• Mon. Jun 2nd, 2025

24×7 Live News

Apdin News

தமிழ் அகதிகள் விடயத்தில் அநுர அரசு இரட்டை வேடம்! – சுமந்திரன் குற்றச்சாட்டு

Byadmin

May 30, 2025


“தமிழ்நாட்டில் இருந்து முறைப்படி தாயகம் திரும்புபவர்களையும் சிறையில் தள்ளுவதன் மூலம் தமிழர்கள் நாட்டுக்குள் வரக்கூடாது என அநுர அரசு விரும்புகின்றதா.?”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பிய 75 வயது முதியவர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையில் இடம்பெற்ற போரின் காரணமாக உயிரைக் காப்பதற்காகப் படகுகள் மூலம் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ள ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தாயக உறவுகள் தொடர்ந்தும் பெரும் வேதனையின் மத்தியில் இரண்டாம் தரப் பிரஜைகள் போன்று தவிக்கின்றனர். இவர்களில் பல ஆயிரம் பேர் தாயகம் வரவும் தயாராகவுள்ளனர்.

இவ்வாறு காத்திருப்போரை நாடு திரும்புமாறும் சகல ஏற்பாடும் செய்து தரப்படும் எனவும் தெரிவிக்கும் அரசு, முறைப்படி சகல ஆவணங்களையும் பெற்று வருபவர்களையும் பொலிஸார் மூலம் வழக்குப் பதிவு செய்து சிறையில் தள்ளுவதன் மூலம் எஞ்சியோரை அச்சுறுத்துகின்றது.

ஏனெனில் 75 வயது முதியவரையே சிறையில் தள்ளும் இந்த அரசு இளையோரை என்ன பாடுபடுத்துமோ அல்லது பெண்களுக்கு என்ன நெருக்கடியோ என நியாயமான ஐயம் எழும். இதன் மூலம் வடக்கு, கிழக்கில் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்து விடக்கூடாது என்பதில் அரசு குறியாக உள்ளமை வெளிப்படையாகவே தெரிகின்றது.

எனவே, இலங்கை அகதிகள்  விடயத்தில்  யு.என்.எச்.சி.ஆர். மற்றும் இந்திய அரசு மௌனம் காக்கக் கூடாது. அநுர அரசின் இரட்டை வேடத்தைப் புரிந்துகொண்டு சகல விதமான அழுத்தங்களையும் பிரயோகித்து தாயகம் திரும்ப எண்ணும் அகதிகளுக்குத் தாய் நாட்டில் உள்ள நடமாடும் சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும்.” – என்றார்.

By admin