• Sat. May 31st, 2025

24×7 Live News

Apdin News

தமிழ்மொழியின் மேம்பாட்டுக்காக ‘அறிஞர்கள் அவையம்’ கலந்துரையாடல் திட்டம்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தார் | Arignargal Avayam discussion project for the development of Tamil language

Byadmin

May 30, 2025


சென்னை: தமிழ்மொழியின் மேம்பாட்டுக்காக ஒவ்வொரு மாதமும் தமிழ் அறிஞர்கள் கலந்துரையாடும் ‘அறிஞர்கள் அவையம்’ என்ற புதிய திட்டத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று தொடங்கிவைத்தார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் ‘அறிஞர்கள் அவையம்’ நிகழ்வின் தொடக்கவிழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு, ‘அறிஞர்கள் அவையம்’ திட்டத்தின் பிரத்யேக இலச்சினையை அறிமுகப்படுத்தி திட்டத்தை தொடங்கிவைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தமிழ் மொழி மற்றும் அதன் சிறப்புகளை அனைத்து துறைகளிலும் உலக அளவில் கொண்டு செல்லும் வகையில் வல்லுநர்களின் கருத்துகளை பெற்று திட்டங்களாக நிறைவேற்ற உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒவ்வொரு மாதமும் கலந்தாய்வு கூட்டம் ‘அறிஞர்களின் அவையம்’ என்ற திட்டத்தின் வழியாக நடத்தப்படும் என்று, சட்டப் பேரவையில் தமிழ்வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு ஒரே மாதத்தில் செயல்வடிவம் பெற்றுள்ளது.

தமிழ் அறிஞர்களின் அனுபவங்களை ஒன்றுதிரட்டி தமிழை நிலைபெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முயற்சியை எடுத்துள்ளோம். இன்றைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உலகில் தாய்மொழி பற்று குறைந்துவிடுமோ என்ற ஏக்கம் நிலவுகிறது. இந்தச் சூழலில் தமிழ் உணர்வு மேலும் நிலைபெற வேண்டும் என்ற தமிழக முதல்வரின் நோக்கத்தை தமிழ் அறிஞர்கள் கலந்தாய்வு திட்டம் நிறைவேற்றும். இவ்வாறு அவர் பேசினார்.

உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையுரை ஆற்றிப் பேசும்போது, “எங்கள் நிறுவனம் சார்பில் அறிஞர்கள் அவையம், தொல்காப்பியர் சுழலரங்கம் ஆகிய 2 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அறிஞர்கள் அவையம் திட்டத்தில் மாதம் ஒரு நிகழ்வு என மொத்தம் 12 நிகழ்வுகள் நடத்தப்படும். வெறுமனோ பேசினோம், கலைந்தோம் என்றில்லாமல் நடைமுறை சார்ந்த செயல்திட்டமாக இந்நிகழ்ச்சி அமையும். ஒவ்வொரு நிகழ்வின் முடிவிலும் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டும் குழுக்கள் அமைக்கப்படும். இன்றைய செயற்கை நுணணறிவு உலகில் தமிழ்மொழியை எவ்வாறு அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லலாம்? என்பது குறித்து ஆராயப்படும்” என்றார்.

இந்த திட்டத்தின் தொடக்க நிகழ்வாக ‘தமிழ் அகராதியியல்’ என்ற தலைப்பில் உரையாடல் நடைபெற்றது. இதில் தமிழறிஞர்கள், வல்லுநர்கள், பேராசிரியர்கள், தங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் எடுத்துரைத்தனர். மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதித்துறையின் செயலரும், தமிழ் இணையக்கல்விக் கழகத்தின் தலைவருமான த.உதயசந்திரன் நிறைவுரை ஆற்றினார்.



By admin