0
தனது ஓவியங்களின் வழியாக ஈழ விடுதலைக்கு பங்களிப்புச் செய்த தமிழ்நாட்டு ஓவியர் மருது அவர்களை அன்று தேசிய தலைவர் அவர்கள் சந்தித்த வரலாறு என்றும் பெருமைக்கும் நெகிழ்வுக்கும் உரியது என்று ஈழத்தின் எழுத்தாளர் தீபச்செல்வன் தெரிவித்தார்.
இன்று ஈழத் தமிழர்கள் தங்கள் கலைப் பயணத்தையும் தீர்வுக்கும் அமைதிக்குமான பயணத்தையும் ஈழம், தமிழ்நாடு, புலம்பெயர் தேசம் என்ற மூன்று தளங்களில் முன்னெடுக்க வேண்டும் என்றும் அதற்கு இந்த நிகழ்வு தக்க சான்றாக நடைபெறுகிறது என்றும் தீபச்செல்வன் குறிப்பிட்டார்.
ஈழ விடுதலையை மிகவும் நேசித்த ஓவியர் மருது, ஈழ மண்ணின் நடந்த பல கதைகளுக்கு ஓவியங்கள் வரைந்ததடன் நெடுங்காலமாக ஈழத்தின் பல வெளியீடுகளுக்கும் ஓவியங்களை வரைந்து எம் பயணத்தில் இணைந்து செயற்பட்டவர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய கலை இலக்கிய பேரவை தாய் வீடு இதழ் மற்றும் கிளநொச்சி மாவட்ட விவாதிகள் கழகம் இணைந்த ஏற்பாட்டில் தமிழ்நாட்டு ஓவியர்களான மருது மற்றும் ஜீவாவுடனான சந்திப்பும் பொன்னையா விவேகானந்தனின் நான்கு நூல்களின் அறிமுக நிகழ்வும் கடந்த 18.02.2026ஆம் திகதியன்று கிளிநொச்சியில் வெகுசிறப்பாக இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ்நாடு எம் ஜி ஆர் திரைப்படக் கல்லூரியின் முதல்வரும் பிரபல திரைப்படக் கலை இயக்குனரும் ஓவியருமான ஓவியர் மருது கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அத்துடன் தமிழக பிரபல ஓவியர் ஜீவா நிகழ்வில் உரையாற்றியதுடன் பொன்னையா விவேகானந்தனின் நான்கு நூல்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.
பொன்னையா விவகானந்தனின் நாடகங்கள் குறித்து திருநகரூர் ஜெகாவும் அறிவோம் தமிழ் பண்பாடு என்ற நூல் குறித்து யாழ் பல்கலைக்கழக மாணவன் பாலா சயந்தனும் தமிழ் மொழிக் கல்வி வழிகாட்டலும் எடுத்துக்காட்டுகளும் என்ற நூல் பற்றி எழுத்தாளர் பெருமாள் கணேசனும் பெயர்வு தமிழ் சமூகம் – இருப்பும் இடர்களும் என்ற நூல் குறித்து கலாநிதி சு. குணேஸ்வரனும் அறிமுக உரைகளை ஆற்றினார்
நிகழ்வில் கடைசி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேிமாலிகிதன் கிளிநொச்சி மாவட்ட விவாதிகள் கழகத்தின் தலைவர் நோவா பிரதீப் ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினர்.
நிகழ்வில் முன்னாள் போராளிகள், பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள், எழுத்தாளர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
