• Fri. Apr 10th, 2026

24×7 Live News

Apdin News

தமிழக அரசின் கடன் ஏன் அதிகரிக்கிறது? கடன் மட்டுமே ஆட்சியின் அளவுகோளா? எளிய விளக்கம்

Byadmin

Apr 10, 2026


தமிழகத்தின் கடன் ஏன் அதிகரிக்கிறது? எளிய விளக்கம்

பட மூலாதாரம், Getty Images

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

”கடன் வாங்காதே என்று நம்மை பார்த்து சொல்கிறார்கள் அவர்கள் காலத்திலும் கடன்தான் வாங்கினார்கள். கடந்த முறை நாங்கள் ஆட்சியில் இருந்து விலகுகிறபோது ரூபாய் 28 ஆயிரம் கோடி கடன் இருந்தது. அவர்கள் ஐந்தாண்டு காலம் ஆட்சி நடத்தி 2006-ஆம் ஆண்டில் ரூ.56,000 கோடி கடன் வைத்திருந்தார்கள். இன்றைக்கு அது ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு உயர்ந்து வருகிறது.”

2011 பிப்ரவரி 10 ஆம் தேதியன்று, தமிழக சட்டப்பேரவையில் அன்றைய நிதியமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான அன்பழகன் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தபோது பேசிய வார்த்தைகள் இவை.

அதே திமுக ஆட்சியில் 2026 பிப்ரவரி 18 ஆம் தேதியன்று தற்போதைய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில், 2027 மார்ச் 31 அன்று தமிழக அரசின் கடனாக மதிப்பிடப்பட்டுள்ள தொகை ரூ.10.71 லட்சம் கோடி. இடையிலுள்ள 15 ஆண்டுகளில் பத்தாண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசின் மொத்தக் கடன் தொகையாகக் குறிப்பிடப்பட்ட தொகை ரூ.5.78 லட்சம் கோடி.

”கடன் வாங்குவதில் தான் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. திமுக அரசின் மிகப்பெரிய சாதனை கடன் வாங்கியதுதான்” என்று கடந்த சில மாதங்களாக திமுக அரசின் மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தற்போது பரப்புரையிலும் இதுகுறித்து அதிகமாகப் பேசி வருகிறார்.

கடந்த வாரத்தில் “தமிழ்நாடு அரசின் நிதி நெருக்கடி – ஒரு விரிவான வெள்ளை அறிக்கை” என்ற ஆவணத்தை பாஜக வெளியிட்டது. மொத்தம் 65 பக்கங்கள் இருந்த அந்த ஆவணத்தில் கோவிட் பெருந்தொற்று காலத்தைத் தவிர்த்துப் பார்த்தால், தற்போதைய திமுக அரசை விட முந்தைய அதிமுக அரசு கடன் மேலாண்மையில் சிறப்பாகச் செயல்பட்டது என்ற உண்மையை ஒப்புக்கொள்வது அவசியமென்று கூறப்பட்டுள்ளது.

By admin