பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் என்றும், ஆனால் இந்தியாவுக்கு எதிராக எந்தப் போட்டியிலும் விளையாடாது என்றும் கூறியுள்ளது.
இந்த மாதம் பிப்ரவரி 7 ஆம் தேதி டி20 உலகக் கோப்பை தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தானின் இந்த முடிவு நாட்டிற்குள்ளும் சர்வதேச கிரிக்கெட் உலகிலும் கலவையான எதிர்வினைகளைப் பெற்றுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சல்மான் ஆகா, இந்தியாவுக்கு எதிராக விளையாடப் போவதில்லை என்ற முடிவு அவருடையது அல்ல என்று தெளிவுபடுத்தினார்.
ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்குப் பிறகு, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”இந்தியாவுக்கு எதிராக விளையாடப் போவதில்லை என்ற முடிவு எங்களுடையது அல்ல. அரசாங்கமோ அல்லது பிசிபி தலைவரோ என்ன செய்யச் சொன்னாலும் நாங்கள் செய்வோம்” என்று கூறினார்.
இந்தியாவில் போட்டிகளை விளையாட மறுத்து வங்கதேசம் டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியபோது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வியின் பேச்சுக்கள், பாகிஸ்தான் முழு தொடரில் இருந்து வெளியேறலாம் என்பது போன்ற தோற்றத்தைக் கொடுத்தன. ஆனால் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் களமிறங்குவதில்லை என்ற தனது முடிவை பாகிஸ்தான் அறிவித்தது.
இதற்கிடையே பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ரஷீத் லத்தீப் இந்திய ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “24 மணி நேரத்தில் எதுவும் நடக்கலாம்” என்று கூறினார்.
‘முன்பே முடிவெடுத்திருக்க வேண்டும்’
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு,
டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்கும் முடிவை பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் கம்ரான் அக்மல் ஆதரித்துள்ளார். ”இந்த முடிவு நீண்ட காலத்திற்கு முன்பே வந்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திற்கு கம்ரான் அக்மல் அளித்த பேட்டியில், “விளையாட்டுடன் அரசியலைக் கலப்பதன் மூலம் இந்தியா பலமுறை கிரிக்கெட்டின் உணர்வைப் பாதித்துள்ளது” என்று கூறினார்.
“பாகிஸ்தான் அரசாங்கத்தின் இந்த கடுமையான நிலைப்பாட்டை ஆதரிக்க வேண்டும்” என்றார்.
இதற்கிடையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, “ஐசிசி போட்டியில் இந்தியா பாகிஸ்தானை தோற்கடித்த நாளில் இந்தியாவுக்கு எதிராக விளையாடப் போவதில்லை என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதை பாசாங்குத்தனம் என்று கூறலாமா?” என்று கேள்வி எழுப்பினார்.
ஞாயிற்றுக்கிழமை இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை போட்டியைப் பற்றி அவர் குறிப்பிட்டார். இந்தப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.
“பாகிஸ்தான் vs இந்தியா போட்டி உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாகும். ஆனால் அதில் அரசியல் தலையீடு உள்ளது. இது விளையாட்டின் உணர்வையும் பெருமையையும் பாதிக்கிறது” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது யூசுப் கூறியுள்ளார்.
”இப்படி நியாயமற்ற சூழ்நிலையில் விளையாட மறுப்பது என்பது ஒரு கொள்கை அடிப்படையிலான முடிவாக மாறுகிறது” என்று அவர் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளார்.
பட மூலாதாரம், AFP via Getty Images
‘பின் வாங்கக் கூடாது’
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் காலித் மஹ்மூத் பிபிசி உருதுவிடம், ”பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது கொள்கை ரீதியான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.
“பாகிஸ்தான் மீண்டும் அவசர ஐசிசி கூட்டத்தை கோர வேண்டும். இந்தியா எப்போதும் அரசியலை விளையாட்டில் கொண்டு வருகிறது, இந்தப் போக்கை நிறுத்த வேண்டும் என்பதை பாகிஸ்தான் மற்ற ஐசிசி உறுப்பினர்களுக்கு விளக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
மேலும்,”சில நேரங்களில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கைகுலுக்க மறுக்கிறார்கள். சில சமயங்களில் அவர்கள் கோப்பைகளை ஏற்க மறுக்கிறார்கள். சில சமயங்களில் அவர்கள் வேறொரு நாட்டில் விளையாடச் செல்ல மறுக்கிறார்கள்.” என்று காலித் மஹ்மூத் கூறியுள்ளார்.
“பாதுகாப்பு காரணங்களுக்காக பல அணிகள் கடந்த காலத்தில் பாகிஸ்தானுக்கு வர மறுத்தன. ஐசிசி எந்த அணியையும் பாகிஸ்தானில் விளையாடும்படி கட்டாயப்படுத்தியதில்லை, எனவே இப்போது வங்கதேசம் ஏன் இந்தியாவுக்குச் செல்ல கட்டாயப்படுத்தப்பட்டது?” என்று காலித் கேள்வி எழுப்பினார்.
“மில்லியன் கணக்கான டாலர்களை தியாகம் செய்ய வேண்டியிருந்தாலும், நாம் பின்வாங்கக்கூடாது, ஏனென்றால் உலகம் பணத்தை அல்ல, கொள்கைகளையே பார்க்கிறது.” என்கிறார் காலித்.
‘1 பில்லியன் டாலர் வருமானம்’
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு,
பாகிஸ்தான் உலகக் கோப்பையில் விளையாடவில்லை என்றால், அது ஐ.சி.சி.யின் வருவாயை நேரடியாகப் பாதிக்கும் என்று விளையாட்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாசித் அலி தனது யூடியூப் சேனலில், “பாகிஸ்தான் உலகக் கோப்பையில் விளையாடவில்லை என்றால், ஒளிபரப்பாளர்கள் நிறைய சிக்கல்களைச் சந்திப்பார்கள். பாகிஸ்தான் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டால், இந்தியாவுக்கு எதிராக விளையாடும் அணிக்கு அதே பார்வையாளர்கள் கிடைக்குமா?” என்று கேள்வி எழுப்புகிறார்.
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின்படி, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டிகள் கடந்த 20 ஆண்டுகளில் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளன.
’24 மணி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்’
பட மூலாதாரம், AFP via Getty Images
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) வட்டாரங்களை மேற்கோள் காட்டி, ஏஎன்ஐ செய்தி நிறுவனம், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்புவில் நடைபெற உள்ளதாகவும், இந்திய அணி திட்டமிட்டபடி மைதானத்திற்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ரஷீத் லத்தீப் கடைசி நிமிடம் வரை எதுவும் நடக்கலாம் என்று நம்புகிறார்.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், ரஷீத் லத்தீப், “இதுவரை எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு போட்டிகள் ஹைபிரிட் மாதிரியில் நடத்தப்படும் என்று பாகிஸ்தானும் இந்தியாவும் ஒப்புக்கொண்டன. ஆசிய கோப்பை துபையில் நடைபெற்றது. பெண்கள் ஒருநாள் உலகக் கோப்பையில், பாகிஸ்தான் பெண்கள் அணி இலங்கையில் விளையாடியது. ஆனால் வங்கதேச சம்பவத்திற்குப் பிறகு நிலைமை மாறியது.” என்றார்.
“உலகக் கோப்பையைப் பார்க்கும் 60 முதல் 70 சதவீதம் பேர் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் காரணமாக அதைப் பார்க்கிறார்கள்.”
மேலும் “ஒளிபரப்பாளர்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்கள். அவர்கள் ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பார்கள். பேச்சுவார்த்தைகள் எப்போதும் திரைக்குப் பின்னால் நடந்து கொண்டிருக்கின்றன” என்று லத்தீஃப் கூறினார்.
“24 மணி நேரத்தில் எதுவும் நடக்கலாம்” என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு,
உறவுகளில் விரிசல்
இந்தியா-பாகிஸ்தான் உறவுகளில் ஏற்பட்ட விரிசலின் சமீபத்திய அத்தியாயம், கடந்த ஆண்டு துபையில் நடந்த ஆசிய கோப்பை போட்டிகளின் போது தெளிவாகத் தெரிந்தது.
செப்டம்பர் 28 அன்று நடைபெற்ற இறுதிப் போட்டி உட்பட,பாகிஸ்தானை இந்தியா மூன்று முறை தோற்கடித்தது. இருப்பினும், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்துவிட்டனர்.
மேலும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையை வாங்கவும் மறுத்துவிட்டனர். மொஹ்சின் நக்வி பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் உள்ளார்.
வங்கதேசம் இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில், இந்தியாவுக்கு பயணம் செய்ய மறுத்ததோடு, அதன் அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாட அனுமதி கோரியது. ஐசிசி இந்த கோரிக்கையை நிராகரித்ததோடு, இந்த ஆண்டு போட்டியில் இருந்து வங்கதேசம் விலக்கப்பட்டது.