ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக ஜான் டெர்னஸ் பொறுப்பேற்று இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அதில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய மாற்றத்தை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
டிம் குக் பதவி விலகியதைத் தொடர்ந்து ஆப்பிளின் தலைமைப் பொறுப்பை ஏற்ற டெர்னஸ், புதன்கிழமை நடைபெற்ற நிறுவனத்தின் ஆண்டுதோறும் நடைபெறும் புதிய தயாரிப்புகள் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு, மடிக்கக்கூடிய முதல் ஐபோனின் பிரமாண்டமான படங்களின் முன்பாக அவர் மேடையில் தோன்றினார்.
புத்தகம் போல மடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஐபோனுக்கு ‘டுயோ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை வெளியான ஐபோன்களிலேயே இதுதான் மிகப்பெரியது. அமெரிக்காவில் இதன் ஆரம்ப விலை 1,999 டாலர்கள் ஆகும். அதிகபட்சமாக இதன் விலை 3,200 டாலர்கள் வரை செல்கிறது.
டுயோவின் வடிவமைப்பு “ஐபேடால் ஈர்க்கப்பட்டது” என்று டெர்னஸ் கூறினார். அதேநேரத்தில், அதன் மடிக்கும் வசதி “இயல்பானதாகவும் முற்றிலும் எளிமையானதாகவும்” இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மடிக்கக்கூடிய இந்த ஐபோனை உருவாக்கும் பணி ஆப்பிள் நிறுவனத்துக்குள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
விரித்த நிலையில், புதிய டுயோ சிறிய ஐபேட் போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது. பாதியாக மடித்தால், அகலமான ஐபோன் போன்ற தோற்றத்தில் இருக்கும்.
சந்தையில் ஏற்கெனவே உள்ள மற்ற மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களைப் போன்ற தோற்றமும் அனுபவமும் டுயோவுக்கு இருக்கக் கூடாது என்று ஆப்பிள் விரும்பியதாக நிகழ்ச்சியின்போது டெர்னஸ் கூறினார்.
மற்ற மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் “இரண்டு போன்களை ஒன்றாக ஒட்டிவைத்தது போலத் தோன்றுகின்றன… இதனால் பெரிய திரை என்பது உண்மையில் மிகவும் சிறியதாகத் தோன்றுகிறது” என்று அவர் கூறினார்.
டுயோ, “மடிக்கக்கூடிய போனைப் பயன்படுத்தும் அனுபவத்தையே மறுவரையறை செய்யும் என்று நாங்கள் கருதும் குறிப்பிடத்தக்க தொடர் கண்டுபிடிப்புகளின் விளைவு” என்று டெர்னஸ் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Apple/courtesy
மடிக்கக்கூடிய ஐபோனை உருவாக்கும் பணியில் டெர்னஸ் நேரடியாக ஈடுபட்டிருந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் குக்கிறகு பிறகு அடுத்த தலைவராக அவர் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு, ஆப்பிளின் ஹாட்வேர் பிரிவில் பல ஆண்டுகளாக மூத்த நிர்வாகப் பொறுப்பில் அவர் பணியாற்றி வந்தார்.
தொழில்நுட்ப ஆய்வு நிறுவனமான எஃப்டிஎம் சிசிஎஸ் இன்சைட்டின் தலைமை ஆய்வாளர் பென் வுட் “பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் மிகப்பெரிய ஐபோன் அறிமுகங்களில் ஒன்றாக இது இருக்கும் என்பதால், டெர்னஸ் பதவி உயர்வு குறிப்பாக இந்த நிகழ்வுடன் இணைந்திருக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருக்க வாய்ப்புள்ளது” என்றார்.
“ஆப்பிளில் எதுவுமே தற்செயலாக நடப்பதில்லை,” என்றும் வுட் கூறினார்.
புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நேரடியாகப் பங்கேற்ற கிரியேட்டிவ் ஸ்ட்ராடஜீஸ் நிறுவனத்தின் ஆய்வாளர் கரோலினா மிலனேசி, நிகழ்ச்சியில் டெர்னஸுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், “அவரே ஒரு தயாரிப்பு போல” தோன்றும் வகையில் இருந்ததாகக் கூறினார்.
ஐபோனின் வடிவமைப்பில் மாற்றம் செய்வது, 2007-ஆம் ஆண்டு முதல் ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஆப்பிள் நிறுவனம் பெரிய அளவில் வெற்றியடைந்த புதிய தயாரிப்பையோ அல்லது உண்மையிலேயே உற்சாகமளிக்கும் புதிய கண்டுபிடிப்பையோ அறிமுகப்படுத்தவில்லை என்ற விமர்சனங்களுக்கு ஓரளவு பதிலளிக்கக்கூடும்.
“மடிக்கக்கூடிய ஐபோன், ஆப்பிளின் தயாரிப்புப் பட்டியலில் அதிக விலையுள்ள ஓர் அலங்காரப் பொருளாக மட்டுமே மாறிவிடும் அபாயம் உள்ளது. அது அந்தப் பொருளைப் பயன்படுத்துபவருக்கு ஒரு அந்தஸ்தை வழங்கலாம்; ஆனால், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்காமல் போகலாம்,” என்று ஃபாரெஸ்டர் நிறுவனத்தின் ஆய்வாளர் தீபஞ்சன் சட்டர்ஜி கூறினார்.
இதற்கு முன்பு, புதிய ஐபோன்களில் மிகக் குறைந்த ஆரம்ப விலை 900 டாலர்களாக இருந்தது. புதன்கிழமை ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் 18 ப்ரோ மற்றும் 18 ப்ரோ மேக்ஸ் மாடல்களையும் அறிமுகப்படுத்தியது. அமெரிக்காவில் அவற்றின் ஆரம்ப விலைகள் முறையே 1,199 டாலர்கள் மற்றும் 1,299 டாலர்கள்.
மடிக்கக்கூடிய ஐபோனும் ஆப்பிளின் விஷன் ப்ரோ ஹெட்செட்டை போன்ற நிலையைச் சந்திக்கக்கூடும் என்று சட்டர்ஜி கூறினார். விஷன் ப்ரோவின் விலை 3,699 டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அது வாடிக்கையாளர்களிடம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை.
அதேநேரத்தில், ஐபோனைப் போன்று பிரபலமாக இல்லாவிட்டாலும், ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கானோர் வாங்கும் ஆப்பிள் வாட்ச் போன்ற வெற்றியையும் மடிக்கக்கூடிய ஐபோன் பெறக்கூடும் என்றும் அவர் கூறினார்.
ஐபோன் செயல்படும் விதத்துக்கு மக்கள் ஏற்கெனவே பழகிவிட்டிருப்பதும், புதிய வடிவமைப்பின் விற்பனை அதிகரிப்பதற்கு மற்றொரு தடையாக இருக்கலாம்.
“மடிக்கக்கூடிய போன்கள் ஆர்வமூட்டும் சாதனங்கள். பலர் அவற்றைப் பற்றி ஆர்வமாக உள்ளனர். ஆனால், வழக்கமான போனில் இருந்து மடிக்கக்கூடிய போனுக்கு மாறும்போது மென்பொருளைப் பயன்படுத்துவதிலும், அதைப் புதிதாகக் கற்றுக்கொள்வதிலும் சிரமம் உள்ளது,” என்று மிலனேசி குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Apple/courtesy
சாம்சங், ஹுவாவே உள்ளிட்ட நிறுவனங்களின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் தற்போது மொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில் வெறும் 2% மட்டுமே இருப்பதாக வுட் குறிப்பிட்டார். ஆப்பிளின் மடிக்கக்கூடிய ஐபோன் சந்தையில் ஆர்வத்தையும் தேவையையும் அதிகரிக்கக்கூடும் என்றாலும், அடுத்த பத்தாண்டில் மொத்த ஸ்மார்ட்போன் சந்தையில் இதன் விற்பனை 4% மட்டுமே இருக்கும் என்று தரவு மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான எஃப்டிஎம் சிசிஎஸ் இன்சைட் கணித்துள்ளது.
ஐபோன், ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் தயாரிப்பாக உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் நிறுவனத்தின் மொத்த விற்பனையில் பாதிக்கும் மேற்பட்ட பங்கை அது கொண்டுள்ளது.
சமீபத்திய காலாண்டுகளில், ஐபோனுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான தேவை இருப்பதாக ஆப்பிள் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. அதன் சமீபத்திய ஐபோன் மாடல், நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிக வெற்றிகரமான தயாரிப்பு அறிமுகமாகவும் அமைந்ததாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், தனது ஆடியோ மற்றும் உரையாடல் உதவியாளரான ‘சிரி ஏஐ’-ஐ அறிமுகப்படுத்துவது குறித்த கூடுதல் தகவல்களையும் ஆப்பிள் வெளியிட்டது.
ஐபோன் 18 முதல், ஒருவரின் போனில் உள்ள செய்திகள், மின்னஞ்சல்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சிரி ஏஐ தேடி, கேள்விகளுக்கு பதிலளிப்பதுடன், அந்த நபருக்குப் பதிலாக சில செயல்களையும் மேற்கொள்ளும்.
புதிய ஆப்பிள் வாட்சிலும் சிரி ஏஐயின் சில வசதிகள் கிடைக்கும். அதில், ஒருவர் இந்த வசதியை இயக்கியிருந்தால், உரையாடல்களைப் பதிவு செய்து அவற்றை எழுத்து வடிவமாக மாற்றும் வசதியும் இடம்பெறும்.
ஐபோனில் ஏஐ மூலம் இயக்கப்படும் புதிய வசதிகளை “அறிவார்ந்த தனிப்பட்ட மையம்” என்று டெர்னஸ் குறிப்பிட்டார். அதேநேரத்தில், “உங்களது அன்றாட வாழ்க்கையின் மிகவும் தனிப்பட்ட தகவல்களை” ஆப்பிள் பயன்படுத்தும் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
எனினும், இவை அனைத்தும் தனிப்பட்டதாகவே இருக்கும் என்று அவர் உறுதியளித்தார். ஏஐ சார்ந்த வசதிகள் பெரும்பாலும் “சாதனத்திலேயே” இயங்கும் என்றும், அதாவது மூன்றாம் தரப்பு நிறுவனங்களின் மூலம் அவை இயக்கப்படாது என்றும் அவர் கூறினார். ஏதேனும் ஒரு செயல்பாட்டுக்கு மூன்றாம் தரப்பு சேவை தேவைப்பட்டாலும், அந்தத் தகவல்கள் சர்வரிலோ அல்லது கிளவுட்டிலோ தனிப்பட்ட முறையிலேயே பாதுகாக்கப்படும் என்றும் டெர்னஸ் தெரிவித்தார்.
“மற்றவர்கள் அந்தத் தரவுகளைச் சேகரித்து சேமிக்க வேண்டிய ஒன்றாகப் பார்க்கிறார்கள். ஆனால் இங்கு, உங்களுக்குச் சொந்தமான தகவல்களை ஆப்பிளால்கூட அணுக முடியாது,” என்று டெர்னஸ் கூறினார்.