15
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காசா அமைதி வாரியத்தில் இணைவதற்கான அழைப்பை நியூசிலாந்து நிராகரித்துள்ளது. இந்த அமைதி வாரியத் திட்டம் தொடர்பில் தெளிவான விளக்கங்கள் இல்லை என்றும், அதனைப் பற்றி கூடுதல் தகவல்கள் தேவை என்றும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, காசா தொடர்பான எந்தவொரு முயற்சியும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சாசனத்திற்கு இணக்கமானதாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச சட்டங்களையும், மனிதாபிமானக் கோட்பாடுகளையும் மதிக்கும் வகையிலேயே இத்தகைய அமைதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
ட்ரம்ப் முன்மொழிந்த இந்த அமைதி வாரியத்தில் துருக்கி, எகிப்து, சவுதி அரேபியா உள்ளிட்ட பல மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதே இந்த வாரியத்தின் முக்கிய நோக்கம் எனக் கூறப்படுகிறது.
எனினும், இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, நோர்வே மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் ஏற்கெனவே இந்த வாரியத்தில் சேர மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், தற்போது நியூசிலாந்தும் அந்த நாடுகளின் வரிசையில் இணைந்துள்ளது.