• Sun. Aug 10th, 2025

24×7 Live News

Apdin News

‘தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை ஒரு குப்பை’ – அன்புமணி காட்டமான விமர்சனம் | PMK leader Anbumani Ramadoss slams dmk over tamilnadu education policy

Byadmin

Aug 10, 2025


சென்னை: தமிழை கட்டாயப் பயிற்றுமொழியாக அறிவிக்காத எந்தக் கொள்கையும் குப்பைக் கொள்கை தான் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளாகத் தயாரிக்கப்பட்டு, ஓராண்டுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த மாநில கல்விக்கொள்கை ஒருவழியாக தூசுத் தட்டி வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கு புதிய வண்ணம் பூசியுள்ள மாநிலக் கல்விக் கொள்கை, 11 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து, எண்மக் கல்வி, காலநிலை மாற்றக் கல்வி போன்ற சில திட்டங்களை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த எந்தத் திட்டமும் அறிவிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசு 2020 ஆம் ஆண்டில் வெளியிட்டதேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழ்நாட்டில் புதிய மாநிலக் கல்விக் கொள்கை தயாரித்து வெளியிடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தாலும் கூட, அதன் மீது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசர் டி.முருகேசன் தலைமையில் கல்விக் கொள்கை வகுப்புக் குழு அமைக்கப்பட்டிருந்தாலும் கூட, அதில் இடம் பெற்றிருந்த கல்வியாளர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படவில்லை என்றும், அதிகாரிகள் நிலையிலிருந்து திணிக்கப்பட்ட ஒரு செயல்திட்டத்தையே மாநிலக் கொள்கையாக அளிக்க வேண்டும் என்று அழுத்தம் தரப்பட்டதாகவும் குழுவில் இடம்பெற்றிருந்த ஜவஹர்நேசன் போன்ற கல்வியாளர்கள் குற்றச்சாட்டியிருந்ததனர். இது அப்போதே அதிர்வுகளை ஏற்படுத்தியது.

நீதியரசர் டி.முருகேசன் தலைமையிலான குழு அதன் வரைவு அறிக்கையை கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்தது. அதைத்தொடர்ந்து அந்த வரைவு அறிக்கையை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டு, கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளைக் கேட்டுப் பெற்று அதனடிப்படையில் வரைவு அறிக்கையில் திருத்தங்கள் செய்யப்பட்டு இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஓராண்டுக்கும் மேலாக வரைவு அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசு உறங்கிக் கொண்டிருந்தது.

மாநிலக் கல்விக் கொள்கையை தமிழக அரசு வெளியிடாதது ஏன்? என்று பாட்டாளி மக்கள் கட்சி பல முறை வலியுறுத்தியதைத் தொடர்ந்து, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கல்விக் கொள்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வரைவு அறிக்கையின் மீது கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் கருத்து கேட்காத தமிழக அரசு, தன்னிச்சையாக வரைவு அறிக்கையை இறுதி செய்திருக்கிறது. மாநிலக் கல்விக் கொள்கையில் அது அப்பட்டமாகத் தெரிகிறது. அதன் ஆங்கில வடிவத்திற்கும்,, தமிழ் வடிவத்திற்கும் ஆயிரமாயிரம் முரண்பாடுகள் உள்ளன.

இவை அனைத்திற்கும் மேலாக தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியை மேம்படுத்த, அத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல், அத்துறைக்கு இப்போது மிக ஒதுக்கப்பட்டுள்ள நிதி அதிகம் என்று கூறப்பட்டிருப்பதிலிருந்தே, மாநிலக் கல்விக் கொள்கையின் நோக்கம் கல்வித்தரத்தை உயர்த்துவது அல்ல; மாறாக, திராவிட மாடல் அரசின் அரைகுறை செயல்பாடுகளை புகழ்வது தான் என்பது தெளிவாகிறது. இதிலேயே கல்விக்கொள்கை தோற்றுவிட்டது.

மாநிலக் கல்விக் கொள்கையில் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது பள்ளிக்கல்வியில் தமிழ்க் கட்டாய பயிற்றுமொழியாக்கப்படுமா? 2006 ஆம் ஆண்டின் கட்டாயத் தமிழ் மொழிப் பாடச் சட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுமா? என்பது தான். இந்த இரு எதிர்பார்ப்புகளுமே ஏமாற்றத்தைத் தான் கொடுத்திருக்கின்றன. மாநிலக் கல்விக் கொள்கையின் எந்தப் பக்கத்திலும் தமிழ்க் கட்டாயப் பாடம் என்ற அறிவிப்பு இடம்பெற வில்லை.

நீதியரசர் டி.முருகேசன் தலைமையிலான குழு பல இடங்களில் கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்திய போது, அதில் பங்கேற்றவர்கள் 12&ஆம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப்பாடமாக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினார்கள். ஆனால், அந்தக் கருத்துகளை சற்றும் மதிக்காமல், தமிழைக் கட்டாயப் பயிற்று மொழியாக அறிவிக்க திமுக அரசு தவறி விட்டது. இது தமிழுக்கு திமுக இழைத்த துரோகமாகும்.

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப்பாடமாக்கும் நோக்கத்துடன் கடந்த 2006 ஆம் ஆண்டில் தமிழ்க் கட்டாயப் பாடச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், சட்டம் கொண்டுவரப்பட்டு 19 ஆண்டுகள் ஆகியும் நடப்பாண்டில் கூட பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்க் கட்டாயப்பாடமாக்கப்பட வில்லை.

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இரு ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், அதை விசாரணைக்குக் கொண்டு வரவும், வழக்கில் சாதகமானத் தீர்ப்பைப் பெற்று தமிழை தமிழ்நாட்டின் கட்டாயப்பாடமாக்கவும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால், இந்தச் சட்டம் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், பிற கல்வி வாரியங்களின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கும் இச்சட்டம் நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் அப்பட்டமான பொய்யை மாநிலக் கல்விக் கொள்கை தெரிவித்திருக்கிறது. இது தமிழுக்கு திமுக அரசு செய்த இரண்டாவது துரோகமாகும். மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையில் கூட குறைந்தபட்சம் 5 ஆம் வகுப்பு வரையிலும், எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு முன்னுரிமை அடிப்படையிலும் தாய்மொழிவழிக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், தமிழால் ஆட்சிக்கு வந்த திமுகவின் ஆட்சியில் தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயப் பயிற்றுமொழியாக்கப்படவில்லை. பல பத்தாண்டுகளாக அன்னைத் தமிழுக்கு துரோகம் செய்து வரும் திமுகவுக்கு மொழிக்கொள்கை குறித்து பேசுவதற்கு கிஞ்சிற்றும் தகுதி கிடையாது.

தமிழ்நாட்டில் சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை மொத்த மாணவர்களில் 80 விழுக்காட்டிற்கும் கூடுதலான மாணவர்கள் அரசு பள்ளிகளிலும், மிகக்குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே தனியார் பள்ளிகளிலும் பயின்று வந்தனர். ஆனால், இப்போது மொத்தமுள்ள 37,554 அரசு பள்ளிகளில் 52.75 லட்சம் மாணவர்கள் மட்டுமே பயின்று வரும் நிலையில், அதைவிட அதிகமாக 12,970 தனியார் பள்ளிகளில் 63.42 லட்சம் மாணவர்கள் பயிலும் நிலை உருவாகியுள்ளது. அரசு பள்ளிகளில் கல்வித்தரம் சீரழிந்து வருகிறது.

பணம் இருந்தால் மட்டும் தான் தனியார் பள்ளிகளில் சேர்ந்து ஓரளவு தரமானக் கல்வியைக் கற்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையை மாற்றும் வகையில் புரட்சிகரமானதொரு மாநிலக் கல்விக் கொள்கையை தயாரிப்பதற்கு பதிலாக அரசு பள்ளிகளின் மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு திருப்பி விடும் கொள்கையை தமிழக அரசு தயாரித்திருக்கிறது. அரசு பள்ளிகள் மேலும் சீரழியவே இது வழிவகுக்கும்.

தாய்மொழியை ஊக்குவிக்காத, தாய்மொழி வழிக்கல்வியை ஊக்குவிக்காத அனைத்துக் கொள்கைகளும் குப்பைகள் தான். அந்த வகையில் தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையும் ஓர் குப்பைக் கொள்கைதான்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



By admin