கடலூர்: நடிகர் விஜய், மாணவர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக வேல்முருகனுக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சேலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சித் தலைவர் வேல்முருகன், 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் வழங்கி வரும் கல்வி விருது நிகழ்வையும், விருது பெறும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் குறித்தும் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.
இதற்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், வேல்முருகன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என தவெகவினர் வலியுறுத்தி வந்தனர்.
மேலும், விஜய் ஆதரவாளரான நடிகர் தாடி பாலாஜி, விருகம்பாக்கம் சின்மயா நகரில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி அலுவலகம் முன்பு தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக நேற்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து, தமிழக வாழ்வுரிமை கட்சி அலுலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதற்கிடையில், தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்த தாடி பாலாஜி, ‘வேல்முருகன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், விரைவில் தவெக தொண்டர்களை ஒருங்கிணைத்து, அவரது அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும்” என தெரிவித்தார்.
இதேபோல, தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில், “விஜய் கல்வி விருது விழாவில் கலந்து கொண்ட மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் கொச்சைப்படுத்தி பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.