8
வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள், இன்று (11) போராட்டம் நடத்தினர்.
பாராளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர்.
பாராளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கிச் சென்றவர்களை இரும்பு தடுப்பு வேலிகள் கொண்டு தடுக்கப்பட்டனர்.
வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து பேரணியாகச் சென்ற 25 கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான எம்.பி.க்களை பொலிஸார் தடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சஞ்சய் ராவத்,அகிலேஷ் யாதவ் மற்றும் கனிமொழி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்களை பொலிஸார் கைது செய்தனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், கர்நாடகாவில் உள்ள ஒரு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற முறைகேடுகளை வெளியிட்டு, அதற்கான ஆதாரங்களையும் குறிப்பிட்டார்.
பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து இதுபோன்ற பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளன என தெரிவித்தார்.
இதையடுத்து, டெல்லியில் கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கர்நாடகத்தில் ஒரு பெண் வாக்காளர் 2 முறை வாக்கு செலுத்தியிருப்பதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்நிலையில் கைதுக்குப் பின்னர் பஸ்ஸில் இருந்தபடி செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “யதார்த்தம் என்னவென்றால், அவர்களால் பேச முடியாது. உண்மை நாட்டின் முன்பு உள்ளது. இந்தப் போராட்டம் அரசியலுக்காக அல்ல, அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கானது. ஒரு நபர் ஒரு ஓட்டுக்கான போராட்டம் இது. எங்களுக்குத் தேவை முழுமையான சரியான வாக்காளர் பட்டியல்” என்று தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜய் கண்டனம்
இதேவேளை, ராகுல் காந்தியின் கைதுக்கு தவெக தலைவர் விஜய் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதில் “சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தலைமையில் ஊர்வலமாகச் சென்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது” எனக் குறிப்பிட்டுள்ளார்.