சென்னை: தமிழ்நாடு காங்கிரஸை வலிமைப்படுத்துவது குறித்து கட்சியின் 42 நிர்வாகிகளிடம் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நேற்று தனித்தனியே கருத்துகளை கேட்டறிந்தார்.
தமிழ்நாடு காங்கிரஸில், மாநிலத் தலைமைக்கு எதிராக அண்மையில் 20-க்கும் மேற்பட்ட மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் எம்.எஸ்.திரவியம் தலைமையில் டெல்லி சென்று, தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்றக்கோரி கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரை சந்தித்து புகார் அளித்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸின் மேலிட பொறுப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட கிரிஷ் சோடங்கர் நேற்று முன்தினம் சென்னை வந்தார். அவரை மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் ஹெக்டே உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரி, கே.வி.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர் மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், அகில இந்திய செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியின் உயர்மட்ட குழுவைச் சேர்ந்த 42 பேரை தனித்தனியே சந்தித்து விவாதித்தார். பின்னர் அவர் டெல்லி புறப்பட்டு சென்றார்.
செல்வப்பெருந்தகை கூறும்போது, “தமிழகத்தில் காங்கிரஸை வளர்ப்பது, வலிமைப்படுத்துவது, 2026 தேர்தலுக்கு தயாராவது ஆகிய பொருள்களில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற தலைவர்கள், கட்சி வளர்ச்சி சார்ந்த கருத்துகளை தெரிவித்துள்ளனர்” என்றார்.