• Sat. Mar 14th, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்க் கட்சிகள் கடமை தவறிவிட்டன; தலைமையை வழங்க நாங்கள் தயார் | தமிழர் விடுதலைக் கூட்டணி

Byadmin

Mar 14, 2026


சுயநலம் மேலோங்கியுள்ள தமிழ்க் கட்சிகள் தங்களது கடமைகளில் இருந்து தவறிவிட்டன எனவும், அந்தத் தலைமைத்துவ இடைவெளியைத் தமிழர் விடுதலைக் கூட்டணி நிச்சயம் நிரப்பும் எனவும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் தேசிய ஒருங்கிணைப்பாளருமான சுதாகரன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று சனிக்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

“புதிய நிர்வாகிகளின் கீழ் தமிழ் மக்களுக்கான முறையான தலைமையை வழங்கும் நோக்குடன் தமிழர் விடுதலைக் கூட்டணி தற்போது சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில் சில பின்னடைவுகளைச் சந்தித்திருந்த போதிலும், தற்போது இளைஞர்களின் பங்களிப்புடன் புதிய உத்வேகத்துடன் முன்னிலையான அரசியல் பாதையை நோக்கி நாங்கள் நகர்ந்து வருகின்றோம்.

தற்போது தமிழ் மக்கள் முறையான தலைமைத்துவம் இன்றி இக்கட்டான நிலையில் வாழ்கின்றனர். எந்தவொரு தமிழ்க் கட்சியும் மக்களின் விடுதலைக்கான சரியான பாதையைத் தெரிவு செய்யவில்லை. தொடர்ச்சியாகப் பிழையான பாதையிலேயே அக்கட்சிகள் பயணிக்கின்றன. கட்சிகளுக்குள் பொதுநலன் மறைந்து சுயநலம் குடிகொண்டுள்ளது.

தமிழ்க் கட்சிகளுக்குப் போதிய சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டு விட்டன. 2009 யுத்தம் முடிவடைந்த பின்னரும் கூட நீண்ட காலமாக வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், அவர்கள் தங்களது கடமைகளைச் சரியாக நிறைவேற்றவில்லை. நிச்சயமாக அந்த அரசியல் இடைவெளியைத் தமிழர் விடுதலைக் கூட்டணி நிரப்பும் என்பதை ஆணித்தரமாகக் கூறிக்கொள்கின்றேன்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் செயற்பாடு எப்போது தளர்வடையத் தொடங்கியதோ, அன்றே தமிழ் மக்களின் வாழ்க்கையும் தளர்ந்துவிட்டது. தந்தை செல்வா மற்றும் ஜி.ஜி. பொன்னம்பலம் ஆகியோருடன் நேரடித் தொடர்பிலிருந்த ஒரே தலைவர் வீ. ஆனந்தசங்கரி மட்டுமே. அவரே இக்கட்சியைத் தற்போதும் வழிநடத்தி வருகின்றார்.

மூத்தவர்களின் கடந்த கால அனுபவங்களும், எங்களது புத்திசாலித்தனமுமே இந்தத் தேசத்திற்கு விடுதலையைப் பெற்றுத்தரும். எனவே, தமிழ் மக்கள் எங்களை நம்புங்கள், இளைஞர்கள் எங்களுடன் இணையுங்கள் என நாம் கோரிக்கை விடுக்கின்றோம்” என்றார்.

இந்த ஊடகச் சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி, வன்னி மாவட்டக் கிளைத் தலைவர் உதயன், செயலாளர் திவா, இளைஞரணிச் செயலாளர் பத்மகாந்தன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By admin