கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கடந்த 27 ஆண்டுகளாக பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என வாக்குறுதியளித்தார். ஆனால், 4 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டபோதிலும், கும்பகோணம் புதிய மாவட்டம் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், அரசு விதிகளின்படி புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டுமானால், மாவட்டத்தின் பரப்பளவு 2,500 ச.கி.மீ. முதல் 9,000 ச.கி.மீ. வரை இருக்க வேண்டும். ஆனால், தற்போது 3,396.57 ச.கி.மீ. பரப்பளவுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கும்பகோணம் கோட்டத்தை பிரித்தால் 940.22 ச.கி.மீ. மட்டுமே இருக்கும். அதேபோல, மக்கள் தொகை 30 லட்சம் இருக்க வேண்டும். ஆனால், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மக்கள்தொகையான 16,67,609 பேரில், கும்பகோணம் கோட்டத்தில் 6,39,486 பேர் மட்டுமே உள்ளதால், இந்த அளவுகோலும் பூர்த்தியாகவில்லை.
ஒரு மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் 5 வட்டங்கள் இருக்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில், கும்பகோணம் கோட்டத்தில் 3 வட்டங்கள் மட்டுமே உள்ளன. குறைந்தபட்சம் 2 கோட்டங்கள் இருக்க வேண்டும். ஆனால், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 3 கோட்டங்களில் தலா 2 கோட்டங்களாக பிரிக்க முடியாத நிலை உள்ளது. குறைந்தது 200 வருவாய் கிராமங்கள் இருக்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 906 கிராமங்களில், கும்பகோணம் கோட்டத்தில் 333 கிராமங்கள் உள்ளதால், இந்த விதிமுறை மட்டுமே பூர்த்தியாகிறது. எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தை பிரித்து கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வழியில்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான செய்தி மே 11-ம் தேதி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியானது.
இதற்கிடையே, தஞ்சாவூர் மாவட்டத்தை பிரித்து தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களாக உருவாக்க வேண்டும் என அரசு சார்பு செயலாளர் பா.கலைச்செல்விக்கு முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் கல்யாணம் ஏப்.15-ம் தேதி கடிதம் அனுப்பியிருந்தார். இதற்கு அரசுத் தரப்பில் இருந்து அனுப்பப்பட்டுள்ள பதிலின் விவரம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் கோட்டத்தை பிரித்து புதிய மாவட்டமாக உருவாக்க அரசு நிர்ணயம் செய்துள்ள அளவுகோல்களில் கிராமங்களின் எண்ணிக்கை 333 என்பது மட்டுமே பூர்த்தியாவதாக உள்ளது.
மேலும், கும்பகோணம் கோட்டத்தில் உள்ள பாபநாசம் வட்டத்தில் இருந்து புதிதாக அம்மாபேட்டை வட்டத்தை உருவாக்கி, இந்த 2 வட்டங்களையும் கொண்டு பாபநாசம் கோட்டத்தை உருவாக்கிவிடலாம். அதன்படி, கோட்டங்களின் எண்ணிக்கைக்கான அளவுகோலும் பூர்த்தியாகிறது. ஆனால், இந்த அளவுகோலை தவிர்த்து மற்ற அனைத்து அளவுகோல்களும் பூர்த்தியாகவில்லை. எனவே, புதிய மாவட்டமாக பிரிக்க பரிந்துரை செய்ய இயலாது.
ஆனாலும், நிர்வாக காரணங்களுக்காக பெரிய மாவட்டங்களை 2 ஆக பிரிப்பது என்பது அரசின் கொள்கை முடிவு என கருதினால், பெரிய மாவட்டமாக உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கும்பகோணம் மாவட்டத்தைப் பிரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.