- எழுதியவர், சங்கரநாராயணன் சுடலை
- பதவி, பிபிசி தமிழ்
-
“என்னை டெல்லி அழைத்து வந்த கணவர் இப்போது இல்லை. மகனும் இறந்து விட்டார். இப்போது வீட்டை இடித்து விட்டார்கள். நான் எங்கே செல்வேன்?” என்கிறார் கண்ணம்மா. கடலூர் மாவட்டம் விருத்தசாலத்தைச் சேர்ந்த 70 வயதான கண்ணம்மா அவரது கணவர் டெல்லியில் வேலை பார்த்ததால் அவருடன் 50 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்து குடியேறினார். அன்று முதல் டெல்லியே அவரது நிரந்த முகவரி ஆனது. சொந்த ஊரில் தனக்கென யாரும் இல்லை எனக் கூறும் கண்ணம்மா, தன்னால் அரசு கூறும் புதிய இடத்தில் வாழ முடியுமா என கவலையுடன் யோசிக்கிறார்.
புதுடெல்லியில் உள்ள ஜங்புராவில் தமிழர்கள் வசிக்கும் மதராசி கேம்பில் சுமார் 370 வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டன. நீர்நிலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகக் கூறி டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் வீடுகள் இடிக்கப்பட்டன. இங்கு வசித்த சுமார் 189 குடும்பங்களுக்கு மட்டுமே புதிய வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய குடும்பங்கள் வீடுகளைப் பெற தகுதி பெறவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் புதிய இடம் தங்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்றதாக இல்லை என இங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர்.
புதுடெல்லியில் உள்ள ஜங்புரா பகுதிக்கு நாங்கள் சென்ற போது, காலை 8 மணியளவில் வீடுகளை இடிக்கும் பணியை தெற்கு டெல்லி மாவட்ட நிர்வாகம் தொடங்கியிருந்தது. சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் வீடுகளை இடிக்கும் பணி நடைபெற்று வந்தது. பொக்லைன் எந்திரங்கள் வீடுகளை இடிக்கும் முன்னதாக போது வீடுகளிலிருந்து மின்சார மீட்டர்கள், போன்றவற்றை மின்துறை பணியாளர்கள் அகற்றிவிட்டு வெளியேறினர். பொதுமக்கள் யாரும் இடிபாடுகள் உள்ள பகுதிகளுக்குள் நுழைந்து விடாதவாறு போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.
கேள்விக்குறியாகும் கல்வி
திருவண்ணாமலையைச் சேர்ந்த ரந்தன் டெல்லி ஜங்புராவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அருகில் உள்ள நான்கு சக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடையில் மெக்கானிக்காக வேலை பார்க்கும் ரந்தன் 10ம் வகுப்பு முடித்திருக்கிறார். இவரது தலைமுறையில் முதன்முறையாக தனது குழந்தைகளை பட்டப்படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறும் ரந்தன் குமார், தற்போது மதராசி கேம்ப் இடிக்கப்பட்டு தங்களின் வீடுகள் மாற்றப்பட்டால் தங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என அச்சப்படுகிறார். ஆனால் தமது குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளாக தமது குழந்தைகளை உருவாக்குவேன் என உறுதியுடன் தெரிவித்தார் ரந்தன்.