பட மூலாதாரம், Getty Images
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்படுவது அதிகரித்து வருகிறது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. புனே ஆய்வு மையத்துக்கு 17 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. கொரோனா பரவல் குறித்து பதற்றம் அடைய வேண்டாம்.” என்று தெரிவித்தார்.
கொரோனாவின் மூன்று அலைகள் இதற்கு முன்பு வந்து போய் உள்ளன. அப்போது நோயின் தீவிரம் அதிகமாக இருந்ததால், பலர் உயிரிழந்தனர். பின்னர் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கத்தால் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பயனாக ஏராளமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஆனால், 2022-ஆம் ஆண்டு வரை நாம் எடுத்துக்கொண்ட தடுப்பூசிகள் இந்தப் புதிய வகைக்கு எதிராக பயனுள்ளதாக இருக்குமா? புதிய வகை வைரஸால் கொரோனாவின் புதிய அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதா?
இதுபோன்ற சில கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்வோம்.
ஆனால், அதற்கு முன், கொரோனாவின் இந்த புதிய திரிபு என்ன? அதன் அறிகுறிகள் என்ன? என்பதை புரிந்துகொள்வது அவசியம்.
பட மூலாதாரம், Getty Images
கொரோனாவின் புதிய ஜேஎன்.1 (JN.1) திரிபு என்றால் என்ன?
தற்போது, சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கிலும் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர்.
சிங்கப்பூரில் இதுவரை மரபணு வரிசைப்படுத்தப்பட்ட மாதிரிகளில் பெரும்பாலானவை ஜேஎன்.1 திரிபைச் சேர்ந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஜேஎன்.1 திரிபு புதிதல்ல.
கடந்த சில ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஓமிக்ரானின் ஒரு வகை திரிபு தான் இதுவும்.
டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக(AIIMS) பேராசிரியரான மருத்துவர் சஞ்சய் ராய், கோவாக்சின் தடுப்பூசியின் மூன்று கட்டங்களிலும் முன்னணி ஆராய்ச்சியாளராக இருந்தார்.
பிபிசி செய்தியாளர் சந்தன் ஜஜ்வாடே, அவரிடம் கோவிட்-19 இன் ஜேஎன்.1 திரிபு குறித்து கேள்வி எழுப்பினார்.
“ஜேஎன்.1 என்பது கொரோனாவின் ஓமிக்ரான் வைரஸின் ஒரு திரிபு. இது கண்டுபிடிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. இது ஒரு புதிய வைரஸ் அல்ல. இது தீவிரமானதாக இருக்குமா இல்லையா என்பது பற்றிய அனைத்து தகவல்களும் எங்களிடம் உள்ளன. ஜேஎன்.1 திரிபைப் பற்றி பயப்படத் தேவையில்லை.
தற்போதைய கண்டுபிடிப்பின் படி, இது சாதாரண சளி போல லேசானதாகவோ அல்லது அதை விட இயல்பானதாகவோ இருக்கலாம்” என்று மருத்துவர் சஞ்சய் ராய் பதில் அளித்தார்.
பட மூலாதாரம், Getty Images
இந்த திரிபு ஆபத்தானதாக இருக்குமா? எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு விடை தெரிவதற்காக நிபுணர்களின் கருத்துக்களை நாங்கள் நாடினோம்.
கொரோனா காலத்தில் மகாராஷ்டிரா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட பணிக்குழுவில் நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் அவினாஷ் கவாண்டேவும் அங்கம் வகித்தார்.
புதிய திரிபு குறித்து பேசிய மருத்துவர் கவாண்டே, “இந்த திரிபு ஓமிக்ரானை விட லேசானது. ஆனால், இது விரைவாக பரவுகிறது. ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால், இந்த திரிபு அவரிடம் இருந்து பலருக்கு விரைவாக பரவ வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்தார்.
ஆனால், இந்த திரிபின் தீவிரம் அதிகமாக இல்லை என்பதால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “இளம் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஏற்கனவே பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயமாக கவனமாக இருக்க வேண்டும். கொரோனாவின் இந்த புதிய மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களிடமிருந்து தங்களைத் தனிமைப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் கவனமாக இருக்க வேண்டும்” என்றும் கூறினார்.
முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல் குறித்து சென்னையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மாநில அமைச்சர் மா.சுப்ரமணியன், “கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர், இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை; அணிந்தால் நல்லது. தவறான தகவல்களை பரப்பி பதற்றத்தை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்.” என்றார்.
முந்தைய தடுப்பூசி பயனுள்ளதாக இருக்குமா?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். அந்த நேரத்தில், நம் நாட்டில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அரசாங்கத்தால் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பரவலாக வழங்கப்பட்டன.
சிலர் ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் தடுப்பூசியையும் எடுத்துக் கொண்டனர்.
ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்துக் கொண்ட தடுப்பூசி தற்போதைய திரிபுக்கு எதிராக இன்றும் செயல் திறனுடன் இருக்குமா? என்பது போன்ற கேள்விகள் பலருக்கும் உள்ளன.
இரண்டு டோஸ் தடுப்பூசியுடன், பூஸ்டர் டோஸை எடுத்துக் கொண்டவர்களுக்கு நிச்சயமாக சிறிது பலன் கிடைக்கும் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் மகாராஷ்டிராவின் முன்னாள் மாநிலத் தலைவர் மருத்துவர் அவினாஷ் போண்ட்வே கூறுகிறார்.
இதுகுறித்து விவரித்த அவர், “தடுப்பூசி போட்ட பிறகு உங்களுக்கு கொரோனா வராது என்று அர்த்தம் அல்ல. தொற்று ஏற்பட்டால், லேசான அறிகுறிகள் தென்படலாம். ஆனால், இரண்டு டோஸ் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நீண்ட காலம் நீடிக்கலாம். இருப்பினும், இரண்டு டோஸ் அல்லது ஒரு டோஸ் மட்டுமே எடுத்துக் கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கக் கூடும். ” என்று குறிப்பிடுகிறார் மருத்துவர் அவினாஷ்.
பட மூலாதாரம், Getty Images
அப்போது வழங்கப்பட்ட தடுப்பூசி தற்போதைய திரிபுக்கு முழுமையாக பயனுள்ளதாக இருக்காது என்று மருத்துவர் அவினாஷ் கவாண்டே கருதுகிறார்.
“ஒவ்வொரு வருடமும் கொரோனா தடுப்பூசி போடுவது நன்மை பயக்கும். அதற்காக, ஒவ்வொரு வருடமும் புதிய தடுப்பூசிகளை உருவாக்க வேண்டும். ஏனென்றால், அதே தடுப்பூசிகள் புதிய திரிபுகளுக்கு எதிராக வேலை செய்யாது” என்றும் அவர் கூறினார்.
ஒரு வருடத்துக்கு முன்பு கொடுக்கப்பட்ட இன்ஃப்ளூயன்சா தடுப்பூசி அடுத்த ஆண்டில் பயனற்றதாகிவிடுவதால், அடுத்த ஆண்டில் புதிய தடுப்பூசி உருவாக்கப்பட வேண்டும் என்பது போல, கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்றால் புதிய தடுப்பூசிகள் உருவாக்கப்பட வேண்டும்.
“ஆனால், சிலருக்கு பழைய தடுப்பூசிகளிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து இருந்தால், அது இந்த திரிபுக்கு எதிராக போராட உதவும்.”
இருப்பினும், ஆராய்ச்சிக்கு அதிக செலவாகும் என்பதால், புதுப்புது தடுப்பூசிகளைக் கொண்டு வருவது சாத்தியமில்லை என்றும் மருத்துவர் அவினாஷ் கவாண்டே கூறுகிறார்.
இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் முற்றிலும் உருமாற்றம் அடைகிறது.
எனவே ஒரு புதிய தடுப்பூசி உருவாக்கப்படுகின்றது. கொரோனாவைப் பொருத்தவரை புதிய திரிபுகள் உருவாகி வருகின்றன.
இன்ஃப்ளூயன்ஸாவில் அது நடக்காது.
அதனால் தான் கொரோனாவுக்கு எதிரான முந்தைய தடுப்பூசிகள் சில நன்மைகளைத் தரும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இருப்பினும், மிகவும் சக்தி வாய்ந்த திரிபு தோன்றினால், இந்த நோய் எதிர்ப்பு சக்தி நீடிக்குமா என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பினார்.
கொரோனாவின் புதிய திரிபுகள் தொடர்ந்து வரலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் புதிய தடுப்பூசியை உருவாக்குவது சாத்தியமில்லை. காரணம், மக்கள் தடுப்பூசிக்கு எதிராக உள்ளனர். புதிய தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்கான செலவுகளை ஈடுகட்ட முடியவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு திரிபு தோன்றும்போது ஒரு தடுப்பூசி தயாரிக்கப்பட வேண்டும் என்பது சரி தான். ஆனால் பொருளாதார காரணங்களால் தடுப்பூசிகள் கிடைக்கவில்லை என்று கூறிய மருத்துவர், ஒருவேளை புதிய தடுப்பூசிகள் வந்தால், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம் என்ற கருத்தையும் வெளிப்படுத்தினார்.
கொரோனா புதிய அலை ஏற்படுமா?
கொரோனாவின் இந்த திரிபு வேகமாகப் பரவி வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அப்படியென்றால், கொரோனாவின் புதிய அலை பரவுமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது .
இந்த முறை ஒரு புதிய அலை பரவுவதற்கான வாய்ப்பு குறைவு என்று மருத்துவர் அவினாஷ் கவாண்டே கருதுகிறார்.
அதற்கு மூன்று காரணங்கள் இருப்பதாகவும் அவர் பட்டியலிடுகிறார்.
முதலாவதாக, நம் நாட்டில் ஏராளமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எனவே, சிலருக்கு இந்த திரிபை எதிர்த்துப் போராட குறைந்தபட்சம் ஓரளவு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும்.
இரண்டாவதாக, இந்த மாறுபாடு வேகமாகப் பரவி வந்தாலும், அதன் தீவிரம் குறைவாகவே உள்ளது. இது பலருக்கு பரவினாலும், விரைவில் சரியாகிவிடும். எனவே, முந்தைய காலத்தைப் போன்ற ஒரு சூழ்நிலை ஏற்படாது என்று அவர் தெரிவித்தார்.
மூன்றாவதாக, ஒரு நபர் இந்த திரிபால் பாதிக்கப்பட்டிருந்தாலும், நோயின் தீவிரம் குறைவாக இருப்பதால் அவர்களுக்கு அது தெரியாது.
பட மூலாதாரம், Getty Images
ஒருவேளை ஒரு நபர் இந்த திரிபால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவரின் உடல் இந்த திரிபை எதிர்த்துப் போராட நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியிருக்கலாம்.
புதிய திரிபான ஜேஎன்.1 என்பது ஓமிக்ரானின் துணை வகை என்கிறார் மருத்துவர் அவினாஷ் கவாண்டே.
இது அச்சுறுத்தக் கூடிய வகை தான். இருப்பினும், அதன் அறிகுறிகள் லேசானவை. தீவிரமானதாக அது மாறாது.
அதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கின்றது.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து, அதிகமான மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு, இறப்பு விகிதம் உயர்ந்தால், கொரோனாவின் புதிய அலை வந்துவிட்டது என்று கூறலாம்.
இருப்பினும், ஜேஎன்.1 கொரோனா திரிபால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை.
காரணம், அதன் அறிகுறிகள் மிகவும் லேசானவை. இதில் இறப்பு விகிதமும் குறைவாகவே உள்ளது. எனவே, இது கொரோனாவின் புதிய அலை என்று உறுதியாகக் கூற முடியாது. ஆனால் ஏற்கனவே உடல்நலக் கோளாறுகள் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு