பட மூலாதாரம், mkstalin
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
-
ரூபாயைக் குறிக்க இந்தியாவில் பயன்படுத்தப்படும் ‘₹’ என்ற எழுத்துக்குப் பதிலாக ‘ரூ’ என்ற எழுத்தை பயன்படுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டது நாடு தழுவிய விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால், ரூபாயைக் குறிக்க ‘ரூ’ என்ற எழுத்தை பயன்படுத்த ஆரம்பித்தது எப்போது?
தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமையன்று (மார்ச் 13) தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற தலைப்பில் நிதிநிலை அறிக்கையின் முன்னோட்ட காணொளியை வியாழக்கிழமையன்று வெளியிட்டார்.
இந்தக் காணொளியில் ரூபாயை குறிக்கும் குறியீடாக ‘ரூ’வை தமிழ்நாடு அரசு பயன்படுத்தி இருந்தது. இது நாடு தழுவிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தியது.
“தற்போது ரூபாயைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சின்னத்தில் நடுவில் உள்ள கோட்டை எடுத்து விட்டால், அது தேவநகரியில் உள்ள ‘ர’வைத்தான் குறிக்கிறது. மத்திய அரசு தொடர்ந்து மும்மொழிக் கொள்கை போன்ற விவகாரங்களில் தமிழக அரசை வலியுறுத்திவரும் நிலையில், இந்த முடிவை எடுத்திருக்கிறோம்” என பிபிசியிடம் தெரிவித்தார் தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவரான ஜெ.ஜெயரஞ்சன்.
இருந்தாலும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்கள் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
“தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் தேசத்தின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் விதமாக அரசியலமைப்பின் கீழ் உறுதிமொழி எடுக்கிறார்கள். மாநில பட்ஜெட் ஆவணங்களில் ‘₹’ போன்ற தேசியச் சின்னத்தை நீக்குவது அந்த உறுதிமொழிக்கு எதிரானது. இது தேசிய ஒற்றுமை குறித்த உறுதிப்பாட்டை பலவீனப்படுத்துகிறது” என்று குறிப்பிட்டார் நிர்மலா சீதாராமன்.
வட இந்தியாவிலிருந்து ஒளிபரப்பாகும் பல தனியார் தொலைக்காட்சி சேனல்களில் இது மிகப் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
ரூபாயைக் குறிக்க, ‘ரூ’ என்ற எழுத்தைப் பயன்படுத்துவது புதிய மரபா?
இந்தியாவில் கிழக்கிந்திய நிறுவனங்களின் ஆதிக்கம் வருவதற்கு முன்பாக இந்தியாவின் பல இடங்களிலும் இருந்த சுயேச்சையான அரசுகள் தம் விருப்பப்படி நாணயங்களை அச்சிட்டு வந்தன. ஆனால், முகலாயர் காலத்தில்தான் நாடு முழுவதுக்கும் ஒரே மாதிரியான நாணயங்களை அறிமுகப்படுத்தும் முறை உருவானது.
இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்தின்படி, “நிதி ரீதியாக முகலாயர்களின் மிக முக்கியமான பங்களிப்பு என்பது நாணயங்களை வெளியிடுவதில் ஒரே மாதிரியான தன்மையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியதுதான். மிகக் குறுகிய காலத்திற்கு டெல்லியில் இருந்து ஆட்சி செய்த ஆஃப்கன் சுல்தானான ஷேர் ஷா சூரியின் (1540 – 1545) காலத்தில்தான் முதன்முதலில் வெள்ளியில் ருபியா என்ற பெயரில் நாணயம் வெளியிடப்பட்டது.
தற்போதைய நவீன ரூபாயின் முன்னோடி இதுதான். அதோடு தங்கத்தில் ‘மோஹுர்’ என்ற காசும் தாமிரத்தில் ‘தாம்’ என்ற பெயரில் காசுகளும் அச்சிடப்பட்டன. இவரது ஆட்சியின் பிற்காலத்தில் காசுகள் தரப்படுத்தப்பட்டன. ஔரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில் ஆட்சியாளர்களின் பெயரும் நாணயம் வெளியிடப்பட்ட ஆண்டும் காசுகளில் இடம்பெற ஆரம்பித்தன”.
அக்பரின் காலகட்டத்தில்தான் நாணயங்களில் ‘ரூபியா’ என்ற சொல் இடம்பெற ஆரம்பித்தது. ஔரங்கசீபின் மரணத்திற்குப் பிறகு முகலாய சாம்ராஜ்யம் பின்னடைவைச் சந்திக்க ஆரம்பித்தபோது பல அரசர்களும் தத்தம் நாணயங்களை வெளியிட ஆரம்பித்தனர்.
மராத்திய சாம்ராஜ்ஜியத்திலிருந்து ஹலி சிக்கா, அங்கூஷி, சண்டோரி ஆகிய பெயர்களில் நாணயங்கள் வெளியாயின. அவத்தின் நவாபும் தங்கம், வெள்ளி, செம்புக் காசுகளை வெளியிட ஆரம்பித்தார். மைசூர், பஞ்சாப், ஹைதராபாத் ஆகிய சமஸ்தானங்களும் தத்தம் ரூபாய்களை வெளியிட்டு வந்தன. 19ஆம் நூற்றாண்டில் மேற்கு வங்கத்திலிருந்து நோட்டுகள் அச்சடிக்கப்பட ஆரம்பித்தபோதே அவற்றில் ரூபாய் என்ற சொல் இடம்பெற்றிருந்தது.
முகாலய அரசரான ஃபரூக்ஷியர் வெளியிட்ட சில காசுகளும் திப்பு சுல்தான் வெளியிட்ட சில காசுகளும் ஃபணம் (Fanam அல்லது Fanan) எனக் குறிப்பிடப்பட்டன. பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சுக்காரர்கள் வெளியிட்ட சில காசுகளும் ஃபணம் என்று அழைக்கப்பட்டன.
இதற்கிடையில் 18ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் காசுகளை அச்சிட ஆரம்பித்தது. கொல்கத்தா, பம்பாய், மெட்ராஸ் ஆகிய மூன்று இடங்களிலிருந்தும் வெவ்வேறு விதமான காசுகள் அச்சிடப்பட்டுவந்தன. இந்தியா முழுவதும் ஒரே விதமான காசுகளை அச்சிட ஏதுவதாக 1835ல் ‘Coinage Act’ஐக் கொண்டுவந்தது கிழக்கிந்தியக் கம்பனி.
ஓலைச் சுவடிகளில் பயன்படுத்தப்பட்ட ‘ரூ’
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 1840 வாக்கிலேயே விலைகளைக் குறிப்பிட ‘ரூபா’ அச்சிடும் முறை இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.
பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலுக்கான உரை நூல் ஒன்று 1840ல் வெளியானது. அந்த நூலின் முகப்புப் பக்கத்திலேயே விலையைக் குறிக்க ‘ரூபா’ என்ற சொல் இடம்பெற்றிருக்கிறது.
அதே ஆண்டு ராமசாமிப் பிள்ளை என்பவரால் பதிப்பிக்கப்பட்டு வெளியான ‘சேந்தன் திவாகரம்’ என்ற நூலின் அட்டையில் விலையைக் குறிக்க சுருக்கமாக ‘ரூ’ என்ற எழுத்து குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தின் அட்டையிலேயே ‘தோலால் கட்டப்பட்ட பிரதியின் விலை இரண்டு ரூபாய்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ‘கட்டாத பிரதியின் விலை ஒன்றரை ரூபாய்’ என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகங்களில் எண்கள் தமிழ் எழுத்துகளால் எழுதப்பட்டிருக்கின்றன.
ஆனால், புத்தகங்களுக்கு முன்பாக ஓலைச் சுவடிகளிலேயே ‘ரூ’ என்ற எழுத்து பயன்படுத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டுகிறார் ஒய்வுபெற்ற தொல்லியலாளரான ராஜகோபால். இதற்கு ஆதாரமாக தரங்கம்பாடியில் கிடைத்த ஓலைச் சுவடிகளைச் சுட்டிக்காட்டுகிறார் அவர்.
தரங்கம்பாடியில் அமைந்திருக்கும் கோட்டை 1845ல்தான் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியிடம் வழங்கப்பட்டது என்றாலும் நீண்ட காலமாகவே, ஆங்கில ஆதிக்கத்துக்கு உட்பட்டே கோட்டையில் இருந்த டேனிஷ் ஆளுநர்கள் செயல்பட்டுவந்தனர்.
1815ல் நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பிறகு பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியில் நிர்வாக நடைமுறைகள் டேனிஷ் கோட்டைக்குள்ளும் வந்துவிட்டன. ஆகவே, ஆவணங்கள் அனைத்தும் பிரிட்டிஷாரின் செலாவணியை வைத்தே எழுதப்பட்டன. ஆகவே, தொகையைக் குறிப்பிடும்போது ‘சென்னைப் பட்டணம் கும்பினி ரூபாய்’, ‘மதராசி ரூபாய்’ என குறிப்பிடப்பட்டன.
இந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த பல காகித ஆவணங்களும் ஓலைச் சுவடிகளும் பிற்காலத்தில் சேகரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டன. இங்கிருந்த ஓலைச் சுவடிகளை கல்வெட்டு ஆய்வாளரான சீ. ராமச்சந்திரன் தொகுத்தார்.
அதனை தமிழக தொல்லியல் துறை தரங்கம்பாடி ஓலை ஆவணங்கள் என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டது. அதில் பெரும்பாலான ஓலைச் சுவடிகளில் ரூபாயைக் குறித்த ‘ரூ’ என்ற எழுத்து எழுதப்பட்டிருக்கிறது.
மேலே உள்ள படத்தில் உள்ள ஓலைச் சுவடி, 1831ஆம் ஆண்டில் எழுதப்பட்டிருக்கிறது. பஞ்சநதி செட்டியார் என்பவரிடம் அய்யாவுச் செட்டியார் என்பவர் 20 ரூபாய் கடன் வாங்கியதை இந்த ஓலையில் பதிவுசெய்துள்ளனர்.
இந்தக் காலகட்டத்தில் கிடைத்த ஓலைகள் அனைத்திலும் ‘ரூ’ என்ற எழுத்து ரூபாயைக் குறிக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
“ரூபாய்’ செலாவணியாக வழக்கிற்கு வந்த காலம் முதல் (1800களிலிருந்து) இது வழக்கத்தில் இருக்கவேண்டும்” என்கிறார் ராஜகோபால்.
இந்தியாவில் ஆங்கிலத்தில் சுருக்கமாக Rs. என்ற வடிவம் பயன்டுத்தப்பட்டுவந்தது. ஆனால், பாகிஸ்தானிலும் இலங்கையிலும் உள்ள நாணயங்களும் ரூபாய் என்றே அழைக்கப்பட்டதால், இந்திய ரூபாயைக் குறிப்பிட INR என அழைப்பதும் வழக்கத்தில் இருந்தது. 2010ல் இருந்து ₹ என்ற குறியீட்டை இந்திய நிதி அமைச்சகம் அறிமுகம் செய்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு