சென்னை: தமிழக அரசுத் துறை செயலர்கள், மாவட்டஆட்சியர்கள் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உயர்கல்வி துறை செயலராக பொ.சங்கர், வணிக வரி, பதிவு துறை செயலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசுப் பணியில் 3 ஆண்டுகள் ஒரே பணியிடத்தில் பணியாற்றுவோர், இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். இது தவிர, சட்டப்பேரவை, மக்களவை தேர்தல் காலங்களிலும் அனைத்து நிலைகளிலும் இடமாற்றங்கள் நிகழும். இந்த நிலையில், தமிழக அரசுத் துறைகளின் செயலர்கள், துறை தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் என 55 ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய அரசுப் பணியில் இருந்த ராஜேந்திர ரத்னு, மாநில பதவிக்கு திரும்பிய நிலையில், சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் உறுப்பினர் செயலர் மற்றும் சென்னை நதிகள் சீரமைப்பு நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, மத்திய அரசுப் பணியில் இருந்து திரும்பிய நா.வெங்கடேஷ், நிதித்துறை சிறப்பு செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
துறை செயலர்கள் மாற்றம்: சுற்றுலா துறை இயக்குநராக உள்ள ஷில்பா பிரபாகர் சதீஷ், வணிக வரி, பதிவுத்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியை, வீட்டுவசதி துறை செயலர் காகர்லா உஷா கூடுதலாக கவனித்து வந்தார். நில சீர்திருத்த ஆணையராக உள்ள த.ந.ஹரிஹரன் வரும் 30-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, இந்த பணியிடத்துக்கு தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் (டுபிசெல்) தலைவர் ச.விஜயகுமார் நியமிக்கப்படுகிறார்.
சமூக சீர்திருத்த துறை செயலர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்த தெ.சு.ஜவகர் ஓய்வுபெறுவதை அடுத்து, அந்த பொறுப்பு, அயலக தமிழர் நலத்துறை ஆணையராக உள்ள மா.வள்ளலாரிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண் இயக்குநரும், நூலகத் துறை இயக்குநருமான பொ.சங்கர், உயர்கல்வி துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த சி.சமயமூர்த்தி, மனிதவள மேலாண்மை துறை செயலராகவும், அப்பதவியில் இருந்தகோ.பிரகாஷ், சிஎம்டிஏ உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வணிக வரி ஆணையராக உள்ள டி.ஜகந்நாதன் வரும் 30-ம்தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, அப்பதவியில், நிதித் துறை செலவினபிரிவு செயலராக உள்ள எஸ்.நாகராஜன் நியமிக்கப்படுகிறார். இதுதுவிர, திருப்பூர், பெரம்பலூர், நாமக்கல், விருதுநகர், மதுரை, திருச்சி, ஈரோடு, செங்கல்பட்டு, சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டு, புதியஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, சார் ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள் என மொத்தம் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவுகளை தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்டுள்ளார்.
எந்தெந்த துறைகளில் இருந்து எந்தெந்த பதவிகளுக்கு அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது பற்றிய விவரம்: