– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்.
ரெலோ கட்சியின் நீண்ட கால உறுப்பினராகவும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினராகவும் இருந்த விந்தன் கனகரட்ணம் கடந்த திங்கட்கிழமை இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்டார். அவர் நேற்று யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை நடத்தி தான் ரெலோவில் இருந்து விலகியமை மற்றும் தமிழரசில் இணைந்து கொண்டமைக்கான காரணத்தை வெளிப்படுத்தினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் ரெலோ அமைப்பில் இணைந்து ஆயுதப் போராட்டத்திலும் அதன் பின்னரான அரசியல் போராட்டத்திலும் என 41 வருடங்கள் தொடர்ந்து அந்த அமைப்பில் பயணித்து வந்திருக்கின்றேன்.
ஆனால், நான் சார்ந்திருந்த ரெலோ கட்சியானது ஒரு சிலரின் சுயநலன்களுக்காக அரசியல் சோரம் போய் சொந்த மக்களுக்கே துரோகம் இழைத்து டீல் அரசியல் நோக்கி பயணிக்கத் தொடங்கி இருக்கின்றது.
குறிப்பாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்திய அவருக்கே எமது கட்சி ஆதரவை வழங்கியது. ஆனால், உண்மையில் ஒரு சிலரின் டீல் அரசியலால் அரசுக்குச் சோரம் போய் பொது வேட்பாளருக்குத் துரோகம் செய்தது. அதாவது ரணிலை ஜனாதிபதியாக்கும் நோக்குடன் ரணிலுக்கு மறைமுக ஆதரவு கொடுத்தது. அதற்கு கையூட்டாக இவர்கள் என்னத்தைப் பெற்றுக்கொண்டார்கள் என்ற ஆவணம் என் கையில் இருக்கின்றது.
இதற்கு முதல் 2023 இல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஜனாதிபதியாக ரணிலை நிறுத்தியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டலஸை ஆதரிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், இந்த முடிவையும் மீறி டீல் அரசியல் காரணமாக மறைமுகமாக ரணிலை ஆதரித்து வாக்களித்தனர்.
இத்தகைய டீல் அரசியலைச் செய்தவர் வேறு யாருமல்ல. எமது கட்சியில் இருக்கின்ற ஒருவர்தான். அவர் ஒரு போலித் தேசியவாதி. அவர் கொழும்பில் பாரிய மோசடி செய்தவர். அதுமட்டுமல்லாது பின்கதவு அரசியல் செய்வதில் வல்லவர். யுத்தம் முடியும் வரை மறைந்திருந்து அதன் பின்னர் வந்து அரசியல் டீல் செய்யும் எட்டப்பன்.
அவ்வாறான ஒருவர்தான் ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்க டீல் செய்து ஒருவருக்கு பத்துக் கோடி ரூபா பேரம் பேசி அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு ரணிலுக்கான ஆதரவைப் பெற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கூட கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வினோநோகராதலிங்கத்தின் பெயரைக் கூறி அந்த டீல் அரசியல் செய்யும் எட்டப்பன் இரண்டு கோடி ரூபாவைச் சுருட்டிக் கொண்டார்.
இதன் பின்னர் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது கூட எமது கட்சிக்கு வழங்கப்பட்ட ஆசனம் கூட பணத்துக்காக விற்கப்பட்டது என்று அறிகின்றோம்.
இதுபோன்று நண்பர் ஒருவருக்கு பார் லைசன்ஸ் கேட்டு அதனையும் பெற்றுக்கொண்டு அதையும் 7 கோடி ரூபாவுக்கு அவர் விற்றிருக்கின்றார். இந்த லைசன்ஸ் வழங்க உதவியவர் தனக்கும் அவர் துரோகம் இழைத்துள்ளார் என்று என்னுடன் மட்டுமல்ல நான் சார்ந்திருந்த அந்தக் கட்சியின் மிக முக்கியஸ்தர்கள் பலருடனும் அழுது புலம்பியுள்ளார்.
இவ்வாறு வினோவின் பெயரைப் பயன்படுத்தி 2 கோடி ரூபாவும், பார் லைசன்ஸ் என்று கூறி 8 கோடி ரூபாவும், அதேபோன்று ரணுலுக்கு ஆதரவு எனப் பல கோடி ரூபாவையும் அவர் பெற்றுக்கொண்டிருக்கின்றார்.
இத்தகைய மோசடிகள் தொடர்பில் வினோவும் பார் லைசன்ஸ்காரரும் என்னுடனும் கட்சி சார்ந்த ஏனைய பலருடனும் தொலைபேசிகளில் கதைத்திருக்கின்றார்கள்.
இவ்வாறாக பின்கதவு அரசியல் டீலராகப் பல கோடி ரூபாக்களை ஏமாற்றிப் பெற்றுக்கொண்டு தமிழினத்திற்கு எதிராகச் செய்த துரோகத்தனங்களை அவரால் மறுதலிக்க முடியுமா?
இவ்வாறாக தரகர் அரசியல் செய்து பல கோடி ரூபாக்களை ஆட்டையைப் போட்டதை அறிந்தும் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் அதற்கு உடந்தையாகவே தலையாட்டிகள் போன்று கட்சித் தலைமை இருக்கின்றது.
தமிழ் மக்களை ஏமாற்றி மோசடி செய்து மண்ணையும் மக்களையும் விற்றுப் பிழைக்கும் ஈனப்பிறவிகள் அல்லது தமிழினத் துரோகிகளை விரட்டியடிக்க வேண்டும். ஆக மொத்தத்தில் இவர்களைப் போன்று வடக்கு, கிழக்கில் உள்ள போலித் தேசியவாதிகளை தேர்தல்களில் தோற்கடித்து விரட்ட வேண்டும்.
இவை மட்டுமல்ல 1983 ஆம் ஆண்டு கலவரத்தில் ப ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றொழித்த கட்சி ஜே.வி.பி.தான். அதன் பின்னர் ஒன்றாக இருந்த வடக்கு, கிழக்கையும் கூட இரண்டாகப் பிரித்த கட்சியும் இந்த ஜே.வி.பி.தான். ஆனால், இந்தக் கட்சியின் பட்ஜட்டுக்கே தமிழ்த் தேசியம் பேசும் எம்.பி. ஒருவரும் வாக்களித்துள்ளார்.
உண்மையில் இந்த ஜே.வி.பி. அரசியல் கைதிகளை விடுவித்தார்களா? காணாமல்போனவர்களுக்கு என்ன செய்தார்கள்? பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கினார்களா? காணியை விடுவித்தார்களா? அரசியல் தீர்வைத் தருவோம் எனக் கூறினார்களா?
இப்படி தமிழ் மக்களின் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வை வழங்காத அதுவும் தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்படுகின்ற இந்த அரசுக்கு ஆதரவாக ஏன் வாக்களிக்க வேண்டும்? ஆனாலும் ஒருவர் வாக்களித்துள்ளார் என்றால் அது எவ்வளவு பெரிய வெட்கக்கேடானது.
குறிப்பாக தமிழீழம் கேட்டோம். அதன்பின்னர் சமஷ்டி கேட்டோம். ஆனால் இப்போது வடக்குக்கு நிதி ஒதுக்கினாலே போதும் என்ற மிக மோசமான நிலையில் நாம் இருக்கின்றோம். வடக்குக்கு நிதி ஒதுக்கீடு வந்ததற்காக வாக்களிப்பது மிகவும் கேவலமானது.
இவ்வாறு நான் சார்ந்திருந்த கட்சியின் பல்வேறு நடவடிக்கைகளில் எனக்கு உடன்பாடில்லை. அதனை எமது மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதுடன் இவை எல்லாம் எமது மக்களுக்கு விரோதமானவையாகவே இருக்கின்றது.
இதனாலேயே மக்களுக்காக நான் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளேன். ஆனால், இந்தக் கட்சியிலும் சில குறைகள், பிரச்சினைகள் இருந்தாலும் அதனைச் சீர்செய்து தொடர்ந்து தமிழரசுடனேயே பயணிப்பேன். தமிழரசு வீறுநடை போட வேண்டும்.
மேலும் இந்த அரசு இப்போது பட்டலந்த வதை முகாம் பற்றி பேச ஆரம்பித்துள்ளது. அதற்கு நடவடிக்கை எடுப்பதில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லலை.
ஆனால், இந்த ஜனாதிபதி அனைத்து இன மக்களையும் சமமாகப் பார்க்கின்றார் என்றால் அல்லது முழு நாட்டுக்கும் ஜனாதிபதி என்றால் தமிழ் மக்களுக்கு நடந்தவற்றுக்கும் நீதி, நியாயம் வழங்க வேண்டும். அதற்கு அவர் தாயாரா? எனக் கேட்கின்றோம்.
பட்டலந்த விவகாரத்தை இப்போது பேசுவது தேர்தல் நாடகம். தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த பல வருடங்களாக இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலை உள்ளிட்ட அத்தனை படுகொலைகளுக்கும் நீதி விசாரணை வேண்டும்.” – என்றார்.