• Fri. Jun 20th, 2025

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக இருந்த பாமக இந்த நிலைக்கு வந்தது ஏன்?

Byadmin

Jun 20, 2025


ராமதாஸ், அன்புமணி ராமதாஸ்

பட மூலாதாரம், @draramadoss/x

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையிலான மோதலால் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. ஆனால், பா.ம.க. 1990களின் தொடக்கத்தில் இருந்து தமிழ்நாட்டு அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக இருந்து வருகிறது. தற்போது உட்கட்சிப் பூசலை எதிர்கொண்டிருக்கும் பா.ம.க. தமிழக அரசியலில் முக்கியக் கட்சியாக நிலைபெற்றது எப்படி?

கடந்த 1991ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பல விதங்களில் தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைச் சுட்டிக்காட்டுவதாக அமைந்த தேர்தல். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவின் தலைமையை அ.தி.மு.க. தொண்டர்கள் கிட்டத்தட்ட முழுமையாக ஏற்றுக்கொண்டார்கள் என்பதை இந்தத் தேர்தல்தான் சுட்டிக்காட்டியது. அதேபோல, புதிதாகத் தொடங்கப்பட்டிருந்த பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ்நாட்டு அரசியலில் பல பத்தாண்டுகளுக்கு நீடிக்கப் போகும் கட்சி என்பதையும் இந்தத் தேர்தல் முடிவுகள்தான் சுட்டிக்காட்டின.

இட ஒதுக்கீட்டுக்காக 1980களின் இறுதியில் மிகப்பெரிய போராட்டங்களை நடத்திய வன்னியர் சங்கம், 1989இல் பாட்டாளி மக்கள் கட்சியாக மாறியது. அதைத் தொடர்ந்து 1991ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலில் எந்தப் பெரிய கட்சிகளுடனும் கூட்டணி அமைக்காமல் பா.ம.க போட்டியிட்டது. இந்தத் தேர்தலில், அக்கட்சியைச் சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும், 12 சட்டமன்றத் தொகுதிகளில் பாமக இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தது. அதோடு, ஆறு சதவிகித வாக்குகளையும் பெற்றிருந்தது. வெற்றி பெற்ற பண்ருட்டி ராமச்சந்திரனை, பா.ம.கவினர் யானை மீது அமர்த்தி சட்டமன்றத்திற்கு அழைத்து வந்தார்கள்.

இதற்குப் பிறகு, பாட்டாளி மக்கள் கட்சிக்குத் தொடர்ச்சியாக ஏறுமுகம்தான். இதற்கு அடுத்து வந்த 1996ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையிலான திவாரி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து 116 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க. ஆண்டிமடம், எடப்பாடி, தாரமங்கலம், பென்னாகரம் ஆகிய நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றதோடு ஏழு தொகுதிகளில் இரண்டாவது இடத்தையும் பிடித்தது.

By admin