தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று(டிசம்பர் 19) வெளியிடப்பட்டது.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியின்போது (எஸ்.ஐ.ஆர்) கணக்கீட்டுப் படிவத்தை நிரப்பிச் சமர்ப்பித்தவர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இறந்த வாக்காளர்கள், கண்டறிய இயலாதவர்கள், முகவரி மாற்றம், இரட்டை வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு பெயர்கள் தமிழ்நாடு முழுவதும் நீக்கப்பட்டுள்ளன.
இன்று பிற்பகல், அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள், மாவட்ட அளவிலான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.
அதன்படி, சென்னையில் 35.58% வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு முன்பு 40.04 லட்சம் வாக்காளர்கள் சென்னையில் இருந்த நிலையில், தற்போதைய வரைவுப் பட்டியலில் 25.79 லட்சம் பெயர்களே உள்ளன. மொத்தம் 14.25 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
கோவை, தஞ்சாவூர், திருவள்ளூரில் என்ன நிலவரம்?
கோவை மாவட்டத்தில் 6.50 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதோடு, 1,19,489 வாக்காளர்கள் உயிரிழந்துள்ளனர், 1,08,360 வாக்காளர்கள் முகவரி இல்லாதவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோலவே, விருதுநகர் மாவட்டத்தில், 1,89,964 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலின்படி விருதுநகர் மாவட்டத்தில் 14,36,521 வாக்காளர்கள் உள்ளனர்.
தஞ்சாவூர் வரைவுப் பட்டியலைப் பொருத்தவரை, 20,98,561 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர், 2.06 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவுப் பட்டியலில் மொத்தம் 6,19,777 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதில் தற்போது 29,62,449 வாக்காளர்களின் பெயர்கள் உள்ளன.
இதேபோல, ராணிப்பேட்டையில் 1,45,157 வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், நாமக்கல் மாவட்டத்தில் 1,93,706 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருப்பூர் மாவட்டத்தில் 23% பெயர்கள் நீக்கம்
தூத்துக்குடியில், வரைவு வாக்காளர் பட்டியலின்படி, 1,62,527 பேர் நீக்கப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப் பிறகான கணக்கின்படி, அம்மாவட்டத்தில் 13,28,158 வாக்காளர்கள் உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,39,587 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப் பிறகு 12,54,525 வாக்காளர்கள் பட்டியலில் இருப்பதாகவும், 1,39,587 பேர் நீக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில், 3,24,894 வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன. வரைவுப் பட்டியலில் தற்போது 16,09,553 பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
திருப்பூர் மாவட்டத்தில், 23% பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஆட்சியர் மணிஷ் நாரணவரே வெளியிட்ட வரைவுப் பட்டியலின்படி, தற்போது 5,63,785 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பட்டியலில் 18,81,144 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
மதுரையில், 23,69,631 வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மொத்தம், 3.80 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
தருமபுரி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 12,03,917 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில், 81,515 வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
தொடங்கியது எப்போது?
இந்தியாவில், தமிழ்நாடு உள்பட 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் நவம்பர் 4ஆம் தேதியன்று வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் தொடங்கின.
முதல் கட்டமாக கணக்கீட்டுப் படிவத்தை நிரப்பிச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 4 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
படக்குறிப்பு, கோப்புப் படம்
ஆனால், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் எஸ்.ஐ.ஆர் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து இரண்டு முறை இந்தக் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
இறுதியாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கான கணக்கீட்டுப் படிவம் சமர்ப்பிக்கும் பணிகள் தமிழ்நாட்டில் டிசம்பர் 14ஆம் தேதியுடன் நிறைவடைந்தன. இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிசம்பர் 19) வெளியிடப்படுகிறது.
தமிழ்நாட்டில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 75,035-ஆக அதிகரிக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சம் 1,200 வாக்காளர்கள் என்ற கணக்கில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டில் முன்பு சுமார் 6.36 கோடி வாக்காளர்கள்
இதற்கு முன்பாக, தமிழ்நாட்டில் 2002-2005 காலகட்டத்தில் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மாநிலம் முழுவதுமாக நடைபெறும்.
இந்தக் காலகட்டத்தில் அனைத்து வாக்காளர்களும் தங்களைப் பற்றிய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் சுமார் 6.36 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.