சென்னை: தமிழகத்தில் கடல் காற்றாலைகள் திட்டத்துக்கு, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் டெண்டர் கோரப்படும் என, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.
‘விண்டர்ஜி இந்தியா 2025’ என்ற 7-வது சர்வதேச வர்த்தக கண்காட்சி, சென்னை வர்த்தக மையத்தில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியை மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தமிழக மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர், மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை செயலாளர் ராஜேஷ் குல்ஹாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், தமிழக மின்துறை அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், “25 ஆயிரம் மெகாவாட் திறனுடன் தேசிய அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் 4-வது இடத்தில் உள்ளோம். 1990-களில் எரிசக்தி வங்கியை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் தமிழகம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த வழிகளை தமிழகம் செய்துள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “இந்தியாவின் மொத்த மின்சார நிறுவுத் திறன் 257 மெகாவாட். அதில், காற்றாலை ஐந்தில் ஒரு பங்கை வகிக்கிறது. உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல காற்றாலை ஆற்றல் முக்கியப் பங்கு வகிக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் உலகளாவிய காற்றாலை விநியோக சங்கிலியில் இந்தியா 10 சதவீத பங்கைப் பெறும் திறன் கொண்டுள்ளது” என்றார்.
நிகழ்ச்சிக்கு பின், அமைச்சர் பிரகலாத் ஜோஷி, செயலாளர் ராஜேஷ் குல்ஹாரி நிருபர்களிடம் கூறியதாவது: நாட்டின் காற்றாலை மின்சார மொத்த நிறுவுத்திறன் தற்போது 54 கிகா வாட். மேலும், 30 கிகாவாட்டுக்கான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. 2030-ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை 500 கிகாவாட் ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஜிஎஸ்டி மறுசீரமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு செலவுகளை குறைத்துள்ளது, அதாவது, ஒரு மெகாவாட்டுக்கு ரூ.25 லட்சம் வரை சேமிப்பு கிடைத்துள்ளது.
தமிழகம் மற்றும் குஜராத்தில் தலா 500 மெகாவாட் திறனில் கடல் காற்றாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டு குஜராத்தில் டெண்டர் கோரப்பட்டது. நிறுவனங்கள் பங்கேற்காததால் டெண்டர் ரத்து செய்யப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை ஓர் ஆண்டு முழுவதும் தரவுகள் சேமிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முடிவுகள் மிகவும் ஊக்கமளிக்கும் விதமாக உள்ளன. திறன் பயன்பாடு காரணி 45 முதல் 50 சதவீதம் வரை உள்ளது. தமிழகத்தில் கடல் காற்றாலைகள் திட்டத்துக்கு அடுத்த ஆண்டுபிப்ரவரியில் டெண்டர் கோரப்படும். மே, ஜூன் மாதங்களில் பணிகள் தொடங்கப்படும். உற்பத்தியாகும் மின்சாரத்தை மின்கட்டமைப்புகளில் சரியாக சேர்க்க மின் வழித்தடங்களை வலிமைப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மாநிலங்களை அதை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
