4
அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற கடந்த பிப்ரவரி மாதம் ஜனாதிபதி டிரம்ப் அறிவித்த கோல்டு கார்டு விசாக்கு (தங்க அட்டை விசா) தற்போது கிராக்கி அதிகரித்துள்ளது.
இந்த விசாவை பெற 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை. இந்த கோல்டு கார்ட் விசாவில், கிரீன் கார்டு விசாவைவிட அதிக சலுகைகள் உள்ளதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் கோல்டு கார்ட் விசா திட்டத்துக்கு அமோக வரவேற்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் கூறியதாவது, “டிரம்ப் அறிவித்த கோல்டு கார்ட் விசா திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 1,000 கோல்டு கார்ட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், கோல்டு கார்ட் வாங்குவதற்காக பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்கள் வரிசையில் நிற்கிறார்கள்.”
மேலும், “இதன்மூலம் கிரீன் கார்ட் வைத்திருப்பது போன்று கோல்டு கார்டும் பயனுள்ளதாக இருக்கும். இது அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றதற்கு சமம். இத்திட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.”
“இந்த திட்டம் 2 வாரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும். இதற்கான மென்பொருளை எலான் மஸ்க் உருவாக்கி வருகிறார். 5 மில்லியன் டொலர்களை செலுத்துவதன் மூலம் அமெரிக்காவில் காலவரையின்றி, அவர்கள் விரும்பும் எந்த நேரத்திலும் இருக்க உரிமை உண்டு.”
“எனினும், அவர்களது பின்புலம் சரிபார்க்கப்படுகிறது. அவர்கள் தீயவர்களாகவோ அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களாகவோ இருந்தால் அமெரிக்கா எப்போதும் அதை இரத்து செய்யலாம்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.