4
இந்திய திரையிசையுலகில் சாதனை படைத்து வரும் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மெண்டல் மனதில்’ படத்தில் இடம்பெற்ற ‘உயிரே உயிரே’ என்ற முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், உருவாகி வரும் ‘மெண்டல் மனதில்’ திரைப்படத்தில் ஜீ வி பிரகாஷ் குமார் – மாதுரி ஜெயின்- சீதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
அருண் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மாறுபட்ட களத்தில் உணர்வுபூர்வமான காதல் கதையாக தயாராகும் இந்தத் திரைப்படத்தை பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார் தயாரிக்கிறார்.
இப்படத்தின் நான்கு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில், ‘யார் இந்த பூவோ கை காட்டுதே..’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் செல்வராகவன் எழுத பின்னணி பாடகர் கபில் கபிலன் பாடியிருக்கிறார்.மெல்லிசையாக உருவாகி இருக்கும் இந்தப் பாடல் காதல் உணர்வை துல்லியமாக பிரதிபலிப்பதால் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.
இதனிடையே செல்வராகவன் – ஜீ வி. பிரகாஷ் குமார் கூட்டணியில் உருவாகும் ‘மெண்டல் மனதில்’ படத்தின் பாடலுக்கும், படைப்பிற்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.