பட மூலாதாரம், US Department of Justice
‘நான் பெண்களை பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தும் நபர் அல்ல.. குற்றம் செய்த நபர் மட்டுமே. ஒரு கொலைகாரனுக்கும், ஒர் உணவுப்பொருளை திருடுபவனுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் போன்றது இது” என்று 2011-ல் நியூயார்க் போஸ்ட் இதழிடம் ஜெஃப்ரி எப்ஸ்டீன் கூறினார்.
பாலியல் தேவைகளுக்காக ஆள் கடத்தல் குற்றச்சாட்டுகளில் ஜாமீன் கிடைக்காமல் காத்திருந்த நிலையில், 2019 ஆகஸ்ட் 10 அன்று நியூயார்க் சிறையில் எப்ஸ்டீன் உயிர் இழந்தார்.
ஒரு சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதற்காக அவர் தண்டிக்கப்பட்டு, பாலியல் குற்றவாளியாக அவர் பதிவு செய்யப்பட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இது நடந்தது.
சிறுமிகளை பாலியல் உறவுக்காக பயன்படுத்தும் “பெரிய வலையமைப்பு” ஒன்றை நடத்தினார் என அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஆனால் அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
நவம்பர் 2025-ல், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ‘எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மை சட்டத்தை’ பெருமளவில் அங்கீகரித்தன.
அதன் பிறகு, அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த மசோதாவில் கையெழுத்திட்டார். எப்ஸ்டீன் மீதான குற்றவியல் விசாரணைகள் தொடர்பான அனைத்து கோப்புகளையும் டிசம்பர் 19-க்குள் வெளியிடுமாறு நீதித்துறைக்கு அது உத்தரவிட்டது.
ஜனவரி 30 அன்று, அமெரிக்க நீதித்துறை மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஆவணங்களை வெளியிட்டது. அதில் ஒரு வீடியோவில், “நீங்கள் உங்களை ஒரு டெவில் என்று நினைக்கிறீர்களா?” என கேட்கப்பட்டபோது, “என்னிடம் ஒரு நல்ல கண்ணாடி இருக்கிறது” என்று எப்ஸ்டீன் கூறுவது பதிவாகியுள்ளது.
கிட்டத்தட்ட அந்த இரண்டு மணி நேர முழு வீடியோவில், அவர் நேர்காணல் செய்பவரின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதைக் காண முடிகிறது. ஆனால் அந்தக் கேள்விகளைக் கேட்பது யார், அந்த வீடியோ எப்போது, எதற்காகப் படமாக்கப்பட்டது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
ஆனால், முறையான காரணங்கள் இன்றி நீதித்துறை பல ஆவணங்களை மறைத்து வைத்திருப்பதாகப் போராட்டக்காரர்களும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியை சேர்ந்த சிலரும் வாதிடுகின்றனர்.
அமெரிக்க அதிகாரிகளால் இதுவரை பொதுவெளியில் வெளியிடப்பட்ட தகவல்கள், மறைந்த எப்ஸ்டீன் மற்றும் அவரது உயர்மட்ட நட்பு வட்டாரத்தின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளன.
பட மூலாதாரம், Getty Images
எப்ஸ்டீனின் கடந்தகாலம்
நியூயார்க்கில் பிறந்து வளர்ந்த எப்ஸ்டீன், 1970-களின் நடுப்பகுதியில் அங்குள்ள டால்டன் என்ற தனியார் பள்ளியில் கணிதம் மற்றும் இயற்பியல் கற்பித்தார். அவர் பல்கலைக்கழகத்தில் இந்த பாடங்களைப் படித்திருந்தாலும், பட்டப்படிப்பை முழுமையாக முடிக்கவில்லை.
அவரது மாணவர் ஒருவரின் தந்தை எப்ஸ்டீனின் திறமையைக் கண்டு ஈர்க்கப்பட்டார். அதன் விளைவாக, ‘பியர் ஸ்டியர்ன்ஸ்’ என்ற வால் ஸ்ட்ரீட் முதலீட்டு வங்கியின் மூத்த பங்குதாரருடன் எப்ஸ்டீனை அவர் அறிமுகப்படுத்தினார்.
நான்கே ஆண்டுகளில் அங்கு எப்ஸ்டீன் ஒரு பங்குதாரராக உயர்ந்தார். 1982-க்குள் அவர் ‘ஜே எப்ஸ்டீன் அண்ட் கோ’ என்ற தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.
அந்த நிறுவனம் சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள வாடிக்கையாளர்களின் சொத்துக்களை நிர்வகித்தது. இது அவருக்கு உடனடி வெற்றியைக் கொடுத்தது.
விரைவிலேயே எப்ஸ்டீன் தான் சேர்த்த செல்வத்தைச் செலவிடத் தொடங்கினார்.
புளோரிடாவில் ஒரு மாளிகை, நியூ மெக்ஸிகோவில் ஒரு பண்ணை மற்றும் நியூயார்க்கிலேயே மிகப்பெரியது எனக் கூறப்படும் ஒரு தனியார் வீடு ஆகியவற்றை வாங்கினார். அதனைத் தொடர்ந்து, பிரபலங்கள், கலைஞர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் பழகத் தொடங்கினார்.
“எனக்கு ஜெஃப்பை 15 ஆண்டுகளாகத் தெரியும். அருமையான மனிதர். அவருடன் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். என்னைப் போலவே அவருக்கும் அழகான பெண்களைப் பிடிக்கும் என்று சொல்லப்படுவதுண்டு, அவர்களில் பலர் இளவயதுடையவர்கள்” என்று 2002-ல் எப்ஸ்டீன் பற்றிய ஒரு கட்டுரைக்காக நியூயார்க் இதழிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
“இதில் சந்தேகமே இல்லை” ஜெப்ரி தனது சமூக வாழ்க்கையை ரசித்து வாழ்பவர்” என்றும் டிரம்ப் அப்போது குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், எப்ஸ்டீன் முதன்முதலில் கைது செய்யப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 2000-களின் தொடக்கத்தில் தங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகப் பின்னாளில் டிரம்ப் கூறினார். எப்ஸ்டீன் விவகாரத்தில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என அவர் கூறுகிறார்.
“தனது கிளப்பில் வேலை செய்த பெண் ஊழியர்களிடம் தவறாக நடந்துகொண்டதால்”, பல ஆண்டுகளுக்கு முன்பே எப்ஸ்டீனை டிரம்ப் அங்கிருந்து வெளியேற்றிவிட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.
தனது ‘மார்-ஏ-லாகோ’ கடற்கரை கிளப் ஸ்பாவில் பணிபுரிந்த இளம் பெண்களை எப்ஸ்டீன் “திருடிச் சென்றார்” என்றும், அதன் பிறகு அவரோடனான உறவு முடிந்துவிட்டது என்றும் டிரம்ப் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
முக்கியப் பிரமுகர்களுடன் நட்பு
டிரம்பைத் தவிர, இன்னும் பல முக்கியப் பிரமுகர்களுடன் எப்ஸ்டீன் நட்பு பாராட்டியுள்ளார். ஆனால், அவருடன் நட்பாக இருந்த காரணத்தினாலேயே அவர்கள் அனைவரும் தவறு செய்தவர்கள் என்று அர்த்தமல்ல.
2002-ல், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், நடிகர்கள் கெவின் ஸ்பேசி மற்றும் கிறிஸ் டக்கர் ஆகியோரை ஒரு பிரத்யேக தனியார் விமானத்தில் எப்ஸ்டீன் ஆப்பிரிக்காவிற்கு அழைத்துச் சென்றார்.
2003-ல், திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீனுடன் இணைந்து நியூயார்க் இதழை வாங்க அவர் முயற்சி செய்து தோல்வியடைந்தார். அதே ஆண்டில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு 3 மில்லியன் டாலர் நன்கொடை அளித்தார்.
முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் மற்றும் அவரது மனைவியும் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளருமான ஹிலாரி கிளிண்டன் ஆகியோர், எப்ஸ்டீன் குறித்த விசாரணையில் சாட்சியம் அளிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஜெஃப்ரி எப்ஸ்டீன் பிரிட்டன் அரசியல்வாதி பீட்டர் மண்டெல்சனுடனும் நட்பாக இருந்தார். இந்த நட்பிற்காக தான் வருந்துவதாக மண்டெல்சன் தெரிவித்தார். இந்த உறவின் காரணமாக, 2025-ல் அமெரிக்காவிற்கான தூதர் பதவியையும் அவர் இழந்தார். பின்னர் மண்டெல்சன் தொழிலாளர் கட்சியிலிருந்தும் விலகினார்.
தற்போது ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, மண்டெல்சன் மீது பிரிட்டன் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அவர் 2009-ல் வர்த்தகச் செயலாளராக இருந்தபோது, அரசாங்கத்தின் ரகசியத் தகவல்களை எப்ஸ்டீனுக்குக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பல முக்கியப் பிரமுகர்களுடன் தொடர்பில் இருந்தபோதிலும், எப்ஸ்டீன் தனது தனிப்பட்ட வாழ்க்கையை ரகசியமாக வைக்கவே முயன்றார். அவர் பொது நிகழ்ச்சிகளையும் உணவகங்களில் நடக்கும் விருந்துகளையும் தவிர்த்ததாகக் கூறப்படுகிறது.
மிஸ் ஸ்வீடன் பட்டம் வென்ற ஈவா ஆண்டர்சன் டுபின் மற்றும் பதிப்பாளர் ராபர்ட் மேக்ஸ்வெல்லின் மகள் கிஸ்லேன் மேக்ஸ்வெல் போன்ற பெண்களுடன் அவர் பழகினார். ஆனால் அவர்களைத் திருமணம் செய்துகொள்ளவில்லை.
டிஃப்பனி அண்ட் கோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ரோசா மங்க்டன், 2003-ல் வேனிட்டி ஃபேர் இதழுக்கு அளித்த பேட்டியில், எப்ஸ்டீன் “மிகவும் புதிரானவர்” மற்றும் “மர்மமானவர்” என்று கூறினார்.
“அவரை உங்களுக்குத் தெரியும் என்று நீங்கள் நினைப்பீர்கள், ஆனால் ஒரு வெங்காயத்தின் தோலை உரிப்பது போல அடுத்தடுத்த அடுக்குகளைப் பிரிக்கும்போது, அடியில் இன்னும் வியக்கத்தக்க விஷயங்கள் இருக்கும். நீங்கள் எப்ஸ்டீனிடம் எதைப் பார்க்கிறீர்களோ அது உண்மை அல்ல” என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், US Department of Justice
தண்டனை மற்றும் ஒப்பந்தம்
2005-ஆம் ஆண்டு, 14 வயது சிறுமியின் பெற்றோர் புளோரிடா காவல்துறையிடம் ஒரு புகாரை அளித்தனர். எப்ஸ்டீன் தனது பாம் பீச் இல்லத்தில் வைத்து தங்கள் மகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அவர்கள் கூறினர். அந்த வீட்டைச் சோதனையிட்டபோது, வீடு முழுவதும் சிறுமிகளின் புகைப்படங்கள் இருப்பதை காவல்துறை கண்டறிந்தது.
சிறுமிகளுக்கு எதிரான எப்ஸ்டீனின் அத்துமீறல்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியதாக மியாமி ஹெரால்டு இதழ் செய்தி வெளியிட்டது.
“இது ‘ஒரு தனிப்பட்ட நபர் இன்னொருவர் மீது சுமத்திய குற்றம்’ அல்ல,” என்று பாம் பீச் காவல்துறை அதிகாரி மைக்கேல் ரெய்டர் அந்த நாளிதழுக்குத் தெரிவித்தார்.
“இது 50-க்கும் மேற்பட்ட சிறுமிகள் ஒருவருக்கு எதிராகக் கொடுத்த புகார். மேலும் அந்தச் சிறுமிகள் அனைவரும் அடிப்படையில் ஒரே மாதிரியான தகவல்களையே கூறினர்”என்றும் அவர் குறிப்பிட்டார்.
எப்ஸ்டீன் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தபோது, 2007-ல் நியூயார்க் இதழுக்காக எழுதிய கட்டுரையில், “அவர் அந்தச் சிறுமிகளைப் பற்றி ஒருபோதும் ரகசியம் காத்ததில்லை” என்று கட்டுரையாளர் மைக்கேல் வுல்ஃப் குறிப்பிட்டார்.
“அவருக்குப் பிரச்னைகள் தொடங்கிய ஒரு கட்டத்தில், அவர் என்னிடம் பேசும்போது, ‘எனக்குச் சிறுமிகளைப் பிடிக்கும்’ என்றார். அதற்கு நான், ‘ஒருவேளை நீங்கள் ‘ இளம் பெண்களைப் பிடிக்கும்’ என்று சொல்லலாமே’ என்றேன்,” என வுல்ஃப் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், 2008-ல் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் எப்ஸ்டீனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
இதன் மூலம், அவருக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தரக்கூடிய கடுமையான குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் தப்பினார்.
அதற்குப் பதிலாக அவருக்கு 18 மாதச் சிறைத் தண்டனை கிடைத்தது. அந்தத் தண்டனையின் போது கூட, வாரத்தில் ஆறு நாட்கள், ஒரு நாளைக்கு 12 மணி நேரம் தனது அலுவலகத்திற்குச் சென்று வர “பணி நிமித்தமான விடுப்பு” அவருக்கு வழங்கப்பட்டது. 13 மாதங்களுக்குப் பிறகு அவருக்கு நிபந்தனையுடன் வெளியே வந்தார்.
பட மூலாதாரம், Getty Images
அரசு வழக்கறிஞர் அலெக்சாண்டர் அகோஸ்டா, எப்ஸ்டீனின் குற்றங்களின் அளவை மறைக்கும் வகையிலும், இதில் தொடர்புடைய மற்ற சக்திவாய்ந்த மனிதர்கள் அல்லது பாதிக்கப்பட்ட கூடுதல் நபர்கள் உள்ளார்களா என்பது குறித்த எப்.பி.ஐ விசாரணையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையிலும் இந்த ஒப்பந்தத்தைச் செய்ததாக மியாமி ஹெரால்டு செய்தி வெளியிட்டது.
அந்தப் பத்திரிகை இதனை “நூற்றாண்டின் மிகப்பெரிய ஒப்பந்தம்” என்று விவரித்தது.
இந்த ஊழல் தொடர்பாக ஜூலை 2019-ல் அகோஸ்டா ராஜினாமா செய்தார்.
2008 முதல், நியூயார்க் பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் எப்ஸ்டீன் ‘நிலை 3’ பட்டியலில் சேர்க்கப்பட்டார். இது அவர் மீண்டும் குற்றம் செய்ய அதிக வாய்ப்புள்ளவர் என்பதைக் குறிக்கும் வாழ்நாள் அடையாளமாகும்.
ஆனால், தண்டனைக்குப் பிறகும் எப்ஸ்டீன் தனது சொத்துக்களை பராமரித்து வந்தார்.
டிசம்பர் 2010-ல், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூன்றாவது மகனான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் (அப்போது இளவரசர் ஆண்ட்ரூ என்று அறியப்பட்டவர்), நியூயார்க்கின் சென்ட்ரல் பார்க் பகுதியில் எப்ஸ்டீனுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நவம்பர் 2019-ல் பிபிசி-க்கு அளித்த நேர்காணலில், 1999 முதல் எப்ஸ்டீனைத் தனக்குத் தெரியும் என்றும், 2010-ல் அந்த நட்பை முறித்துக் கொள்வதற்காகவே தான் நியூயார்க் சென்றதாகவும் ஆண்ட்ரூ கூறினார்.
அங்கு இருந்தபோது எப்ஸ்டீன் வீட்டில் தங்கியதற்காகத் தான் வருந்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், ஆண்ட்ரூ முன்பு ஒப்புக்கொண்டதை விட அதிக காலம் எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்தார் என்பது பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த 2011-ஆம் ஆண்டின் மின்னஞ்சல்கள் மூலம் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் எதிர்ப்புகளால், 2025-ல் ஆண்ட்ரூவின் அரச பட்டங்கள் பறிக்கப்பட்டன.
எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டிய விர்ஜினியா ராபர்ட்ஸ் (பின்னர் விர்ஜினியா ஜூஃப்ரே என அறியப்பட்டவர்), தான் 17 வயதாக இருந்தபோது 2000-களின் தொடக்கத்தில் ஆண்ட்ரூவுடன் பாலியல் உறவு கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறினார்.
ஆண்ட்ரூ இதனை திட்டவட்டமாக மறுத்தார். மேலும், லண்டனில் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் எடுக்கப்பட்டது குறித்து தனக்கு எதுவும் நினைவில்லை என்றும் கூறினார்.
ஆனால் ஆண்ட்ரூ 2022-ல் அவர் ஜூஃப்ரேயிடம் பல மில்லியன் டாலர்களை வழங்கி ஒரு சமரசத்திற்கு வந்தார். ஆண்ட்ரூ தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக ஜூஃப்ரே தாக்கல் செய்திருந்த வழக்கைத் தொடர்ந்து இந்தச் சமரசம் ஏற்பட்டது.
நியூயார்க்கில் கைது
பாரிஸிலிருந்து தனது தனி விமானத்தில் திரும்பி வந்தபோது, 6 ஜூலை 2019 அன்று நியூயார்க்கில் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார்.
எப்ஸ்டீனின் குற்றங்கள் நடந்ததாகக் கூறப்படும் அவரது நியூயார்க் வீட்டை அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பறிமுதல் செய்ய முயன்றதாகத் தகவல்கள் தெரிவித்தன.
எப்ஸ்டீன் எப்போதும் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றே கூறி வந்தார். மேலும் தம்மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.
நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்க மறுத்ததையடுத்து, அவர் நியூயார்க்கின் பெருநகர சீர்திருத்த மையத்தில் வைக்கப்பட்டிருந்தார்.
ஜூலை மாதம் அவருக்குக் கழுத்தில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டு சிறிது காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இது குறித்து சிறை அதிகாரிகளோ அல்லது அவரது வழக்கறிஞர்களோ அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.
ஜூலை 31 அன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜரானபோது, அவர் ஒரு வருடம் சிறையில் இருக்க வேண்டியிருக்கும் என்பதும், 2020 கோடைக்காலத்திற்கு முன்பாக விசாரணை நடக்காது என்பதும் உறுதியானது. ஆனால், வழக்கை தாமதப்படுத்தாமல் விரைவாக நடத்துவது பொது நலனுக்கு உகந்தது என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.
எப்ஸ்டீன் ஒருபோதும் விசாரணையை எதிர்கொள்ளவில்லை.
மேக்ஸ்வெல் விசாரணை
எப்ஸ்டீனின் மரணத்திற்குப் பிறகு, அவரது முன்னாள் காதலி கிஸ்லேன் மேக்ஸ்வெல் கவனத்துக்கு வந்தார்
எப்ஸ்டீன் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதற்காக பதினெட்டு வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிந்தும் சிறுமிகளை அனுப்பியது மற்றும் அவர்களைத் தயார்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஜூலை 2020-ல் அவர் கைது செய்யப்பட்டார்.
டிசம்பர் 2021-ல், நியூயார்க் நீதிமன்றத்தில் அவர் மீதான ஆறு குற்றச்சாட்டுகளில் ஐந்து நிரூபிக்கப்பட்டன. இதில் பதினெட்டு வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் சுரண்டலுக்காக கடத்தியது உள்ளிட்ட மிகக் கடுமையான குற்றச்சாட்டும் அடங்கும். அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆக்ஸ்போர்டில் படித்த மேக்ஸ்வெல் தான், பில் கிளிண்டன் மற்றும் ஆண்ட்ரூ போன்ற பல செல்வந்தர்களையும் சக்திவாய்ந்த நண்பர்களையும் எப்ஸ்டீனுக்கு அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
மேக்ஸ்வெல் மற்றும் எப்ஸ்டீன் இடையிலான காதல் சில ஆண்டுகளே நீடித்தாலும், அதன்பிறகு நீண்ட காலம் அவர் எப்ஸ்டீனுடன் இணைந்து பணியாற்றியதாக நண்பர்கள் தெரிவித்தனர்.
பட மூலாதாரம், Getty Images
எப்ஸ்டீனின் பாம் பீச் மாளிகையில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள், மேக்ஸ்வெல்லை அந்த வீட்டின் மேலாளராக விவரித்தனர். அவர் ஊழியர்களைக் கவனிப்பது, நிதி விவகாரங்களைக் கையாளுவது மற்றும் சமூக நிகழ்வுகளை ஒருங்கிணைப்பது போன்ற பணிகளைச் செய்து வந்துள்ளார்.
2003-ல் வெளியான வேனிட்டி ஃபேர் இதழின் கட்டுரையில், மேக்ஸ்வெல் தனது சம்பளம் பெறும் ஊழியர் அல்ல என்றும், மாறாக தனது “சிறந்த நண்பர்” என்றும் எப்ஸ்டீன் குறிப்பிட்டிருந்தார்.
வழக்கு விசாரணையின் போது, எப்ஸ்டீனின் பாலியல் தேவைகளுக்காக மேக்ஸ்வெல் சிறுமிகளை கண்டறிந்து, அவர்களைத் தயார் செய்ததாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். ஆனால், எப்ஸ்டீனின் மரணத்திற்குப் பிறகு அவரது குற்றங்களுக்காகத் தன்னை ஒரு பலிகடாவாக ஆக்குகிறார்கள் என்று மேக்ஸ்வெல் தரப்பு வாதிட்டது.
தண்டனை உறுதியான பிறகு மேக்ஸ்வெல் தனது வருத்தத்தைத் தெரிவித்தார். “ஜெஃப்ரி எப்ஸ்டீனைச் சந்தித்தது என் வாழ்க்கையின் மிகப்பெரிய தவறு ,” என்று அவர் கூறினார்.
“ஆனால் இன்றைய நாள் எப்ஸ்டீனைப் பற்றியது அல்ல. இன்று, எனக்கு தண்டனை வழங்கப்படுவதற்கும், பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் என்னிடம் நேரடியாக பேசுவதற்குமான நாள். உங்களுக்கு நான் சொல்லிக்கொள்வது இதுதான். நீங்கள் அனுபவித்த வலிக்கு நான் வருந்துகிறேன். எனது தண்டனையும் சிறைவாசமும் உங்களுக்கு ஒரு நிம்மதியைத் தரும் என்று நம்புகிறேன்,” என அவர் குறிப்பிட்டார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேக்ஸ்வெல்லின் வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டிருக்கக் கூடாது என்று அவர்கள் வாதிட்டனர். ஆனால், அந்த மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் இறுதியில் நிராகரித்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு