• Fri. Jun 20th, 2025

24×7 Live News

Apdin News

தமிழகத்தில் ஜூன் 25-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு | Rain likely in Tamil Nadu till June 25th

Byadmin

Jun 20, 2025


தமிழகத்தில் வரும் 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 21 முதல் 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்றும், நாளையும் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வரும் 21 முதல் 23-ம் தேதி வரை மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 7 செ.மீ., நீலகிரி மாவட்டம் மேல் கூடலூர், நடுவட்டம், கோவை மாவட்டம் சின்கோனா, வால்பாறை, உபாசி ஆகிய இடங்களில் 5 செ.மீ., நீலகிரி மாவட்டம் பார்வூடில் 4 செ.மீ., கோவை மாவட்டம் சோலையாறு, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, போர்த்திமுண்டு, கிளன்மார்கன், பார்சன் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



By admin