடற்கரையில் கால் பதித்த ஐக்கிய அரபு அமீரகம், செங்கடல் மற்றும் துறைமுக வர்த்தக பாதைகளை அணுகும் விருப்பத்துடன் எஸ்டிசி படையினரை ஆதரித்தது.” என எழுதியுள்ளார்.
இவையனைத்தும் இரு நாடுகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளுக்கு வித்திட்டது. ஏனெனில், ஏமனில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கமும் ராணுவமும் இருக்க வேண்டும் என்பதை சௌதி அரேபியா ஆதரிக்கிறது.
சமீப ஆண்டுகளாக, ஐக்கிய அரபு அமீரகம் ஏமனில் தன் ராணுவ இருப்பை அதிகரித்துள்ளது.
சௌதி ஆதரவு பெற்ற ஏமன் அரசாங்கத்துடன் இணைந்து படைகளுக்கு பயிற்சியளிப்பது, உளவு தகவல்களை பகிர்ந்துகொள்வதை ஊக்குவிப்பது மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ஆகியவையும் இதில் அடங்கும்.
உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் மூத்த ஆய்வறிஞரான (senior fellow) ஃபஸுர் ரஹ்மான் கூற்றுப்படி, உலகின் கவனம் காஸாவின் மீது இருப்பதால், ஏமனில் எஸ்டிசி வலுவடைந்துள்ளது.
அவர் கூறுகையில், “இஸ்ரேல்-காஸா சண்டை நிறுத்தத்தில் கத்தாரின் பங்கு, சௌதி அரேபியாவின் பொருளாதார விரிவாக்கம் ஆகியவை தான் வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பில் தன்னுடைய நிலை குறித்து ஐக்கிய அரபு அமீரகம் பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க காரணமாக உள்ளன. எனவே எஸ்டிசியை ஆதரிப்பதன் மூலம், தன்னுடைய அரசியல் செல்வாக்கை தொடர ஐக்கிய அரபு அமீரகம் விரும்புகிறது. இதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை,” என்றார்.
பதற்றம் தணியுமா?
பட மூலாதாரம், Getty Images
இந்த பதற்றம் முடிவுக்கு வர வேண்டும் என, ஃபஸுர் ரஹ்மான் நம்புகிறார். அவர் கூறுகையில், “அடுத்த 5-7 ஆண்டுகளில் கூட இதனால் சௌதி அரேபியா மற்றும் ஏமன் எதையும் அடைய முடியாது; நிலைமை அப்படியேதான் இருக்கும். வளைகுடா அரசியலுக்கு தலைமை தாங்க நினைக்கும் இரு நாடுகளின் அரசியல் நிலைப்பாடுதான் இது என நினைக்கிறேன். வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பில் நாங்கள் இரண்டாவது இடத்தில் இல்லை என அந்நாடுகள் காட்ட விரும்புகின்றன.,” என்றார்.
வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பில் சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், பஹ்ரைன், கத்தார் மற்றும் குவைத் ஆகிய 6 நாடுகள் உள்ளன. இது 1981-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
அந்நாடுகளின் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசாரத்தில் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை அதிகரிப்பதே இதன் நோக்கம்.
எனினும், ஜிசிசியில் உள்ள இரு நாடுகளுக்கிடையேயான இந்த முரண்பாடுகள் ஏமன் தொடர்பானது மட்டுமல்ல.
இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு விவகாரங்களிலும் முரண்பாடு நிலவுகிறது.
உதாரணமாக, பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பில் (OPEC) எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொடர்பான முடிவுகளில் இரு நாடுகளும் பலமுறை மோதிக்கொண்டுள்ளன.
சௌதி அரேபியா பொதுவாக எண்ணெய் சந்தையில் நிலைத்தன்மையை பராமரிக்கவும் விலையை சமநிலையில் வைத்திருப்பதையும் வலியுறுத்துகிறது, ஆனால் ஐக்கிய அரபு அமீரகம் தனது அதிக உற்பத்தித் திறன் அடிப்படையில் தனது பங்கை அதிகரிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
இதுதவிர, சூடான், ஏமன் மற்றும் மற்ற பிராந்திய சச்சரவுகளில் இரு நாடுகளின் முன்னுரிமைகளும் நிலைப்பாடுகளும் முரண்பட்டதாக உள்ளன.
ஆப்பிரிக்காவில் குறிப்பாக செங்கடலில் கடலோர நாடுகள் மற்றும் முக்கிய கடல் வழிப்பாதைகளில் தன்னுடைய பிராந்திய செல்வாக்கு மற்றும் வியூக ரீதியான இருப்பை அதிகரிக்க இரு நாடுகளும் போட்டிப் போடுகின்றன.
சௌதி அரேபியா பிராந்தியளவில் ராஜீய ரீதியாகவும் உலகளாவிய முதலீடுகளின் மையமாகவும் தன்னை நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்தி வரும் வேளையில், ஐக்கிய அரபு அமீரகம் தனது ராணுவ, பொருளாதார மற்றும் ராஜீய சக்தியைப் பயன்படுத்தி ஆப்பிரிக்கா மற்றும் செங்கடல் பிராந்தியத்தில் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான ஒரு உத்தியை ஏற்றுக்கொண்டுள்ளது.
சில ஊடக தகவல்களின்படி, இத்தகைய மாறுபட்ட உத்திகள் மற்றும் விருப்பங்கள் ஒபெக் அமைப்பில் சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே எண்ணெய் உற்பத்தி தொடர்பாக பதற்றங்களுக்கு வழிவகுத்துள்ளன.