போர்க் காலத்தில் உயிரைக் காக்க இலங்கையில் இருந்து தமிழகத்துக்குத் தப்பிச் சென்ற முதியவர், சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறியமைக்காக ஜூன் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
1987 ஆம் ஆண்டு தாயகத்தில் இருந்து உயிர் தப்பி தமிழகத்துக்கு அகதியாகச் சென்றவர் முதுமையில் நாடு திரும்பியபோது சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறிய குற்றச்சாட்டின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
சின்னையா சிவலோகநாதன் எனும் யாழ். ஏழாலையைச் சேர்ந்த 75 வயது முதியவரே இவ்வாறு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் முற்படுத்தப்பட்ட சந்தேகநபர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் 5 சட்டத்தரணிகள் ஆஜராகினர்.
இதன்போது 1997 ஆம் ஆண்டு ஏழாலையில் இருந்து மன்னார் சென்று அங்கிருந்து 12 ஆயிரம் ரூபா படகுக்குச் செலுத்தி சட்டவிரோதமாக கடல் வழியாகவே சந்தேகநபர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார்.
இருந்தபோதும் இந்தக் காலத்தில் சட்டபூர்வமாகப் பயணிக்கும் வாய்ப்பும் இருந்தமையால் இவர் எதற்காகச் சட்டவிரோதமாக பயணித்தார் என்பது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதனால் சந்தேகநபரைப் பிணையில் விடுவிக்காது விளக்கமறியலில் வைக்க வேண்டும் எனக் கேட்டு குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தின் 45/01 கீழ் குற்றம் சாட்டப்படுவதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்,
“இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாக உயிரைக் காக்கும் நோக்கில் இலட்சக்கணக்கானோர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றபோது இந்த நபர் 1987 ஆம் ஆண்டு தமிழகத்துக்குச் தப்பிச் சென்றார்.
இவர் தமிழகத்தின் திருவண்ணாமலைப் பகுதியில் கண்ணகிபுரம் இலங்கை அகதிகள் முகாமில் தங்கி வாழ்ந்து தற்போது ஏழாலையில் வசிக்கும் தனது மகனுடன் முதுமைக் காலத்தில் வாழ்வதற்காக உரிய முறைகளின் கீழ் விண்ணப்பித்து சட்டபூர்வமாக நாடு திரும்பினார்.
முகாமில் அகதியாக வாழ்ந்தார் என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகம் வழங்கிய (யு.என்.எச்.சி.ஆர்.) பதிவுச் சான்றிதழ், இலங்கை திரும்ப தமிழ்நாடு பொலிஸுக்குத் செய்த விண்ணப்பம், அதற்கு தமிழ்நாடு பொலிஸார் அவர் எந்த குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என வழங்கிய சான்றிதழ்களுடன், சென்னையில் உள்ள இலங்கைத் தூத்கத்துக்கு விண்ணப்பித்து இலங்கை திரும்புவதற்காகப் பெற்றுக்கொண்ட பிரயாண அனுமதி ஆகியவற்றைச் சரி பார்த்து ஐ.நா. அமைப்பே இலவச விமானச் சிட்டையையும் வழங்கியது. அவற்றின் பிரதிகள் மன்றுக்குச் சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே, குற்றஞ்சாட்டப்படுபவரை முழுமையாக விடுவிக்க வேண்டும்.
இலங்கை அகதிகள் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் தமிழகத்தில் இருப்பது உலகின் சகல நாடுகளுக்கும் தெரியும். ஆனால் இலங்கைப் பொலிஸாருக்குத் தெரியாமல் இருப்பது வேடிக்கையானது. அகதி என்றால் அவர் சொல்லாமல்தான் போவார். அவரை அகதியாக ஏற்றுக்கொண்டால் அவர் பயணித்தமை குற்றமாகாது. அது மட்டுமல்ல ஒரு குற்றவியல் நடவடிக்கையாக இருந்தால் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்குள் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும். இங்கே 30 வருடங்கள் கடந்துவிட்டன.
இதேநேரம் இலங்கையில் இருந்து அகிகளாகச் சென்றவர்கள் நாடு திரும்ப வேண்டும் என அரசு உத்தியோகபூர்வமாக அழைக்கின்றது. ஆனால், திரும்பியவர்கள் கைது செய்யப்படுகின்றனர். இதற்குக் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டி வரும். தப்ப முடியாது.
இதேநேரம் குடிவரவு – குடியகள்வுத் திணைக்களத்தின் சட்டப் பிரிவு 45/01 இன் கீழ் வழக்குத் தாக்கல் செய்தால் நீதிவான் 47/ஏ பிரிவின் கீழ் பிணை வழங்க முடியும். அதனால் முழுமையாக விடுவிக்க முடியாத பட்சத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவரைப் பிணையில் விடுவிக்க வேண்டும்.” – என்றார்.
இவற்றை ஆராய்ந்த மல்லாகம் நீதிவான் ஜே.சுபராஜினி சந்தேகநபரை எதிர்வரும் ஜூன் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
The post தாயகம் திரும்பிய 75 வயது முதியவர் சிறையில் அடைப்பு! appeared first on Vanakkam London.