சர்ச்சைக்குரிய இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் பாகிஸ்தானில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் கௌரவ விருந்தினராக புதன்கிழமை அழைக்கப்பட்டார்.
ஆனால் ஆதரவற்ற சிறுமிகளை கெளரவிக்க அவர் மறுத்துவிட்டார்.
சிறுமிகள் மேடைக்கு வந்தவுடன் ஜாகிர் நாயக் பின்வாங்கினார். நாயக் இந்தப் பெண்களை ‘நா மஹ்ரம்’ என்று கூறி அவர்களிடமிருந்து தூர விலகினார்.
ஜாகிர் நாயக்கின் இந்த நிலைப்பாடு பாகிஸ்தானில் பெரும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.
இஸ்லாத்தில், ‘நா-மஹ்ரம்’ என்பது நேரடி ரத்த உறவு இல்லாத திருமணமாகாத பெண்களை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான ஜாகிர் நாயக்கின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிறுமிகள் நாயக் அருகில் வந்தவுடன் அவர் மேடையை விட்டு நகர்ந்து செல்வதை வைரலான வீடியோவில் பார்க்க முடிகிறது.
‘நா-மஹ்ரம்’ என்றால் என்ன
ஆதரவற்ற சிறுமிகளுக்கு உதவும் பாகிஸ்தான் ஸ்வீட் ஹோம் அறக்கட்டளை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
நிகழ்ச்சியின் அறிவிப்பாளர் இந்த சிறுமிகளை ’மகள்கள்’ என்று அழைத்தபோது, அவர்களை மகள்கள் என்று அழைக்கவோ தொடவோ கூடாது என்று நாயக் கருதினார்.
இந்த பெண்கள் ‘நா-மஹ்ரம்’ என்று அவர் கூறினார். ஜாகிர் நாயக்கின் இந்த நடத்தை கேவலமானது, பாசாங்குத்தனம் நிறைந்தது மற்றும் பெண்களை இழிவுபடுத்துவதாக உள்ளது என்று பாகிஸ்தானில் பலர் கூறி வருகின்றனர்.
அதன் காணொளியை பகிர்ந்த பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் உஸ்மான் செளத்ரி, “முன்னாள் பாகிஸ்தான் எம்பி ஜம்ருத் கான், ஆதரவற்ற சிறுமிகளை கெளரவிக்க மேடைக்கு அழைத்தார். ஆனால் ஜாகிர் நாயக் அவர்களை கெளரவிக்காமல் மேடையை விட்டு வெளியேறினார்” என்று பதிவிட்டார். இந்த பெண்கள் ‘நா-மஹ்ரம்’ என்று ஜாகிர் நாயக் கூறினார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்லாத்தில், ‘நா-மஹ்ரம்’ என்றால் ரத்த உறவு இல்லாதவர்கள் என்றும் ‘மஹ்ரம்’ என்றால் ரத்த உறவுள்ளவர் என்றும் பொருள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை செளதி அரேபியாவில் பெண்கள் தங்கள் ‘மஹ்ரம்’ உறவுள்ள ஆண்களுடன் மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்ற சட்டம் இருந்தது.
இந்த உறவுகள் சகோதரனாகவோ, கணவனாகவோ, மகனாகவோ, மருமகனாகவோ, தாய்வழி மாமாவாகவோ அல்லது சித்தப்பாவாகவோ இருக்கலாம்.
ஆனால் 2019-ஆம் ஆண்டில் செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இந்த விதியை மாற்றினார். இப்போது அந்த நாட்டில் பெண்கள் தனியாக வெளியே செல்ல முடியும்.
ஜாகிர் நாயக்கின் வீடியோவை மறு ட்வீட் செய்த பாகிஸ்தான் வழக்கறிஞர் சரிஹா பெனஸிர், ” ஜாகிர் நாயக் ஒரு மத அறிஞர் மற்றும் பாகிஸ்தானின் விருந்தினர். ஆனால் பெண்கள் தொடர்பான அவரது அணுகுமுறை அருவருப்பானது. போலித்தனம் நிறைந்தது மற்றும் பெண்களை இழிவுபடுத்துவதாக உள்ளது. இந்த சிறுமிகளுக்கு இது எவ்வளவு சங்கடத்தையும் வேதனையையும் அளித்திருக்கும். என்னுடைய இஸ்லாம் இப்படியானது அல்ல,” என்று பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கும் ஜாகிர் நாயக்
பாகிஸ்தானின் மார்க்சிய கோட்பாடு கோட்பாடு கொண்ட பேராசிரியர் தைமூர் ரெஹ்மானும் ஜாகிர் நாயக்கின் நடத்தையை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு, “இவர்கள் ஆதவற்ற சிறுமிகள். இந்த சிறுமிகளுடன் கைகுலுக்குவது மற்றும் அவர்களின் தலையில் கை வைத்து ஆசி வழங்குவது ஒருபுறம் இருக்கட்டும்.. அவர்களை கெளரவிப்பதும் கூட இஸ்லாத்திற்கு எதிரானது என்று ஜாகிர் நாயக் கருதுகிறார்,” என்று எழுதியுள்ளார்.
“நா-மஹ்ரம் என்ற சொல் வயது வந்த பெண்களுக்காக பயன்படுத்தப்படுகிறது, சிறுமிகளுக்கு அல்ல. இங்கு உடல் ரீதியான தொடர்பு எதுவும் இல்லை. ஆதரவற்ற சிறுமிகளை கௌரவிப்பதை இஸ்லாம் எதிர்கிறதா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
ஜாகிர் நாயக்கின் நிலைப்பாட்டை ஆட்சேபித்த பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் அப்பாஸ் நாஸிர், “ஜாகிர் நாயக்கை ஏன் பாகிஸ்தானுக்கு அழைத்தார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. முதலாவதாக ஜாகிர் நாயக்கை அரசு அழைத்துள்ளது. அவரை ராணா மஷுத் வரவேற்றார். நாயக் நான்கு வாரங்களுக்கு மனதை மாசுபடுத்துவார்,” என்று குறிப்பிட்டார்.
அதேசமயம் பொருளாதார விவகாரங்கள் குறித்து எழுதும் பாகிஸ்தான் பத்திரிகையாளர் யூசுப் நஸர், ஜாகிர் நாயக்கின் காணொளியை மறுபதிவு செய்து, “பாகிஸ்தானில் ஜாகிர் நாயக் போன்ற பலர் ஏற்கனவே உள்ளனர். இனி வேறு யாருடைய தேவையும் இல்லை,” என்று எழுதினார்.
பாகிஸ்தானில் உள்ள ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் ஜாகிர் நாயக்கின் நிலைப்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள் என்று டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய ஆய்வு மையத்தின் தலைவர் அக்தருல் வாஸேயிடம் கேட்டபோது,
“முதல் விஷயம், இந்தியாவை சீண்டுவதற்காக பாகிஸ்தான் ஜாகிர் நாயக்கை அழைத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு ஏற்கனவே மோசமாக இருக்கும் நிலையில் பாகிஸ்தான் ஜாகிர் நாயக்கை அழைத்துள்ளது. பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு. அங்கு ஜாகிர் நாயக் இஸ்லாத்தை முன்வைக்கும் விதமானது அது எப்படிப்பட்ட இஸ்லாமிய நாடு’ என்பதைக் காட்டுகிறது,” என்று அவர் பதில் அளித்தார்.
ஜாகிர் நாயக்கை பாகிஸ்தான் அழைத்தது ஏன்?
ஜாகிர் நாயக் இந்திய காவல்துறையால் தேடப்பட்டு வருகிறார். அவர் இந்தியாவில் பணமோசடி மற்றும் வெறுப்பு பேச்சு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்.
இரு சமூகங்களுக்கு இடையே வெறுப்பு மற்றும் பகைமையை அதிகரித்ததாக இந்தியாவில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆனால் இந்திய சட்டத்திற்கு எதிராக தான் எதுவும் செய்யவில்லை என்று நாயக் கூறுகிறார்.
ஜாகிர் நாயக்கின் அடிப்படைவாத மதக் கருத்துக்கள் காரணமாக அவருக்கு வங்கதேசம், இலங்கை மற்றும் பிரிட்டனிலும் தடை உள்ளது.
“ஜாகிர் நாயக் பாகிஸ்தானுக்கு அரசு விருந்தினராக அழைக்கப்பட்டதில் எனக்கு வருத்தம் உள்ளது. ஆனால் ஆச்சரியம் இல்லை. அரசு நெருப்பில் எண்ணெய் ஊற்றும் வேலையை செய்கிறது,” என்று பாகிஸ்தானின் பிரபல எழுத்தாளர், அரசியல் விமர்சகர் மற்றும் சமூக செயற்பாட்டாளரான பர்வேஸ் ஹூத்பாய், ஜெர்மன் அரசு ஒளிபரப்பு அமைப்பான ’டி டபிள்யூ’ விடம் தெரிவித்தார்.
“செளதி அரேபியா அடிப்படைவாத இஸ்லாத்தில் இருந்து விலகிச் செல்கிறது. ஆனால் பாகிஸ்தான் அதன் தீவிர பாதுகாவலராக மாறி வருகிறது. ஜாகிர் நாயக்கை அரசு விருந்தினராக அழைத்திருப்பது இதைத்தான் காட்டுகிறது,” என்றார் அவர்.
ஜாகிர் நாயக் தற்போது மலேசியாவில் வசிக்கிறார். அங்கும் தனது இன உணர்வைத் தூண்டும் கருத்துகளுக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டி இருந்தது.
ஜாகிர் நாயக் பொதுக் கூட்டங்களில் மதபோதனை செய்வதற்கு 2019 ஆகஸ்டில் மலேசிய காவல்துறை தடை விதித்தது. அவரது கருத்துகள் தொடர்பாக மலேசிய போலீசார் அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.
ஜாகிர் நாயக் இந்தியாவில் பல கிரிமினல் வழக்குகளில் தேடப்பட்டாலும் பாகிஸ்தானில் அவரது வரவேற்பில் எந்தக் குறைவும் காணப்படவில்லை.
பாகிஸ்தான் பிரதமர் ஜாகிர் நாயக்கிடம் என்ன சொன்னார்?
ஜாகிர் நாயக் செப்டம்பர் 30-ஆம் தேதி பாகிஸ்தானை அடைந்தார். மேலும் இந்த மாதத்தின் கடைசி வாரம் வரை பல நகரங்களில் அவருக்கு நிகழ்ச்சிகள் உள்ளன.
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் புதன்கிழமை ஜாகிர் நாயக்கை சந்தித்தார்.
அவர் இஸ்லாத்தை உலகம் முழுவதும் பரப்புவதால் முஸ்லிம்கள் அவரைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்கள் என்று ஷாபாஸ் ஷெரீஃப் ஜாகிர் நாயக்கிடம் கூறினார்.
”நீங்கள் திருக்குர்ஆனின் விழுமியங்களை உலகம் முழுவதும் பரப்புகிறீர்கள். இதைத் தவிர உலகம் முழுவதும் இஸ்லாத்தை பிரசாரம் செய்கிறீர்கள்,” என்று ஷாபாஸ் ஷெரீஃப் ஜாகிர் நாயக்கை புகழ்ந்து பாராட்டினார்.
“இஸ்லாத்தின் உண்மையான பிம்பத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதால் ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகமும் உங்களைப் பற்றி பெருமிதம் கொள்கிறது. உங்கள் போதனைகள் மீது இளைஞர்கள் மத்தியில் அதிக மோகம் உள்ளது.
உங்கள் போதனைகளால் நான் தனிப்பட்ட முறையில் பலன் அடைந்துள்ளேன். உங்களிடமிருந்து இஸ்லாம் பற்றிய மதிப்புமிக்க பாடங்களை நாங்கள் பெறுகிறோம். பாகிஸ்தான் மக்கள் உங்களை மிகவும் நேசிக்கிறார்கள். உங்களது உடல்நிலை நன்றாக இருப்பதுடன், உங்கள் மகன்களும் இஸ்லாத்தின் சேவையில் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று பாகிஸ்தான் பிரதமர் கூறினார்.
2006 இல் ஜாகிர் நாயக்குடனான தனது சந்திப்பையும் ஷாபாஸ் ஷெரீஃப் நினைவு கூர்ந்தார்.
“உலகில் இஸ்லாமிய கொள்கைகளின் அடிப்படையில் உருவான ஒரே நாடு பாகிஸ்தான் மட்டுமே. பாகிஸ்தான் மேலும் இஸ்லாமிய விழுமியங்களை செயல்படுத்தும் என நம்புகிறேன்” என்று ஷாபாஸ் ஷெரீஃப்பை சந்தித்த பிறகு ஜாகிர் நாயக் கூறினார்.
“நான் 33 ஆண்டுகளுக்கு முன்பு 1991 இல் பாகிஸ்தானுக்கு வந்திருந்தேன். ஆனால் அது தனிப்பட்ட பயணமாக இருந்தது. அப்போது நான் மத போதனை செய்ய ஆரம்பித்திருக்கவில்லை. இந்த முறை பாகிஸ்தான் அரசு என்னை அழைத்துள்ளது,”என்று ஜாகிர் நாயக் கூறினார்.
“பாகிஸ்தானியர்கள் என்னை மிகவும் அன்புடன் சந்திக்கிறார்கள். பாகிஸ்தானுக்கு வருமாறு எனக்கு அதிகபட்ச அழைப்புகள் வந்தன. உலகிலேயே மிகவும் சிறந்த நூல் குர்ஆன் என்று பாகிஸ்தானியர்களிடம் சொல்ல நான் விரும்புகிறேன்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு