தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடரின் தொடக்க நாளில், ஆளுநர் உரையை படிக்க மறுத்து ஆர்.என். ரவி வெளிநடப்புச் செய்தார். ‘ஆளுநர் உரை தேவையில்லை’ என அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கோரப் போவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சிக்கலாகவே நீடிக்கும் இந்த பிரச்னைக்கு தீர்வு என்ன?
தமிழ்நாடு அரசு vs ஆளுநர் மோதல் போக்கு
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2026ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று (20.01.2026) துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை வாசிக்காமல் வெளிநடப்புச் செய்தார். 2021ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்ற ஆர்.என். ரவி, 2022ஆம் ஆண்டின் ஆளுநர் உரையைத் தவிர, மற்ற ஆண்டுகளில் அதாவது தொடர்ந்து 4-வது ஆண்டாக ஆளுநர் உரை எதனையும் முழுமையாகப் படிக்கவில்லை.
2023ஆம் ஆண்டில் உரையை வாசித்த ஆளுநர் ஆர்.என். ரவி “பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோரின் கொள்கைகளைப் பின்பற்றி திராவிட மாடல் ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது,” என்ற வரியை வாசிக்காமல் புறக்கணித்தார். இதையடுத்து ஒரு தீர்மானத்தின் மூலம் ஏற்கனவே அச்சிடப்பட்ட ஆளுநர் உரையே அவைக்குறிப்பில் இடம்பெறும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஆளுநர் ஆர்.என். ரவி அவையிலிருந்து வெளியேறினார்.
2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் அந்த ஆண்டின் பிப்ரவரி 12ஆம் தேதி தமிழ்த் தாய் வாழ்த்துடன் துவங்கியது. இதற்குப் பிறகு ஆளுநர் உரையை வாசிக்க ஆரம்பித்த ஆளுநர் ஆர்.என். ரவி, சட்டப்பேரவை துவங்கும் முன்பாகவும் முடியும்போது தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்ற தனது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு, தேசிய கீதத்திற்கு போதிய மரியாதை தரப்படவில்லையென்று குறிப்பிட்டார்.
ஆளுநர் உரையில் தகவல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் தன்னால் ஏற்க முடியாத பகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன என்றும் அவற்றை வாசிப்பது அரசியல் சாசனத்தை அவமதிப்பதாக அமையும் என்று கூறிவிட்டு, உரையை வாசிக்காமல் அமர்ந்தார் ஆளுநர் ஆர்.என். ரவி.
இதையடுத்து, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அந்த உரையை வாசித்து முடித்த பிறகு பேசிய சபாநாயகர் அப்பாவு, “சாவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கும் கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்ததல்ல தமிழ்நாட்டு சட்டமன்றம்” என்று கூறினார். சபாநாயகர் இதனைச் சொல்லி முடித்ததும், ஆளுநர் ஆர்.என். ரவி அவையிலிருந்து வெளியேறினார்.
படக்குறிப்பு, கோப்புப் படம்
2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் ஜனவரி 6ஆம் துவங்கிய நிலையில், உரையை வாசிக்காமலேயே ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறினார். தேசிய கீதம் பாடப்படாததால், வெளியேறியதாக ஆளுநர் மாளிகை விளக்கமளித்தது.
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதல் நாளிலும் இதேபோல வெளிநடப்புச் செய்த ஆளுநர், 13 குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். இந்த முறையும் அச்சிடப்பட்ட ஆளுநர் உரையே அவைக் குறிப்பில் ஏற்றப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்குப் பிறகு பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் உரை என்ற நடைமுறையை நீக்குவதற்கான முயற்சிகளை மற்ற கட்சிகளுடன் சேர்ந்து முன்னெடுக்கப் போவதாகக் குறிப்பிட்டார்.
“ஆண்டின் துவக்கத்தில் அரசின் கொள்கை அறிக்கையை ஆளுநரின் உரையாக வாசிப்பது நடைமுறை. அந்த நடைமுறையை ஒருவர் தொடர்ந்து மீறும்போது அதுபோன்ற விதிகளை எதற்காக வைத்திருக்க வேண்டும் என்ற கேள்வி சாதாரணமாகவே அனைவர் மனதிலும் எழும். எனவே ஆண்டின் துவக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை விலக்குவதற்கான அரசியலமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கான நடைமுறையை இந்தியா முழுவதும் இருக்கும் ஒத்த கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகளின் துணையோடு இந்திய நாடாளுமன்றத்தில் தி.மு.க. முன்னெடுக்கும்” என்றார் முதலமைச்சர்.
இந்திய அரசமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது?
பட மூலாதாரம், Getty Images
கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் ஆளுநர் உரை நிகழ்த்தும் அதிகாரத்தை இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்குகிறது. அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 176 இதனைப் பற்றிக் கூறுகிறது.
“சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்குப் பிந்தைய முதல் கூட்டத் தொடரின் துவக்கத்திலும், ஒவ்வொரு ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் தொடக்கத்திலும், ஆளுநர் சட்டமன்றத்தில் உரையாற்றுவார். மேலவை (Legislative Council) உள்ள மாநிலமாக இருந்தால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றி, அந்தச் சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டியதற்கான காரணங்களை அவர் தெரிவிப்பார்” என்கிறது அந்தப் பிரிவு.
இந்தப் பிரிவின் அடிப்படையிலேயே ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் துவங்குகிறது. ஆனால், ஆளுநர் வாசிக்கும் உரையில் என்ன விஷயங்கள் இடம்பெறும் என்பது குறித்து ஆளுநர் முடிவுசெய்ய முடியமா என அரசமைப்புச் சட்டம் கூறவில்லை.
“ஆளுநரின் உரை என்பது அரசின் உரைதான். அந்த உரை முன்பே ஆளுநருக்கு அனுப்பப்படும். அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமென ஆளுநர் பரிந்துரைக்கலாம். ஆனால், அரசுதான் அது குறித்து முடிவெடுக்க முடியும். இதற்கு சட்டம் ஏதும் கிடையாது. மரபுதான். ஆளுநர் ஒரு உரையைப் படிக்க மாட்டேன் என தற்போது செய்ததைப்போல செய்யலாம். ஆனால், இதையெல்லாம் சேர்க்க வேண்டுமென சொல்லவே முடியாது.” என்கிறார் அரசமைப்புச் சட்ட விவகாரங்களில் நிபுணரான மூத்த பத்திரிகையாளர் கே. வெங்கடராமனன்.
ஆளுநர்களுக்கும் மாநில முதலமைச்சர்களுக்கும் இடையில் மோதல் போக்கு நிலவும்போது ஆளுநர் உரையின்றி வருடத்தின் முதல் கூட்டத்தை துவங்குவதை சில மாநிலங்கள் முயன்றிருக்கின்றன.
தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் இருந்தபோது அவருக்கும் முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தன. இந்த நிலையில், கடந்த 2022 – 2023ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் கூட்டத்தொடர் துவங்கியபோது, “தெலங்கானா அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 7ஆம் தேதி நடைபெறும். நிதியமைச்சர் ஹரிஷ் ராவ் மாநில அரசின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அன்றைய தினம் ஆளுநர் உரையில்லாமல் நேரடியாக பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்தார். இதற்கு அம்மாநில பா.ஜ.க. கண்டனம் தெரிவித்தது. இதற்குப் பதிலளித்த மாநில அரசு, “ஆண்டின் துவக்கத்தில் முதன் முறையாகக் கூட்டப்படும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போதுதான் ஆளுநர் உரை கட்டாயம் தேவை என சட்ட விதி இருக்கிறது, இந்த கூட்டத் தொடர் கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் தொடங்கிய கூட்டத்தொடரின் தொடர்ச்சிதான். எனவே, ஆளுநர் உரை அவசியமில்லை” என விளக்கமளித்தது.
அதேபோல, மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் அம்மாநில ஆளுநராக இருந்த சி.வி. ஆனந்த போஸுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்த நிலையில், 2024ஆம் ஆண்டின் நிதி நிலை அறிக்கைக்கான கூட்டத் தொடர் பிப்ரவரி மாதம் ஆளுநர் உரையில்லாமல் துவங்கியது. இது குறித்து அம்மாநில பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தபோது, கடந்த ஆண்டு நடந்த கூட்டத் தொடர் முடித்துவைக்கப்படாமையால், அதன் தொடர்ச்சியாகவே இந்தக் கூட்டத் தொடர் நடப்பதாகவும், ஆகவே ஆளுநர் உரை தேவையில்லை என்றும் சபாநாயகர் பிமான் பானர்ஜி பதிலளித்தார்.
தமிழ்நாட்டில் இதற்கு முன்பாக 90களில் முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையிலான மோதல் உச்சத்தில் இருந்தது. அப்போது ஜெ. ஜெயலலிதா முதலமைச்சராகவும் எம். சென்னாரெட்டி ஆளுநராகவும் இருந்தனர். “இருவருக்கும் இடையில் அந்தத் தருணத்தில் கடும் மோதல் இருந்தாலும் ஆளுநர் உரையைப் படிக்க சென்னா ரெட்டி மறுத்ததில்லை” என நினைவுகூர்கிறார் மூத்த பத்திரிகையாளரான டி. ராமகிருஷ்ணன்.
இது முதல் முறையல்ல
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஆர். வெங்கட்ராமன் (கோப்புப் படம்)
தகுந்த அரசியலமைப்புத் திருத்தங்களின் மூலம் கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநர் உரை வாசிக்க வேண்டும் என்ற விதியை நீக்க முயற்சிக்கப்போவதாக தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இப்படி ஒரு கருத்து எழுவது இது முதல் முறையல்ல. 1987 – 92 காலகட்டத்தில் இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்ராமன், குடியரசுத் தலைவர் உரை, ஆளுநர் உரை போன்ற விஷயங்களை நீக்க வேண்டுமெனத் தெரிவித்து, அதற்காக சில முயற்சிகளை மேற்கொண்டதாக குறிப்பிடுகிறார். தான் குடியரசுத் தலைவராக இருந்த காலகட்டத்தின் அனுபவங்களை குடியரசுத் தலைவராக நானிருந்த ஆண்டுகள் (My Presidential Years) என்ற பெயரில் நூலாக எழுதியிருக்கிறார் அவர். அந்த நூலில்தான் இதனைக் குறிப்பிடுகிறார் ஆர். வெங்கட்ராமன்.
ஆர். வெங்கட்ராமன் இத்தகைய முடிவுக்கு வருவதற்கு சில சம்பவங்கள் காரணமாக அமைந்தன.
வரலாற்றாய்வாளரான சையித் நூருல் ஹசன் 90களின் துவக்கத்தில் மேற்கு வங்கத்தின் ஆளுநராக இருந்தார். அந்தத் தருணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜோதிபாசு அம்மாநில முதல்வராக இருந்தார். ஒரு முறை பட்ஜெட் கூட்டத்தொடரின் துவக்க உரையை ஆளுநர் வாசிக்கத் துவங்கிய போது, எதிர்க் கட்சியான காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் அவரை முற்றுகையிட்டு, பேச விடாமல் இடையூறு செய்தனர்.
இந்தப் பின்னணியில்தான் ஆளுநர்கள் உரையாற்றும் முறையை நீக்க வேண்டுமென ஆர். வெங்கட்ராமன் எழுதினார்.
“நான் 1989ஆம் ஆண்டு மார்ச் மாதம் ராஜீவ் காந்திக்கு இரண்டு கடிதங்களை எழுதினேன். முதலாவது, ஆளுநர் உரையின்போது மாநிலச் சட்டமன்றங்களில் அரங்கேறிய அநாகரிகமான காட்சிகள் குறித்தது. மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற முன்னேறிய மாநிலங்கள் கூட இத்தகைய ஒழுக்கக் குறைபாட்டிற்கு விதிவிலக்கல்ல. மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சியும் இத்தகைய நடத்தையில் மற்றவர்களுக்கு சளைத்தது அல்ல என்று நான் அதில் குறிப்பிட்டேன். சட்டமன்றத்தில் ஆளுநர் உரையாற்றும் முறையை ஒரு தகுந்த சட்டத் திருத்தத்தின் மூலம் நீக்கிவிடலாம் என்று நான் மீண்டும் ஒருமுறை பரிந்துரைத்தேன். மேற்கு வங்கச் சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள், மதிப்பிற்குரியவரும் மூத்த கல்வியாளருமான ஆளுநர் நூருல் ஹசனை நோக்கி கூச்சலிட்டு, இடையூறு செய்த விதம் என்னை மனவேதனை அடையச் செய்தது” என்று குறிப்பிடுகிறார் ஆர். வெங்கட்ராமன்.
அதே நூலில் இன்னொரு இடத்திலும் இதே போன்ற கருத்தைக் முன்வைக்கிறார் ஆர். வெங்கட்ராமன். “எனது பார்வையில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநரின் உரைகள் காலாவதியானவை. பிரிட்டிஷ் நடைமுறையை அப்படியே கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவை. சில நேரங்களில் ஆளுநர்கள் தங்களுக்குத் தாங்களே முரணாகப் பேசுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறார்கள், ஆனால் உண்மையில் அவர்கள் பதவியில் இருக்கும் அரசாங்கத்தின் கருத்துகளையே எதிரொலிக்கிறார்கள். குடியரசுத் தலைவருக்குப் பதிலாகப் பிரதமரை உரையாற்றச் செய்வதன் மூலம் இந்த நடைமுறையை மாற்ற நான் முயன்றேன், ஆனால் அதற்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை” என்கிறார் ஆர். வெங்கட்ராமன்.
எது எப்படியிருந்தாலும் தேர்வுசெய்யப்பட்ட அரசுதான் அதிகாரங்களைக் கொண்டது என்கிறார் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியான ஹரி பரந்தாமன்.
“ஆளுநரின் உரை என்பது அரசின் கொள்கைதான். ஆளுநர்களுக்கு இது தொடர்பாக எந்த அதிகாரமும் கிடையாது. 2014க்கு முன்பு இதுபோல ஆளுநர்கள், முரண்டு பிடித்தது கிடையாது. சென்னா ரெட்டி காலகட்டத்தில்கூட உரையை வாசிக்க மாட்டேன் என மறுக்கவில்லை. இறுதி முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினுடையதுதான். இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அல்ல” என்கிறார் ஹரி பரந்தாமன்.