7
அமெரிக்க முதல் பெண்மணியான மெலானியா டிரம்ப், தன்னை ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் இணைக்கும் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இப்படியான குற்றச்சாட்டுகள் “இன்றே முடிவடைய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
வியாழக்கிழமை வெளியிட்ட எதிர்பாராத அறிவிப்பில், எப்ஸ்டீனின் பாலியல் கடத்தல் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்காக காங்கிரஸ் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், எப்ஸ்டீன் தான் தன்னை டிரம்பிடம் அறிமுகப்படுத்தியதாக சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளையும் மெலானியா கடுமையாக மறுத்தார். அவை தனது கண்ணியத்தை குலைக்கும் “தீங்கிழைக்கும் முயற்சிகள்” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த அறிவிப்பை வெளியிட காரணம் என்ன என்பது தெளிவாக இல்லை. முன்கூட்டியே இதுகுறித்து எந்த தகவலும் வெளியிடப்படாத நிலையில், வெள்ளை மாளிகையின் அன்றைய அட்டவணையிலும் இந்த விஷயம் குறிப்பிடப்படவில்லை.
இதுகுறித்து, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது மனைவியின் இந்த அறிவிப்பைப் பற்றி முன்கூட்டியே தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
மெலானியா டிரம்ப், தாம் எப்ஸ்டீனின் பாதிப்புக்குள்ளானவர் அல்ல என்றும், 2000 ஆம் ஆண்டு ஒருமுறை மட்டும் அவரை சந்தித்ததாகவும் கூறினார்.