- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
-
‘இந்தியாவில் உள்ள சிறைகளில் சாதிப் பாகுபாடுகள் காட்டக்கூடாது’ என வியாழன் அன்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
“தமிழக சிறைகளில் பாகுபாடுகளைக் களைய சிறை விதிகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும்” என விடுதலை சிறுத்தைகள் கட்சி கூறுகிறது.
ஆனால் “பாளையங்கோட்டை உள்பட தமிழக சிறைகளில் சாதிப் பாகுபாடுகள் அறவே இல்லை” என சிறைத்துறை நிர்வாகம் கூறுகிறது.
தமிழக சிறைகளில் சாதிப் பாகுபாடுகள் நிலவுகிறதா? பாளையங்கோட்டை சிறை குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டுள்ளது?
வழக்கின் பின்னணி என்ன?
‘தி வயர்’ ஆங்கில ஊடகத்தில் சுகன்யா சாந்தா என்ற பத்திரிகையாளர் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பரில் கட்டுரை (From Segregation to Labour, Manu’s Caste Law Governs the Indian Prison System) ஒன்றை எழுதியிருந்தார்.
அந்தக் கட்டுரையில், இந்தியாவில் உள்ள 11 மாநிலங்களில் உள்ள சிறைகளில் கைதிகளுக்கு சாதியின் அடிப்படையில் வேலை கொடுப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதை அடிப்படையாக வைத்து, உச்சநீதிமன்றத்திலும் கடந்த ஆண்டு சுகன்யா சாந்தா வழக்கு தொடர்ந்தார்.
மாநில அரசுகளின் சிறைக் கையேட்டில் உள்ள பல்வேறு விதிகள், அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14, 15, 17, 21 மற்றும் 23 ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளதாகத் தனது மனுவில் சுகன்யா சாந்தா தெரிவித்திருந்தார்.
சிறைக் கையேடு சர்ச்சை
இதை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, பஞ்சாப், ஒடிஷா, கேரளா, தமிழ்நாடு ஆகிய 11 மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த வழக்கில் ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ஒடிஷா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. கடந்த ஜூலை 10ஆம் தேதி வழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.
கடந்த வியாழன் (அக்டோபர் 3) அன்று இந்த வழக்கில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு தீர்ப்பு வழங்கியது.
தமிழ்நாடு உள்பட பல மாநில அரசுகள் பயன்படுத்தும் சிறைக் கையேடுகளில் (Prison Manuals) சாதிப் பாகுபாடுகளை வலியுறுத்தும் விதிகள் இருப்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
தீர்ப்பு விவரம்
“எஸ்.சி, எஸ்.டி, சீர் மரபினர் பிரிவினருக்கு தூய்மைப் பணியும் பிற சாதியினருக்கு சமையல் பணியையும் ஒதுக்குகின்றனர். இது அரசமைப்புச் சட்டப் பிரிவு 15ஐ மீறுவதாக உள்ளது எனக் கருதுவதாக” நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
“சிறைகளில் சாதியை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்றாலும் பட்டியல் சாதியினரைக் குறிவைத்து இத்தகைய மறைமுகச் சொற்றொடர்களைப் பயன்படுத்துவது சட்ட விரோதம்” எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
“எந்தவொரு சமூகக் குழுவும் பிறக்கும்போதே தூய்மைப் பணி செய்வதற்காகப் பிறப்பதில்லை. எடுபிடி வேலைகளைச் செய்வதற்கோ அல்லது செய்யாமல் இருப்பதற்கோ யாரும் பிறப்பதில்லை” எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
“சிறை விதிகள் கையேட்டில் உள்ள இதுபோன்ற அம்சங்கள் செல்லாது” எனக் கூறியுள்ள நீதிபதிகள், “தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடிய கைதிகளை சாதிரீதியில் வகைப்படுத்தி வைத்திருந்தால் அதுதொடர்பான பதிவுகளை அழிக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளனர்.
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பின்னரும் சாதிப் பாகுபாடு என்ற தீமையை அகற்ற முடியாமல் இருப்பதாக, தலைமை நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டுள்ளார்.
தீர்ப்பில், “சிறைக் கையேடு 2016 மற்றும் மாதிரி சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த சட்டம் 2023’ ஆகியவற்றில் உள்ள சாதிரீதியிலான பாகுபாடுகளை மூன்று மாதங்களுக்குள் நிவர்த்தி செய்ய வேண்டும்” என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாளையங்கோட்டை சிறையில் என்ன நடக்கிறது?
இந்த வழக்கின் மனுவில், தமிழ்நாட்டில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் இடையே சாதிப் பாகுபாடு காட்டப்படுவதாக பத்திரிகையாளர் சுகன்யா சாந்தா குறிப்பிட்டிருந்தார்.
அவர் தனது மனுவில், “பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் தேவர், நாடார், தேவேந்திரர் பிரிவுகளைச் சேர்ந்த கைதிகள், சாதி அடிப்படையில் தனித்தனி கொட்டடிகளில் அடைக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது, இது சாதிப் பாகுபாட்டுக்கு உதாரணமாக உள்ளது” எனக் கூறியிருந்தார்.
இதைத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள உச்சநீதிமன்றம், அதற்கு உதாரணமாக, 2014 அக்டோபர் 28ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ளது.
அருள் மற்றும் அரசு செயலருக்கு இடையிலான வழக்கில், ‘சாதி அடிப்படையில் கைதிகளிடம் பாகுபாடு காட்டக்கூடாது. சிறைக் கைதிகளை சாதியின் அடிப்படையில் அடைத்து வைப்பதாக’ மனுவில் கூறப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நிலவும் சமூக மோதலைத் தவிர்க்கும் வகையில் வெவ்வேறு பிளாக்குகளில் அவர்களைப் பிரித்து வைத்துள்ளதாக மாநில அரசு கூறியுள்ளதை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
ஆனால், “இது இன அடிப்படையிலான பிரிவினையை சட்டப்பூர்வமாக்குவதற்கு அமெரிக்காவில் கொடுக்கப்பட்ட வாதத்தைப் போன்று உள்ளதாக” உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
“இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் இதற்கு இடம் இல்லை” எனக் கூறிய நீதிபதிகள், “இரண்டு குழுக்களுக்கு இடையே போட்டி இருந்தாலும், நிரந்தரமாகப் பிரிக்க வேண்டிய அவசியமில்லை. கைதிகளின் அடிப்படை உரிமைகள் மற்றும் சீர்திருத்தத் தேவைகளை மீறும் இடத்தில் ஒழுக்கத்தைப் பாதுகாக்க முடியாது” எனக் கூறியுள்ளனர்.
இதுபோன்ற நிகழ்வுகள், கைதிகளுக்குள் போதிய அளவு சமத்துவத்தை மறுப்பதாகக் கூறிய உச்சநீதிமன்றம், அவர்களைச் சீர்திருத்துவதற்கான வாய்ப்பை இழக்க வைப்பதாகக் கூறியுள்ளது.
சாதி அடிப்படையில் மறைமுகப் பாகுபாடு காட்டும் விதிகள், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14ஐ மீறுவதாக உள்ளதாகவும் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘மார்ச் மாதமே கடிதம் கொடுத்தோம்’ – ரவிக்குமார் எம்.பி
“உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டில் சிறை கையேடு விதிகள் 447, 472 ஆகியவற்றை நீக்கிவிட்டு புதிய சிறைக் கையேடு ஒன்றை அரசு விரைவில் தயாரிக்க வேண்டும்” என்கிறார், நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான ரவிக்குமார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் சிறைவாசிகளின் சாதி அடையாளங்களைப் பதிவு செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. அதை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்றார்.
இதுதொடர்பாக, கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி, தமிழக சிறைத்துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை நேரில் கொடுத்ததாகக் கூறும் ரவிக்குமார், “புதிய சிறைக் கையேடு தயாரிக்கப்படுவதாக அரசுத் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை” என்கிறார்.
தீர்ப்பை வழங்கியதோடு மட்டுமின்றி மாநில அரசுகள் நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிப்பதற்குத் தாமாக முன்வந்து வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றம் பதிவு செய்துள்ளதை வரவேற்கிறார் ரவிக்குமார் எம்.பி.
“தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தி சிறைகளில் கடைபிடிக்கப்படும் நேரடி மற்றும் மறைமுக சாதிப் பாகுபாடுகளுக்கு முடிவு கட்ட வேண்டும்” என்றார்.
‘இது தவறான நடைமுறை’
“பாளையங்கோட்டை சிறையில் சாதிப் பாகுபாடுகள் அதிகமாக உள்ளன. பிற சிறைகளில் அதுபோன்ற பிரச்னைகள் இல்லை” என்கிறார், சிறைக் கைதிகள் நல உரிமை மையத்தின் இயக்குநர், வழக்கறிஞர் பா.புகழேந்தி.
பாளையங்கோட்டை சிறையில் ஒரு நபரின் பெயரைக் கேட்பதைவிட அவரது சாதியை அறிந்து கொள்வதில் சிறைத்துறை அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதாகக் கூறும் புகழேந்தி, சாதிரீதியாக அங்கு தொகுதிகளை (Block) பிரித்து வைத்துள்ளதாகக் கூறுகிறார்.
தென் மாவட்டங்களில் சாதிரீதியான படுகொலைகள் நடப்பதால், கைதிகளைப் பிரித்து வைப்பது காலம் காலமாக நடப்பதாகக் கூறும் வழக்கறிஞர் புகழேந்தி, “கைதிகளுக்குள் மோதல் ஏற்படுவதைத் தவிர்க்கவே இவ்வாறு செய்வதாக தமிழக சிறைத் துறை கூறுகிறது. இது தவறான நடைமுறை என்பதை உச்சநீதிமன்றமும் சுட்டிக் காட்டியுள்ளது” என்கிறார்.
சிறைத்துறை தலைவர் கூறுவது என்ன?
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து தமிழக சிறைத்துறை தலைவர் கனகராஜிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். “தமிழ்நாடு சிறைகளில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவேண்டிய அவசியம் இல்லை. இங்கு எந்தப் பாகுபாடுகளும் கடைபிடிக்கப்படுவதில்லை” என்கிறார் அவர்.
வேறு மாநிலங்களில் சாதிரீதியான பாகுபாடுகள் காட்டப்படுவதாக இருந்தால், அங்கு விதிகளில் மாற்றம் கொண்டு வருவதற்காக, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
“தமிழக சிறைகளில் தூய்மைப்பணி, உணவு தயாரிப்பு உள்பட எந்த இடத்திலும் சாதிரீதியாகப் பாகுபாடுகள் காட்டப்படுவதில்லை” என்கிறார் கனகராஜ்.
பாளையங்கோட்டை சிறையில் சாதிரீதியாக கைதிகள் பிரித்து வைக்கப்படுவது குறித்துக் கேட்டபோது, “அங்கு சாதிரீதியாகப் பிரித்து வைப்பதில்லை. இரண்டு குழுக்களுக்கு இடையில் சண்டை இருந்தால் அவர்களை மட்டுமே பிரித்து வைக்கிறோம்” என்கிறார்.
ஒரே அறையில் அடைத்து வைக்கும்போது, மோதல் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாகக் கூறிய கனகராஜ், “ஒரே சாதி, மதம் என யாராக இருந்தாலும் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டால் பிரித்து வைப்போம். மற்றபடி, வேறு எந்தப் பாகுபாடுகளும் அங்கே இல்லை” என்றார்.
பாளையங்கோட்டை சிறைத்துறை டி.ஐ.ஜி செந்தாமரைக்கண்ணனிடம் பேசியபோது, “அலுவல் வேலையில் இருப்பதால் தற்போது இதுகுறித்துப் பேச இயலாது” என மறுத்துவிட்டார்.
தமிழ்நாடு சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசியபோது, “கூட்டங்களில் இருப்பதால் பிறகு பேசுவார்” என அவரது உதவியாளர் தெரிவித்தார். தற்போது பேச இயலாது” என அவரது உதவியாளர் தெரிவித்தார். அவர் கருத்து தெரிவிக்கும்பட்சத்தில், இந்தக் கட்டுரை புதுப்பிக்கப்படும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு