• Mon. Feb 9th, 2026

24×7 Live News

Apdin News

ஜனாதிபதி நிதியத்தின் டிஜிட்டல் மாற்றம் ; ஒரே வருடத்தில் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

Byadmin

Feb 9, 2026


ஜனாதிபதி நிதியம் பிரதேச செயலகங்களுக்கு பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் விளைவாக, ஒரு வருட காலப்பகுதிக்குள் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்கள் கிடைப்பது 59% இனால் அதிகரித்துள்ளது.

இதற்கமைய, 2025 ஆம் ஆண்டில் ஜனாதிபதி நிதியத்திற்கு 5,277 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. 2024 ஆம் ஆண்டில் 3,313 விண்ணப்பங்களும், 2023 ஆம் ஆண்டில் 3,456 விண்ணப்பங்களும் கிடைத்துள்ளன.

ஜனாதிபதி நிதியத்தை பிரதேச செயலகங்களுக்கு பரவலாக்கல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலின் பலனாக, 2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் மேலதிகமாக 1,964 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இந்த விண்ணப்பதாரர்களில் 70% க்கும் அதிகமானோருக்கு இதுவரையில் மருத்துவ உதவிகள் வழங்கி முடிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி நிதியத்திலிருந்து மருத்துவ உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் விண்ணப்பங்கள் வந்தவண்ணம் உள்ளன. 2025 ஆம் ஆண்டில் வட மாகாணத்திலிருந்து விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுவது 253%  வீதத்தினால் அதிகரித்துள்ளதுடன், கிழக்கு மாகாணத்தில் 135% இனாலும், மத்திய மாகாணத்தில் 116% இனாலும் மற்றும் ஊவா மாகாணத்தில் 108% இனாலும் விண்ணப்பங்கள் கிடைப்பது அதிகரித்துள்ளது.

பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள், 2025 பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்கள் ஊடாகவும் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டம் மிகவும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால், ஜனாதிபதி நிதியத்தின் ஏனைய சேவைகளையும் பரவலாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, வறுமை ஒழிப்பு  நிவாரணகள், கல்வி புலமைப்பரிசில் வழங்கல், கல்வியில் திறமை காட்டும் மாணவர்களை பாராட்டுதல், விசேட தேவையுடையோருக்கான நிதிஉதவிகள், காட்டுயானை தாக்குதலினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான நிவாரணக் கொடுப்பனவுகள், தேசிய ரீதியில் நாட்டுக்காக சேவையாற்றியவர்களைக் கௌரவித்தல், விபத்துக்கள் மற்றும் அனர்த்தங்களின் போது வழங்கப்படும் நிவாரணங்கள் உள்ளிட்ட ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து சேவைகளையும் ஒன்லைன் (Online) மூலம் அணுகுவதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதாவது, 47 வருட காலமாக கொழும்பிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும், எந்தவொரு பிரதேச செயலகத்தின் ஊடாகவும் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு, நன்மைகளை எதிர்பார்க்கும் மக்களுக்கு தற்போது கிடைத்துள்ளது.

By admin