2026 டி20 உலகக் கோப்பை இன்று (பிப்ரவரி 7) தொடங்குகிறது. இந்தியாவும், இலங்கையும் இந்த மிகப் பெரிய தொடரை நடத்த தயாராகிவிட்டன. 20 அணிகள் மோதும் இந்தத் தொடர் நிச்சயம் ஒவ்வொரு உலகக் கோப்பையைப் போலவும் பல ஆச்சரியங்களைக் கொடுக்கலாம். ஆனால், கோப்பை வெல்லக்கூடிய அணிகள் என்று யோசிக்கும்போது அங்கு பெரிதாக ஆச்சரியங்கள் இருக்காது என்றே நான் நினைக்கிறேன்.
இந்த உலகக் கோப்பையை ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா வெல்வதற்கான சாத்தியம் அதிகமாக இருக்கிறதாகவே நான் கருதுகிறேன். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் அணியாக அடுத்தடுத்து இரண்டு கோப்பைகள் வெல்ல இதுவொரு நல்ல வாய்ப்பு.
சொல்லப்போனால், 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியை விட இப்போதைய அணி பலமாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த டி20 அணியைப் பார்த்தால் எனக்கு 1990கள், 2000-த்தின் முற்பகுதியில் இருந்த ஆஸ்திரேலிய அணியைப் பார்ப்பதுபோல் இருக்கிறது.
அந்த ஆஸ்திரேலிய அணி எப்படி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியதோ, அப்படி இந்த இந்திய அணி டி20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. 1999, 2003, 2007 என தொடர்ந்து 3 உலகக் கோப்பைகளை அந்த அணி வென்றது. அதுபோல், ஆதிக்கம் செலுத்தி இந்த அணி உலகக் கோப்பையை வெல்லும் என்று நான் நினைக்கிறேன்.
போட்டியை வென்று கொடுக்கக்கூடிய திறன், ஆல்ரவுண்ட் திறமை, ஆல்ரவுண்டர்களின் எண்ணிக்கை, பவர்பிளே அதிரடி, ‘பவர் ஹிட்டிங்’, வேரியேஷன் நிறைந்த பௌலிங் யூனிட், எதற்கும் பயப்படாத அவர்களின் அஞ்சாமை, அனைவருக்குள்ளும் இருக்கும் நம்பிக்கை போன்றவற்றையெல்லாம் பார்க்கும்போது நிச்சயம் இந்தியா ஆதிக்கம் செலுத்தி, வெல்லும் என்றே தோன்றுகிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கடந்த செப்டம்பரில் நடைபெற்ற ஆசிய கோப்பை டி20 தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா 9-வது முறையாக கோப்பையை வென்றது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்த அணியை வெல்வது நிச்சயம் யாருக்குமே சவால்தான். கடந்த சில மாதங்களாக இவர்களை டி20 போட்டிகளில் வீழ்த்த எந்த அணியுமே சிரமப்பட்டிருக்கிறது. முதலில் பேட்டிங் செய்தால் பெரிய ஸ்கோரை அடிக்கிறார்கள், எதிரணி பெரிய ஸ்கோர் அடித்தாலும் சிறப்பாக சேஸ் செய்கிறார்கள். எல்லா விதத்திலும் ‘டாப்’ இடத்தில் இருக்கும் இந்த அணி, சொந்த மண்ணில் வேறு விளையாடுகிறது. அதனால், வேறு ஏதேனும் அணி ஆச்சரியப்படுத்தினால் மட்டுமே இந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்வதைத் தடுக்க முடியும்.
அப்படி ஆச்சரியம் ஏற்படுத்தக்கூடிய அணிகளாக நான் கருதுவது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா.
என்னதான் பிரச்னைகள் இருந்தாலும், பெரிய தொடர்கள் என்று வரும்போது ஆஸ்திரேலியா இன்னும் ஒரு படி மேலே சென்று விளையாடும். சமீபத்திய தொடரில் நியூசிலாந்து தோற்றிருந்தாலும், அவர்களின் ஆட்டம் நன்றாக இருந்தது. அவர்கள் நன்கு தயாராகியிருக்கிறார்கள். உத்தி ரீதியிலாக சிறப்பான ஆட்டத்தைக் கொடுப்பவர்கள். அதேபோல், இந்த தென்னாப்பிரிக்க அணி டி20 கிரிக்கெட்டில் சில மிகச் சிறந்த வீரர்களைக் கொண்டிருக்கிறது. அதனால், அவர்கள் நிச்சயம் சிறப்பான கிரிக்கெட் ஆடுவார்கள்.
இந்த 3 அணிகள் தான் இந்தியாவுக்கு சற்று சவால் கொடுக்கலாம். இருந்தாலும், அவர்கள் அதுவரை விளையாடிடாத ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்தியாவை வீழ்த்த முடியும். இந்திய அணி அப்படியொரு ஃபார்மில் இருக்கிறது.
இந்தியாவின் பலம் மற்றும் பலவீனம்
பட மூலாதாரம், Getty Images
அனைத்துப் பிரிவிலும் தரமான, முழுமையான வீரர்களைக் கொண்டிருப்பது இந்திய அணியின் மிகப் பெரிய பலமாக நான் கருதுகிறேன்.
அபிஷேக் ஷர்மாவும், இஷான் கிஷனும் பவர்பிளேவில் எதிரணி பௌலர்களுக்கு அதீத நெருக்கடியை ஏற்படுத்துகிறார்கள். எல்லா போட்டியிலும் பவர்பிளேவில் 70-80 ரன்கள் அடிக்கிறார்கள். அதனால், எதிரணிகள் அங்கேயே போட்டியில் பின்தங்கிவிடுகின்றன.
ஹர்திக் பாண்டியாவின் ஆல்ரவுண்ட் திறன் மிகப் பெரிய ஆயுதம். மற்றொரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஷிவம் துபேவின் பந்துவீச்சிலும் முன்னேற்றத்தைக் காணமுடிகிறது.
அர்ஷ்தீப் இந்த ஃபார்மட்டில் தொடர்ந்து கோலோச்சுகிறார். உலகின் தலைசிறந்த பௌலர்களுள் ஒருவரான பும்ரா இருக்கிறார். வருண் சக்ரவர்த்தி, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங் என அனைவருமே மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கிறார்கள்.
இந்த அணியைப் பார்க்கும்போது எனக்கு எந்தவொரு விஷயமுமே பலவீனமாக இருப்பதாகத் தெரியவில்லை.
இந்த அணியில் இருக்கும் ஒரே பிரச்னையாக அதிக இடது கை பேட்டர்கள் இருப்பதை வேண்டுமானால் சொல்லலாம். சூர்யா, ஹர்திக் தவிர அனைவருமே இடது கை பேட்டர்களாக இருக்கிறார்கள். இது எதிரணி நன்கு திட்டமிட்டு களமிறங்குவதற்கு ஏதுவாக இருக்கும். இதை நான் பலவீனம் என்று சொல்லமாட்டேன். ஆனால், ஒருவேளை ஆடுகளம் மெதுவானதாக இருந்து எதிரணியில் நல்ல ஆஃப் ஸ்பின்னர்கள் இருந்தால், அங்கு இந்திய அணி சிக்கலை சந்திக்கக்கூடும்.
இதுபோக, ஏதேனும் சில போட்டிகளில் டெத் பௌலிங் கைகொடுக்காமல் போவதற்கான வாய்ப்பிருக்கிறது. அர்ஷ்தீப், பும்ரா இருவருமே நன்கு பந்துவீசுபவர்கள் என்றாலும், அவ்வப்போது அர்ஷ்தீப் அதிகம் ரன்கள் கொடுத்துவிடுவார். அது டெத் ஓவர்களில் நெருக்கடியை ஏற்படுத்தலாம்.
நெருக்கடி என்று பேசும்போது, சொந்த மண்ணில் ஆடுவதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பொதுவாகவே சொந்த ஊர் ரசிகர்கள் முன்பு ஆடும்போது அவர்களின் அதீத எதிர்பார்ப்பால் ஏற்படும் நெருக்கடி இருக்கும். அதுவும் உலகக் கோப்பை அரங்கில் அது அதிகமாகவே இருக்கும். இந்த இந்திய அணி சற்றே இளம் வீரர்கள் நிறைந்த அணியாக இருப்பதால், அவர்கள் இந்த நெருக்கடியை சற்று அதிகமாக உணரக்கூடும். அதை அவர்கள் எப்படிக் கையாள்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம்.
இரு துருப்புச் சீட்டுகள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வருண் சக்ரவர்த்தி
தொடர்ந்து ரன் குவித்துக் கொண்டிருக்கும் பேட்டர்கள் மீது தான் எப்படியும் இந்தத் தொடரில் அதிக கவனம் இருக்கும். ஆனால், இந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு துருப்புச்சீட்டாக இருக்கப்போகும் இரண்டு வீரர்களாக நான் கருதுவது ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் வருண் சக்ரவர்த்தி.
‘பேட்டிங் ஆட்டத்தை வென்றுகொடுக்கும், பௌலிங் தொடரை வென்றுகொடுக்கும்’ என்பார்கள். அதற்கேற்ப இந்த இரண்டு பௌலர்கள் இந்தியாவின் வெற்றிக்கு மிகப் பெரிய பங்களிப்பைக் கொடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இவர்கள் இருவரும் எப்படி விக்கெட்டுகள் எடுத்து எதிரணியின் ரன் விகிதத்தையும் ஆட்டத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள் என்பது போட்டியை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும்.
பெரும்பாலும் இந்த உலகக் கோப்பையில் ஆடுகளங்கள் பேட்டிங்குக்கு சாதகமாகவே இருக்கப்போகின்றன. பவுண்டரி எல்லைகளும் ஓரளவு சிறிதாகவே இருக்கும். அப்படியிருக்கையில், இவர்களின் 8 ஓவர்கள் மிகவும் முக்கியமாக இருக்கும்.
குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்தி இந்திய அணிக்கு மிகப் பெரிய சொத்து. அவரால் பவர்பிளே, மிடில் ஓவர், டெத் ஓவர் என அனைத்து தருணங்களிலும் பந்துவீச முடியும். இத்தனை வருடமாக அவர் ஆடியிருந்தாலும், அவரது பந்துவீச்சைக் கணிப்பது இன்னும் பேட்டர்களுக்குக் கடினமான ஒன்றாக இருக்கிறது.
நல்ல வேகத்தில் பந்துவீசுகிறார். பேட்டர்கள் அடிப்பதற்கு நேரம், ‘Width’ கொடுக்காமல் பந்துவீசுகிறார். அதுமட்டுமல்லாமல், அவருடைய வேரியேஷன்கள் – ஒரே மாதிரி வரும் இரு பந்துகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி செல்லும் – ஒரு பந்து நேராகச் செல்லும், ஒரு பந்து உள்ளே வரும். இன்னும் பேட், பேட்டரின் கால் காப்பு (Pad) இடைவெளியில் பல பேட்டர்கள் போல்ட் ஆவதைப் பார்க்கிறோம்.
மிடில் ஓவர்களில் ரன்களையும் கட்டுப்படுத்துகிறார், விக்கெட்டும் எடுக்கிறார். எப்போதெல்லாம் தேவையோ, சூர்யா அப்போதெல்லாம் வருண் கையில் பந்தைக் கொடுக்கிறார். அந்த நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார். அதை பூர்த்தியும் செய்கிறார். நெருக்கடிகளை சமாளித்து பெரிய போட்டிகளிலும் சோபிக்கிறார்.
சுழலும் ஆடுகளம், தட்டையான ஆடுகளம், புற்கள் நிறைந்த ஆடுகளம் என எதுவாக இருந்தாலும் விக்கெட் எடுக்கிறார். இரண்டு சிக்ஸர்கள் கொடுத்தாலும் எப்படியும் கம்பேக் கொடுத்து விக்கெட் வீழ்த்திவிடுகிறார். தொடர்ச்சியாக இப்படியொரு சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவது சாதாரண விஷயம் இல்லை. இந்தியாவில், இந்த காலகட்டத்தில் ஆட்டத்தின்போது பனிப்பொழிவு பெருமளவு இருக்காது. அதுவுமே கூட இவருக்கு சாதகமான விஷயமாக அமையலாம்.
எப்படி இருந்தாலும், வருண் இந்த உலகக் கோப்பையில் நிச்சயம் இந்தியாவின் மிகப் பெரிய துருப்புச்சீட்டாக விளங்குவார்.
இந்தியாவின் பலமான பிளேயிங் லெவன்
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவுக்கு எதிராக இன்று உலகக் கோப்பையைத் தொடங்கும் இந்திய அணிக்கு முன் இருக்கும் கேள்வி, சாம்சன் ஆடுவாரா, இஷான் கிஷன் ஆடுவாரா என்பது.
திலக் வர்மா மீண்டும் திரும்பியிருப்பதால், அபிஷேக், இஷான், திலக் என டாப் 3 பொசிஷன்களில் அனைவருமே இடது கை பேட்டர்களாக இருக்கவேண்டுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதனால், சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள்.
சஞ்சு சாம்சன் திறமையான வீரர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், தற்போது அவர் சிறந்த ஃபார்மில் இல்லை. அதேசமயம் இஷான் கிஷன் மிகச் சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கிறார். சதம் அடிக்கிறார், பௌலர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துகிறார். அதனால், அவர்தான் சரியான தேர்வாக இருப்பார்.
நான் இந்த அணியோடு தான் தொடங்குவேன். ஒருவேளை போகப்போக ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால், மிடில் ஓவர்களில் விக்கெட் தேவை என்ற நிலை வந்தால் நான் அக்ஷர் பட்டேலுக்குப் பதிலாக குல்தீப் யாதவை களமிறக்கலாம் என்று யோசிப்பேன். அக்ஷர் பட்டேல் எட்டாவது வீரராகவே பேட்டிங் செய்யப்போகிறார். டாப் 7 இவ்வளவு பலமாக இருக்கும்போது எட்டாவது இடத்திலும் ஒரு பேட்டர் தேவையா என்று இந்திய அணி யோசிக்கலாம்.
இன்று வான்கடேவில் நடக்கும் அமெரிக்காவுக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்தியா நான் மேற்கூறிய பிளேயிங் லெவனோடு களமிறங்கவே வாய்ப்பு அதிகம். இது நிச்சயம் அவர்களுக்குப் பெரும் வெற்றியை ஈட்டிக்கொடுக்கும்.
(இந்தக் கட்டுரையை எழுதிய வித்யுத் சிவராமகிருஷ்ணன், தமிழ்நாடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். 2000 அண்டர் 19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். தற்போது வர்ணனையாளராக இருக்கிறார்.)