நடிகர் விஜயின் கடைசி படமாகக் கருதப்படும் ஜனநாயகன் படத்துக்கு இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதால், படக்குழு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறது.
இந்நிலையில், ஜனநாயகன் படத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய தணிக்கை வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
என்ன நடந்தது?
பட மூலாதாரம், KVN PRODUCTIONS
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் வரும் 9-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், படத்திற்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை எனவும், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரியும் KVN புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் ஆஜராகி, சில காட்சிகளை நீக்கினால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்படும் என மத்திய தணிக்கை வாரியம் கூறியதாகவும் அதனைப் படக்குழு செய்ததாகவும் கூறினார்.
ஆனால் அதன்பின்பும் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி இருப்பதாகவும் கண்காணிப்பு அதிகாரியும் இதனை உறுதி செய்த நிலையில் யாரோ புகாரளித்துள்ளதாக கூறி சான்றிதழ் வழங்கமால் இருப்பதாக அவர் கூறினார்.
மேலும், ஜனநாயகன் படம் ஐந்நூறு கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், படத்தில் மத உணர்வுகளை புண் படுத்தக்கூடிய காட்சிகள் இருப்பதாகப் புகார் வந்துள்ளதாகவும், அதனடிப்படையில்தான் படத்தை மறு தணிக்கை குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டதவும் கூறினார்.
குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றிதழ் வழங்க வேண்டுமென நிர்பந்திக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, ஜனநாயகன் படத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை நாளை (ஜனவரி 7) தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.
பட மூலாதாரம், KVN PRODUCTIONS
சென்சார் நடைமுறை செயல்படுவது எப்படி?
ஒரு படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படும் முறை குறித்து பேசிய சென்சார் போர்டு பிராந்திய தலைவர் பொறுப்பில் இருந்த நடிகர் எஸ்.வி.சேகர், “ஒரு படத்தை பார்த்த பிறகு சென்சார் போர்டு உறுப்பினர்கள் தங்கள் கருத்து, ஆட்சேபம் தெரிவிக்கலாம். அதை எழுத்து வடிவில் கொடுப்பார்கள். அதற்கு தக்கப்படி யு, யு/ஏ, ஏ உள்ளிட்ட வகைகளில் ஒரு படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படும். கட், மியூட் கொடுத்தால் அதைப் படக்குழுவினர் செயல்படுத்துவார்கள்.
உடன்பாடு இல்லாத படக்குழுவினர், அடுத்த கட்ட நடைமுறையான ரிவைசிங் கமிட்டி என்ற நடைமுறைக்கு செல்லலாம். கோர்ட்டுக்கு சென்று தங்கள் தரப்பு நியாயத்தை சொல்லி, தங்களுக்கு ஏற்ற சான்றிதழ் பெறலாம்” என்று அவர் கூறினார்.
“ஜனநாயகன் பொறுத்தவரையில் இப்போது கோர்ட்டுக்கு சென்று இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரையில் ஒரு படம் உருவாக்க கதைக்கு பலமாதம் எடுக்கிறார்கள். படப்பிடிப்புக்கு பல மாதம் எடுக்கிறார்கள். ஆனால் சென்சார் சான்றிதழை மட்டும் உடனே பெற வேண்டும் என நினைக்க கூடாது. ரிலீஸ் தேதியை வைத்துக்கொண்டு அவசரமாக சென்சார் போகக்கூடாது. அரசு சட்ட திட்டங்கள், நடைமுறைக்கு கொஞ்சம் அவகாசம் கொடுக்க வேண்டும்” என்கிறார் எஸ்வி சேகர்.