3
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் தனியார் பஸ் சேவைக்கென போதியளவு எரிபொருள் ஒதுக்கப்படவில்லை. எனவே அடுத்த வாரத்துக்குள் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவது 50 சதவீதத்தால் குறைவடையும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தனியார் பஸ்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு இன்னும் முறையாக ஒழுங்குபடுத்தப்படவில்லை. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதால், பஸ் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும்.
சில பகுதிகளில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போக்கள் தனியார் பஸ்களுக்கு எரிபொருளை வழங்கினாலும், ஏனைய பிராந்தியங்களில் உள்ள டிப்போக்களில் கையிருப்பு இல்லை எனத் தெரிவிக்கப்படுவதால் பஸ் உரிமையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மேலும், திங்கட்கிழமைக்குள் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைக்கப்படலாம். இதற்கு அதிகாரிகள் உடனடி தீர்வை வழங்க வேண்டும். தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சுமார் 1700 நீண்ட தூர பஸ்களுக்கான ஒதுக்கீடுகளை ஏற்பாடு செய்துள்ளது. மாகாண சபைகளிடமிருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினாலும், நடைமுறையில் எந்தவொரு உறுதியான செயல்பாடும் முன்னெடுக்கப்படவில்லை.
சில பகுதிகளில் டிப்போக்கள் மூலம் எரிபொருள் வழங்கப்பட்டாலும், ஏனைய இடங்களுக்கு பஸ்கள் செல்லும்போது அங்கு கையிருப்பு இல்லை. இது ஒரு பாரிய பிரச்சினையாகும். திங்கட்கிழமைக்குள் எம்மால் பஸ்களை இயக்க முடியாமல் போகும், பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைய வாய்ப்புள்ளது. கடந்த வாரம் எமது பஸ்களில் எரிபொருள் இருந்தது, ஆனால் தற்போது அந்த கையிருப்பு தீர்ந்துவிட்டது. கியூ.ஆர் குறியீட்டு முறையின் கீழ், ஒரு பேரூந்துக்கு தற்போது 60 லீற்றர் மாத்திரமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதிகாரிகள் டிப்போக்களில் எரிபொருளைப் பெற்றுக் கொள்ளுமாறு பணிப்புரை விடுத்திருந்தாலும், பகல் நேரங்களில் அவ்வாறு செய்வது பஸ் சேவைகளுக்கு இடையூறாக அமையும். பல நாட்கள் கடந்த போதிலும், பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் போக்குவரத்து அதிகாரிகளும் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தவறியுள்ளனர்.