இஸ்ரேல் ராணுவத்தின் (IDF) அரபு மொழி செய்தித் தொடர்பாளர் சனிக்கிழமை காலை சமூக ஊடகங்களில் ஒரு செய்தியை வெளியிட்டார். அதில் அவர் வடக்கு காஸாவில் உள்ள “D5” பகுதியில் வசிப்பவர்களை தெற்கே செல்லுமாறு எச்சரித்தார். “D5” என்பது பத்திற்கும் மேற்பட்ட சிறிய பகுதிகளாக பிரிக்கப்பட்ட ஒரு மண்டலம்.
இந்த அறிவிப்பில், “பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் (IDF) பெரும் சக்தியுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் நீண்ட காலத்திற்கு அதன் செயல்பாடுகள் தொடரும். அங்கு அமைந்துள்ள முகாம்கள், குடியிருப்பு பகுதி என அனைத்தும் ஆபத்து ஏற்படும் இடங்களாக கருதப்படுகிறது. இங்குள்ள மக்கள் சலாஹ் அல்-தின் சாலை வழியாக மனிதாபிமானப் பகுதிக்கு உடனடியாக செல்ல வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு செய்தியுடன் இணைக்கப்பட்டிருந்த ஒரு வரைப்படத்தில், D5 மண்டலத்திலிருந்து ஒரு பெரிய மஞ்சள் அம்புக்குறி தெற்கு காஸாவை நோக்கி வரையப்பட்டுள்ளது.
சலாஹ் அல்-தின் நெடுஞ்சாலை வடக்கு-தெற்கு பயணங்களுக்கு முக்கிய பாதையாகும். D5 பகுதி ஒரு வருடமாக தொடர்ச்சியான இஸ்ரேலிய தாக்குதல்களால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இம்முறை வெளியான அறிவிப்பை பார்க்கும் போது, இப்பகுதி மக்கள் மீண்டும் தங்களது வசிப்பிடங்களுக்கு திரும்ப முடியும் என்பதை உறுதியளிக்கவில்லை.
இஸ்ரேல் ராணுவம் இந்த பகுதியில் “பெரும் சக்தியை (…) நீண்ட காலத்திற்கு” (“great force… for a long time”) பயன்படுத்தும் என்பதுதான் அறிவிப்பின் மையக்கரு.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த இடத்திற்கு திரும்ப முடியும் என்று மக்கள் எதிர்பார்க்க வேண்டாம் .
நெரிசல் நிறைந்த `அல் மவாசி’
அறிவிப்பின்படி, இஸ்ரேலால் அறிவிக்கப்பட்ட மனிதாபிமான மண்டலம் `அல் மவாசி’ ஆகும். இது முன்பு ரஃபா (காஸாவின் எகிப்து தெற்கு எல்லை) அருகே ஒரு கடற்கரையில் விவசாயம் செய்யும் பகுதியாக இருந்தது.
காஸாவின் பல பகுதிகளை விட இது அதிக நெரிசல் மிகுந்தது. அதே சமயம் பாதுகாப்பானது அல்ல. `பிபிசி வெரிஃபை’ இப்பகுதியில் குறைந்தது 18 வான்வழித் தாக்குதல்கள் நடந்ததை கண்டறிந்துள்ளது.
ஹமாஸ் தனது சொந்த செய்தி அறிக்கைகளை வடக்கு காஸாவில் எஞ்சியிருக்கும் 400,000 மக்களுக்கு அனுப்பியுள்ளது. காஸா முன்னர் 1.4 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நகர்ப்புற பகுதியாக இருந்தது.
ஹமாஸ் அவர்களை எங்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேல் குறிப்பிடும் தெற்கு பகுதி ஆபத்தானது என்பதே ஹைமாஸின் நிலைப்பாடு. மக்கள் இஸ்ரேலின் அறிவிப்புக்கு இணங்க இருப்பிடங்களை காலி செய்து விட்டால், மீண்டும் அங்கு திரும்ப முடியாது என்று ஹைமாஸ் கருதுகிறது. இஸ்ரேல், மக்களை தங்கள் வீடுகளுக்கு திரும்பி செல்ல அனுமதிக்காது என்று ஹமாஸ் எச்சரிக்கிறது.
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பீரங்கி குண்டுவீச்சுகள் இருந்த போதிலும், இந்த பகுதிகளில் பலர் தங்கள் வீடுகளை விட்டு நகரவில்லை.
நான் வடக்கு காஸா அருகே ஒரு பகுதிக்குச் சென்றபோது, அங்கு வெடிப்புச் சத்தங்களைக் கேட்டேன், மேலும் புகை மூட்டம் எழுவதைக் கண்டேன். அந்த காட்சிகள் எனக்கு போரின் முதல் மாதங்களை நினைவுபடுத்தியது.
பலர் ஏற்கனவே ஆபத்துகளை உணர்ந்து தெற்கு நோக்கி இடம்பெயர்ந்துவிட்டனர். ஆனால் சிலர் வடக்கு காஸாவில் அபாயகரமான சூழலில் தங்கியிருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கு ஆதரவாக அங்கேயே இருக்கின்றனர். இடத்தை காலி செய்யாமல் இருப்பவர்களில் சிலர் ஹமாஸுடன் தொடர்புடைய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
போர்ச் சட்டங்களின்படி, அங்கு தங்கி இருப்பதால் அவர்கள் போரிடுபவர்களாக கருதப்பட மாட்டார்கள்.
வடக்கு நோக்கி இடம்பெயரும் மக்கள்
காஸாவின் நெரிசல் மற்றும் ஆபத்து நிறைந்த தெற்கு பகுதிக்கு செல்வதை காட்டிலும் மக்கள் வடக்கு நோக்கி இடம்பெயர்கின்றனர். இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க மக்கள் கடைபிடிக்கும் வழி இது.
உதாரணமாக பீட் ஹனூனிலிருந்து காஸா நகரத்திற்கு செல்கின்றனர். இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் பீட் ஹனூனில் வீடுகள் மற்றும் பிற தங்குமிடங்களில் இயங்கி வருகின்றனர். அங்கிருந்து ராணுவம் வெளியேறியதும், திரும்பிவிடலாம் என்பது மக்களின் எண்ணம்.
காஸாவில் உள்ள பாலத்தீனர்களுடன் தொடர்பில் இருக்கும் பிபிசி சகாக்களின் கூற்றுப்படி, இஸ்ரேல் ராணுவம் மக்களின் நடவடிக்கைகளை தடுக்க முயற்சிக்கிறது, மக்களை சலாஹ் அல்-தின் சாலை வழியாக மட்டுமே செல்ல வேண்டும் என கட்டாயப்படுத்துகிறது.
“எங்கே செல்வது?”
காஸாவில் உள்ள பத்திரிகையாளர்களை இஸ்ரேல் போரைப் பற்றி செய்தி சேகரிக்க அனுமதிப்பதில்லை. இஸ்ரேல் பாதுகாப்பு படையினரின் கண்காணிப்புடன், பத்திரிகையாளர்களின் குறுகிய நேர பயணங்கள் மட்டுமே அரிதாக அனுமதிக்கப்படுகிறது.
காஸாவில் போர் தொடங்கியதில் இருந்து குறைந்தது 128 பாலத்தீன ஊடக ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பத்திரிகையாளர் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது . அக்டோபர் 7 ஆம் தேதி அங்கு சென்றடைந்த பாலத்தீன பத்திரிகையாளர்கள் இன்னமும் துணிச்சலான பணியை செய்து வருகின்றனர்.
வடக்கு காஸாவில், இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியதில் இருந்து அங்கு பயத்தில் தவிக்கும் குடும்பங்களை அவர்கள் படம்பிடித்தனர். மக்கள் பயத்தில் தப்பியோடுவதைப் படம்பிடித்து வருகின்றனர். பெரிய பைகளை சுமந்தபடி சிறிய குழந்தைகள் தங்கள் குடும்பங்களுடன் நடந்து செல்லும் காட்சிகளை அவர்கள் படம்பிடித்தனர்.
அந்த பத்திரிகையாளர்களில் ஒருவர், கையில் குழந்தையுடன் தெருவில் ஓடிக்கொண்டிருந்த மனார் அல் பயார் என்ற பெண்ணுடன் நடத்திய ஒரு சுருக்கமான நேர்காணலை பகிர்ந்தார்.
ஜபாலியா அகதிகள் முகாமை விட்டு வெளியேறி வேகமாக நடந்து கொண்டிருந்த அந்த பெண், “பலூஜாவில் உள்ள பள்ளியை விட்டு வெளியேற ஐந்து நிமிடங்கள் கொடுக்கப்படும் என்று அவர்கள் சொன்னார்கள். அங்கிருந்து கிளம்பி, பாதி தூரம் நடந்தும், பாதி தூரம் வேகமாக ஓடியும் இவ்வளவு தூரம் வந்தேன். நாங்கள் எங்கே போவது? காஸாவின் தெற்கில் கொலைகள் நடக்கின்றன. மேற்கில் காஸா மக்கள் கேடயமாக பயன்படுத்தப்படுகின்றனர். கடவுளை மட்டுமே நம்பி இருக்கிறோம்” என்றார்.
இந்த பயணம் கடினமானது. சில நேரங்களில், நடந்து செல்லும் மக்கள் மீது இஸ்ரேலிய படை துப்பாக்கி சூடு நடத்துவதாக காஸாவில் இருக்கும் பாலஸ்தீன மக்கள் கூறுகின்றனர்.
அதே சமயம் இஸ்ரேலிய ராணுவம், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் விதிகளை இஸ்ரேலிய வீரர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
ஆனால் `பாலஸ்தீனர்களுக்கான மருத்துவ உதவி’ என்னும் பிரிட்டிஷ் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பாதுகாப்புத் தலைவர் லிஸ் ஆல்காக், ‘காயமடைந்த பொதுமக்கள் வழங்கிய சான்றுகள் அவர்கள் தாக்கப்பட்டதாகக் கூறுகின்றன’ என்றார்.
“நாங்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்படும் நோயாளிகளை பார்க்கையில், அதிக எண்ணிக்கையிலான பெண்கள், குழந்தைகள் மற்றும் போரிட முடியாத வயதினர் உள்ளனர். அவர்கள் தலையில், முதுகுத்தண்டில், கைகால்களில் நேரடியாகத் தாக்கப்படுகிறார்கள். அவர்கள் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டனர் என்பதை அந்த காயங்கள் சுட்டிக்காட்டுகிறது. ” என்று அவர் குறிப்பிட்டார்.
நீடித்த மனிதாபிமான பேரழிவு சூழல்
காஸாவில் பணிபுரியும் ஐ.நா. மற்றும் தொண்டு நிறுவனங்கள், ‘இஸ்ரேலிய ராணுவ அழுத்தம் ஏற்கனவே இருக்கும் மனிதாபிமான பேரழிவை ஆழப்படுத்துகிறது’ என்று கூறுகின்றன.
வடக்கு காஸாவில் எஞ்சியிருக்கும் மருத்துவமனைகளில் , ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கவும், மோசமாக காயமடைந்த நோயாளிகளின் உயிரை காக்கவும் எரிபொருள் பற்றாக்குறை நிலவுவதாக வருத்தம் தரும் செய்திகள் வெளியிடப்படுகின்றன.
சில மருத்துவமனைகள் தங்கள் கட்டடங்கள் இஸ்ரேலால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கின்றன.
“ஜெனரல்களின் திட்டம்”
பாலத்தீனர்கள், ஐ.நா மற்றும் உதவி முகவர்களிடையே ஒரு சந்தேகம் எழுகிறது. வடக்கு காஸாவை படிப்படியாக சிதைக்க இஸ்ரேலிய ராணுவம் ஒரு புதிய தந்திரத்தை பின்பற்றுகிறதோ என்று அவர்கள் சந்தேகிக்கின்றனர். இதுவே “ஜெனரல்ஸ் திட்டம்” (Generals’ Plan) என்று அழைக்கப்படுகிறது .
முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜியோரா எய்லாண்ட் தலைமையிலான ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகளின் குழுவால் இது முன்மொழியப்பட்டது.
பெரும்பாலான இஸ்ரேலியர்களைப் போலவே, இந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களும் விரக்தியும் கோபமும் அடைந்துள்ளனர், ஏனெனில் போர் தொடங்கி ஒரு வருடம் கடந்துவிட்ட போதிலும், ஹமாஸை அழித்து, பணயக்கைதிகள் அனைவரையும் விடுவிக்கும் இலக்கை அவர்களது நாடு இன்னும் அடையவில்லை.
“ஜெனரல்ஸ் திட்டம்” என்பது இஸ்ரேலின் கண்ணோட்டத்தில், முட்டுக்கட்டையை தகர்த்த முடியும் என்று அதன் ஆதரவாளர்கள் நம்பும் ஒரு புதிய யோசனை.
வடக்கு பகுதியில் மக்கள் மீது அழுத்தத்தை அதிகரிப்பதன் மூலம் ஹமாஸ் மற்றும் அதன் தலைவரான யாஹ்யா சின்வாரை சரணடையுமாறு இஸ்ரேல் வற்புறுத்தும். இத்திட்டத்தின் நோக்கம் இதுதான்.
முதல் கட்டமாக பொதுமக்களை வெளியேற்றும் வழித்தடங்களில் இருந்து அகலுமாறு உத்தரவிட வேண்டும். அந்த வழித்தடங்கள் அவர்களை வாடி காஸாவின் தெற்கே அழைத்துச் செல்லும். இது கடந்த அக்டோபரில் இஸ்ரேலிய படையெடுப்பிற்குப் பிறகு காஸாவில் ஒரு பிளவுக் கோடாக மாறிய கிழக்கு-மேற்கு பகுதி.
பிணைக் கைதிகளை மீட்க இஸ்ரேல் உடனடியாக ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும் என்று ஜியோரா எய்லாண்ட் கருதுகிறார்.
காஸாவில் இருந்து முழுவதுமாக வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டிருந்தாலும் கூட பிணைக் கைதிகளை மீட்க இஸ்ரேல் ஒப்பு கொண்டிருக்க வேண்டும் என்பது அவரின் கருத்து.
சரணடைதல் அல்லது பட்டினி கிடத்தல்
மத்திய இஸ்ரேலில் உள்ள தனது அலுவலகத்தில் அவர் ஜெனரல்ஸ் திட்டத்தின் மையத்தை வகுத்தார்.
“கடந்த ஒன்பது அல்லது பத்து மாதங்களில் காஸாவின் வடக்குப் பகுதியை நாம் ஏற்கனவே சுற்றி வளைத்திருப்பதால், நாம் செய்ய வேண்டியது இதுதான். காஸாவின் வடக்குப் பகுதியில் வசிக்கும் 300,000 குடியிருப்பாளர்களிடம் [ஐ.நா.வால் 400,000 என மதிப்பிடப்பட்டுள்ளது] வெளியேறும்படி கூற வேண்டும். இந்தப் பகுதியை விட்டு வெளியேறி, இஸ்ரேல் வழங்கும் பாதுகாப்பான வழிகளில் வெளியேற 10 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும்” என்றார்.
“அதற்குப் பிறகு, இந்த முழுப் பகுதியும் ஒரு ராணுவ மண்டலமாக மாறும். அனைத்து ஹமாஸ் உறுப்பினர்களும், போராளிகளாக இருந்தாலும் சரி, பொதுமக்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு எஞ்சியிருப்பது இரண்டு வழிகள் தான்: சரணடைதல் அல்லது பட்டினி கிடத்தல் ” என்று அவர் கூறினார்.
இஸ்ரேலின் பாதுகாப்பான வெளியேற்றும் வழித்தடங்கள் மூடப்பட்டவுடன் இஸ்ரேல் அந்தப் பகுதிகளுக்கு சீல் வைக்க வேண்டும் என்று எய்லாண்ட் விரும்புகிறார்.
வெளியேறாமல் இருக்கும் எவரும் எதிராளியாகவே கருதப்படுவார்கள். அதன் பிறகு இப்பகுதி முற்றுகைக்கு உட்பட்டது. உணவு, தண்ணீர் மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விநியோகங்களையும் ராணுவம் தடுக்கும்.
ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலான எய்லாண்ட் , “அழுத்தம் தாங்க முடியாமல் ஹமாஸின் எஞ்சியிருக்கும் படையும் விரைவில் சிதைந்துவிடும். எனவே ஹமாஸ் வேறு வழியின்றி பணயக்கைதிகளை விடுவித்து, இஸ்ரேலுக்கு அது விரும்பும் வெற்றியைக் கொடுக்கும்’’ என்று நம்புகிறார்.
காஸாவில் நடக்கும் தற்போதைய தாக்குதல் “ஆயிரக்கணக்கான பாலத்தீன குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பில் பேரழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது ” என்று ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் கூறுகிறது.
வடக்கு காஸாவிற்கான முக்கிய பாதைகள் மூடப்பட்டுள்ளதாகவும், அக்டோபர் 1 முதல் உணவு, உடைமை நிவாரண உதவிகள் எதுவும் அந்த பகுதிக்குள் நுழையவில்லை என்றும் கூறுகிறது.
வான்வழித் தாக்குதல்கள் காரணமாக மொபைல் கிச்சன்கள் மற்றும் பேக்கரிகள் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வடக்கில் WFP ஆதரவுடன் இயங்கி வந்த ஒரே ஒரு பேக்கரியும் வெடிகுண்டு தாக்குதலில் தீப்பிடித்தது. தெற்கில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.
“ஜெனரல்ஸ் திட்டத்தை” இஸ்ரேலிய ராணுவம் ஒரு பகுதியாக அல்லது முழுவதுமாக ஏற்றுக்கொண்டதா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் காஸாவில் நிலவும் சூழ்நிலை சான்றுகள், குறைந்தபட்சம் அத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்ற யூகத்தை ஏற்படுத்துகின்றன.
பிபிசி இஸ்ரேலிய ராணுவத்திடம் கேள்விகளின் பட்டியலை அனுப்பியது, ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை.
பெஞ்சமின் நெதன்யாகு அமைச்சரவையில் உள்ள தீவிர தேசியவாதிகள் வடக்கு காஸாவில் உள்ள பாலத்தீனர்களை அப்புறப்படுத்தி யூத குடியேறிகளை தங்க வைக்க விரும்புகிறார்கள்.
“எங்கள் வீரமிக்க போராளிகள் மற்றும் வீரர்கள் ஹமாஸின் தீமையை அழித்து வருகின்றனர், நாங்கள் காஸா பகுதியை ஆக்கிரமிப்போம்.. குடியேற்றங்கள் இல்லாத இடத்தில், பாதுகாப்பு இருக்காது” என்று நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு