2
இதுவரை காலமும் வார இறுதி நாள்களில் சேவையை முன்னெடுத்து வரும் குளிரூட்டப்பட்ட நகர் சேர் கடுகதி ரயில் சேவை எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் தினசரி சேவையாக கல்கிஸையில் இருந்து காங்கேசன்துறை வரை முன்னெடுக்கப்படவுள்ளது என்று யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலைய அத்தியட்சகர் ரீ.பிரதீபன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் ஊடகங்களுக்கு இன்று கருத்துக் கூறுகையில்,
“பொதுமக்கள் ரயில்வேத் திணைக்களம் மற்றும் துறைசார் தரப்பினரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்தச் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதுவரை காலமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இந்த ரயில் தனது சேவையை முன்னெடுத்துவந்தது.
இந்நிலையில் எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் கல்கிஸை ரயில் நிலையத்தில் இருந்து காலை 5.15 மணிக்கு தனது சேவையை முன்னெடுப்பதுடன் கொழும்பு கோட்டையில் இருந்து காலை 5.45 மணிக்கு யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணிக்கும்.
யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை முற்பகல் 11.49 இற்கு அது வந்தடையும். அதன்பின்னர் காங்கேசன்துறையை நண்பகல் 12.13 இற்குச் சென்றடையும்.
மீண்டும் பிற்பகல் 1.30 இற்கு காங்கேசன்துறையில் இருந்து தனது பயணத்தை ஆரம்பிக்கும் அந்த ரயில் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.12 இற்குப் புறப்பட்டு கொழு்ம்பு கோட்டையை முன்னிரவு இரவு 8.33 சென்றடையும்.
அதேவேளை, கல்கிஸையை முன்னிரவு இரவு 8.55 இற்குச் சென்றடையும்.
இந்த ஒழுங்கில் இந்தச் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேநேரம் இந்தக் கடுகதி ரயில் சேவைக்கான ஆசன முற்பதிவுகள் அடுத்த ஒருசில தினங்களில் மேற்கொள்ள முடியும்.
அதனை ரயில்வே திணைக்களத்தின் அதிகாரபூர்வ இணையத்திலும் முன்னெடுக்க முடியும்.
இதேவேளை, இதுவரை காலமும் காலை 5.45 மணிக்குக் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கிப் புறப்பட்ட யாழ். தேவி ரயில் எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் காலை 6.35 மணிக்குத் தனது சேவையை ஆரம்பிக்கும்.” – என்றார்.